Tuesday, January 31, 2012

ஊடகங்களின் "முன்ஜென்ம' வியாபாரம் - இறைவி


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிடுவதென்பது இன்றைய நாளில் தவிர்க்கவே முடியாத ஒரு செயலாக ஆகிவிட்டது. அதுவும், பெண்கள் என்றால் அவர்கள் அலுவலகம் செல்பவர்களாக இருந்தாலும், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்களில் நேரத்தை வீணடிப்பதில் சிறிதுகூட கவலைப்படுவதோ, வெட்கப்படுவதோ இல்லை. பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களில் பலரும் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
எந்த அளவிற்கு இந்த நிலைமை சென்று கொண்டிருக்கிறது என்றால், ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள தலைமை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களை பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளின்போது வீட்டில் உள்ள கேபிள் இணைப்புகளை நீக்கவும், தொடர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் என்று சொல்லி கேட்டுக்கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டது.
சரி, தொடர்களின் பிடியில் மாட்டக்கூடாது என்ற உறுதியுடன் அரசியல் விவாதங்கள், மருத்துவர்களின் ஆலோசனைகள், நாட்டு நடப்புச் செய்திகள், அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்றால், அவற்றிலும் கூடுமானவரை மூடநம்பிக்கைகளைத் திணித்து, ஆசைகளை விதைத்து, அருவெறுப்புகளை வளர்க்கும் வண்ணம்தான் நிகழ்ச்சிகள் இருக்கின்றன. தொடர்களின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்றால், குப்புறத்தள்ளிய குதிரை, குழியையும் பறித்தது போல, மடமைச் சேற்றில் தள்ளுவதற்கு வரிசை கட்டி நிற்கின்றன நிகழ்ச்சிகள். அந்த வரிசையில், முன்ஜென்மம் என்ற பெயருடன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் கூத்து மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியது.
நடிகர் அஜய் ரத்தினத்தின் முன் உரையுடன் தொடங்கிய அந்த நிகழ்ச்சி பைபிள், குரான், கீதை போன்றவற்றைத் துணைக்கழைத்தது மட்டுமன்றி அறிவியல் ஏற்றுக்கொண்ட ஹிப்னாடிசம் மூலமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப் பெறுகிறது என்றவுடன் அதனைப் பார்க்கும் ஆர்வம் இயல்பாகவே உந்த ஆரம்பிக்கிறது.
சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் போஸ் வெங்கட்டும், அவரது அக்கா வளர்மதியும் அக்கா மகனும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் தன்னை ஷீர்டி சாய்பாபாவின் பக்தன் என்றும், தாம் சரியான வாய்ப்புகளை நடிப்புத் துறையில் பெறாத பொழுதெல்லாம் தனது அக்கா சாமியாடி அருள்வாக்குச் சொல்லி தமக்கு நம்பிக்கை அளித்ததாகவும், அரசியலில் ஒரு பெரிய தலைவரின் கீழ் பணியாற்றும் மிகச் சிறப்பான வாய்ப்பும், அவர் கதை வசனத்தில் நடிக்கும் வாய்ப்பும் தமக்கு ஷீர்டி சாய்பாபாவின் அருளால் கிடைத்தது என்றும் புளகாங்கிதமடைந்த அவர் தனது குணங்களாக எல்லோரையும் நேசிப்பவன் என்றும், முன்கோபம் உடையவன் என்றும், சிறுவயதில் திருவிழாகடை ஒன்றில் கைக்கடிகாரம் ஒன்றைத் திருடிவிட்டு பின் பயந்து அதனைத் தூக்கி எறிந்ததாகவும், இசுலாமிய நண்பர்கள் பலர் உள்ளதாகவும், பலருக்கு நன்றிக்கடன் பட்டவராகவும் தம்மை அறிமுகம் செய்து கொண்டார்.
அவரை ஹிப்னடைஸ் செய்யும் மருத்துவராக வந்த வேதமாலிகா அவர் பங்குக்கு முன்ஜென்மம் என்பது கதையோ அல்லது கற்பனையோ இல்லை. இதன் தாய்வீடு இந்தியா என்பது நமக்கெல்லாம் மிகவும் பெருமையளிப்பதாகவும், ஆதிசங்கரரின் புனரபி ஜெனனம் முதல் திருவள்ளுவரின் எழுபிறப்பின் தீயவை தீண்டா வரை அனைத்தையும் துணைக்கழைத்து அமெரிக்காவில் இதனை நிரூபித்துள்ளார்கள் என்று நீண்ட புளுகு உரையுடன் போஸ் வெங்கட்டை நினைவுத் தூக்க (ஹிப்னாடிசம்) நிலைக்கு அழைத்துச் சென்றார்.
முதலில் இந்த ஜென்மத்தில் (0-வயது) அம்மா வயிற்றில் அவர் இருந்த நிலைக்கு அழைத்துச் சென்றதாக கூறி - அவரிடம் நீங்கள் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்கிறார். போஸ் வெங்கட் இல்லை என்றும் மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூறுகிறார்.
பிறகு, அதிலிருந்து முந்தைய ஜென்மத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூற போஸ் தான் ஒரு போர்வீரனாக சண்டையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். உடனே மருத்துவர் எந்த நாட்டுடன் சண்டை எனக் கேட்க அவர் வேறு நாட்டுடனல்ல, ஜாதிச் சண்டை என்கிறார். ஓ ஜாதிச் சண்டையா எந்த நாடு எனக் கேட்க நான் சீனாவில் போர்வீரனாக இருக்கிறேன் என்கிறார். பின் என்னவாயிற்று என்று கேட்க நான் இறந்துபோய்விட்டேன் என நினைக்கிறேன். வெள்ளை தாடி, பூமாலை சின்னப் பசங்க எல்லாம் குதித்து ஆடுவதுபோல் தெரிகிறது என்கிறார். ஓ நீங்கள் இறந்துவிட்டீர்கள். என்ன வயது என்று தெரிகிறதா எனக் கேட்க வயது 40-45க்குள் இருக்குமென நினைக்கிறேன் என்கிறார். அதற்குப் பிறகு மருத்துவர் அதற்கு முந்தைய ஜென்மத்திற்குச் செல்வதாகக் கூறுகிறார். அதில் பச்சை வயல்கள் நிரம்பிய ஊரில் மதகுருவாக மசூதி ஒன்றில் இருப்பதாகக் கூறுகிறார். வயது என்ன என்று கேட்க 70-க்கு மேல் என்கிறார். எந்த நாடு என்று மருத்துவர் கேட்க மலைகள் நிறைய இருக்கிறது. ஈரான் அல்லது ஈராக்காக இருக்கலாம் என்கிறார். அந்த வாழ்க்கையில் மிகவும் திருப்தியாக இருந்து இறந்ததாகக் கூறுகிறார்.
அடுத்து வேறொரு ஜென்மத்திற்குள் செல்ல அதிலும் முஸ்லிமாக இருப்பதாகவும் மலைப்பகுதியில் உள்ள தாஜ்மகால் போன்ற அமைப்பில் ஒரு இந்து கோவில் ஒன்றில் திருடச் செல்வதாகவும், ஆனால் அங்கு எதையும் திருடி வரவில்லை என்றும் கூறுகிறார்.
முடிவாக மருத்துவர் அவர் கடந்த எந்தப் பிறவியிலும் திருமணம் ஆகாதவராகவே இருந்திருக்கிறார் என்றும் அப்படி இருந்தது வாழ்க்கை முழுமையடைந்ததாகாது என்றும், எனவே அப்பா, அம்மா, அன்பான அக்கா, மனைவி குழந்தையுடன் வாழ்ந்து, விட்டுப்போன கடமைகளை முடிக்கவே இந்த ஜென்மத்தில் அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற்றிருப்பதாகவும், அனைவருக்கும் உதவும் நல்ல குணமுள்ளவராக இருப்பதாகவும் கூறி நிகழ்ச்சியை முடிக்கிறார்.
இந்த ஒரு நிகழ்ச்சியை நாம் முழுமையாகக் கூறக் காரணம், சீனாவின் போர் வீரனாக ஜாதிச் சண்டையில்(!?) ஈடுபட்டு இறந்ததையும், பசுமையான ஊராக(!?) ஈரானிலோ அல்லது ஈராக்கிலோ மதகுருவாக இருந்ததையும், தாஜ்மகால் போன்ற மொகலாய கட்டட அமைப்பில் இந்து கோவில்(!?) ஒன்றையும் பார்த்ததாகக் கூறுவதை நம்புவோம் என்று நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் அனைவரையும் வடிகட்டிய முட்டாளாக ஆக்கும் எண்ணத்துடன் செயல்படும் ஹிப்னாடிசம் செய்யும் மருத்துவரையும், நிகழ்ச்சியை வழங்கும் நடிகரையும் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்வதற்காகத்தான்.
இதே போன்றுதான் அடுத்த வாரத்தில் வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிஷா, ஆண் மயிலாக ஒரு ஜென்மத்திலும், பசுமாடாக ஒன்றிலும், கேரளப் பெண்ணாக பாம்பு கடித்து இறப்பவராக ஒன்றிலும் இருந்ததாக கதையளக்கப்பட்டது. இவரும் இந்த ஜென்மத்தில் அம்மா வயிற்றில் இருந்தபோது மகிழ்ச்சியாக இல்லை என்றார். வாரத்திற்கு இருமுறையாவது சென்னை கபாலீசுவரர் கோவிலுக்குச் செல்லவில்லையென்றால் தனக்கு நிம்மதியாக இருக்காது. அந்த அளவிற்குப் பக்தி உள்ளவள் என்று தம் பெருமையைக் கூறினார்.
தொலைக்காட்சித் தொடர்களில் பார்ப்பனப் பெண்மணியாக நடித்து வரும் லட்சுமி என்ற நடிகை ஒரு ஜென்மத்தில் மைசூர் அரண்மனை நாட்டியக்காரியாகவும், அடுத்த ஒன்றில் காஞ்சிபுரத்தில் சிங்கப்பெருமாள்கோவில் அருகே இருக்கும் அக்கிரஹாரத்தில் உலாவும் ஆவியாகவும், திருப்பதி மடத்து(!) தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சியாக ஒன்றிலும், மற்றொன்றில் பார்ப்பனக் குடும்பத்தில் காயத்ரி என்ற பெயரில் இளம்பெண்ணாக இருந்ததாகவும் தண்ணீரில் விழுந்து இறந்த தனக்கு எல்லாக் காரியங்களும் செய்ததாகவும் கூறினார். காஞ்சிபுரத்தில் மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாகக் கூறிய இவர் நினைவுத் தூக்கத்தின்போது காஞ்சிபுர கோவில் தெருக்களைச் சரியான முறையில் கூறி வேதம் புதிது படத்தில் வரும் கதையையும் சேர்த்துக் கதையளந்தார்.  அடுத்தடுத்த வாரங்களிலும் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து வரும் பாபிலோனா, தொலைக்காட்சித் தொடர் நடிகைகள் காவேரி, அபிதா போன்ற அனைவரையும் இந்த மாதிரியே பல ஜென்மங்களில் பிச்சைக்காரியாக, ராணியாக, புறாவாக என பலவிதமாக இருந்ததாகக் கூறி ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு மணிநேர வியாபாரத்தை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள். சாதாரண நிலையில் உள்ள பொதுமக்களில் யாரையாவது அழைத்து வந்து இந்த நிலைக்கு உட்படுத்த நினைக்காமல் நடிகர், நடிகையாகவே பார்த்து நடிக்க வைத்திருப்பதே இந்த நிகழ்ச்சியின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றது. அப்போதுதானே அடுத்து வருபவர்களுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று பயிற்சியளிக்க முடியும்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முன்னுரையுடன் மறுபிறப்பு பற்றி புத்த மதத்தில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டாக்டர் பிரைய்ன் வெய்ஸ் இப்படிச் செய்தார். பைபிளில் ஏசு இப்படிச் சொன்னார்; ஏதோ ஒரு நாட்டில் எட்கர் கேஸ் இப்படிக் குணப்படுத்தினார் என்று நிகழ்ச்சியைப்  பார்க்கும் மக்களை ஏதோ மருத்துவ முறைப்படிதான் நிகழ்ச்சியை நடத்திச்  செல்வதாக ஏமாற்றும் இந்தக் கயமையை நாம் எப்படி ஆதாரபூர்வமாக மறுப்பது? இப்படிப்பட்ட பேய், பில்லி, ஆவி, மறுபிறப்பு மூடநம்பிக்கைச் சவால்களை அறிவியல்பூர்வமாக எதிர்கொண்ட மனநல மருத்துவர் கோவூர் அவர்கள் தமது நூல்களில் இவற்றைத் தெளிவாக அம்பலப்படுத்துகிறார். டாக்டர் கோவூர் அவர்களின் வளரும் நாடுகளும் மடமை நம்பிக்கைகளும் என்ற கட்டுரையில் ஹிப்னாடிசம் (நினைவுத் தூக்கம்) மூலமாக இப்படிப்பட்ட கற்பனைக் கனவு காணும் உணர்வுகளை உந்திவிட முடியும். முற்பிறப்பில் நம்பிக்கையுள்ள ஓர் இந்து அல்லது பவுத்தரை இப்படி ஹிப்னாடைஸ் (மயங்க) செய்தால், அவர் உடனே தமது முந்திய பிறவி பற்றிக் கதையளக்கத் தொடங்குவார். சொர்க்கம் நரகம் இவற்றை நம்புகின்ற ஒரு கிறித்தவர் அல்லது ஒரு முஸ்லிம் இப்படி ஹிப்னாடிசத்துக்கு உள்ளாக்கப்பட்டால் அவர் சொர்க்கத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டால் உடனே அதைப்பற்றி வருணிக்கத் தொடங்கிவிடுவார். இப்படி ஓர் அரைமயக்க நிலையில் இருப்போரிடமிருந்து உண்மைகளை வரவழைப்பதாகச் சொல்வது முட்டாள்தனமாகும். மனோதத்துவ (உளவியல்) மருத்துவர்களுக்கு வேண்டுமானால் இது ஆராய்ச்சிக்கு உதவலாம் என்றும்,
படிப்பறிவில்லாத பாமரர்கள் தங்கள் அறியாமையால் மூடக்கற்பனை காணும் நோய்வாய்ப்பட்டு ஏதாவது சொன்னால், அவர்களுக்குப் பைத்தியக்காரர்கள் என்ற பெயரைச் சூட்டி மனநோய் மருத்துவ விடுதியில் சேர்த்து விடுகிறோம். ஆனால் படித்தவர்கள் இந்த நோயாளராகும்போது நிலைமை முற்றிலும் முரணாகிறது. சாதாரணப் பாமரப் பைத்தியத்தைவிட இவர்கள்தாம் சமுதாயத்துக்கு ஆபத்தானவர்கள், மானிட மனத்தூய்மையில் கலப்படும் செய்து கெடுப்பவர்கள்.
வேதியியல், ரசாயனம், தாவர இயல், விலங்கியல், பொறியியல், மருந்தியல், நிலநூல், வரலாறு, வான இயல் ஆகிய பல்வேறு அறிவியல் துறைகளைப்பற்றி ஆராயும் அறிவாளிகள் படைக்கின்ற நூல்கள் சிந்தனைக் கருவூலங்களாகத் திகழ்பவை. ஆனால் ஈசாப்புக் கதைகள், அராபிய இரவுக் கதைகள் (1001) ஒடிஸ்ஸி, இராமாயணம், பாரதம், குரான், பைபிள் போன்ற ஆபாசக் கற்பனைக் கதைகள் புராணிகர்களின் புளுகுமூட்டைகளாக விளங்குகின்றன.
மனிதனுடைய அறிவுபூர்வமான ஆக்கச் சிந்தனையின் விளைவாகத்தான் இன்றைய விஞ்ஞான விந்தைகளான அணுசக்தி, வானொலி, வானொளி, நிலவில் இறங்குதல், விண்கோள் செலுத்துதல், இருதய மாற்றுச் சிகிக்சை, இரத்தம் செலுத்துதல், செயற்கை மூச்சு (சுவாசம்) கொடுத்தல், சிறுநீரகம் பொருத்துதல் ஆகியவை சாத்தியமாயின. எந்த மதத்தையும் சார்ந்த பக்தி நூல்கள் எவையும் இம்மாபெரும் அற்புதங்களைக் கண்டுபிடிக்க எள்முனையும் உதவிடவில்லையே! என்று மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.
மேலும் மற்றொரு கட்டுரையில், வாழ்கின்ற மதங்களில் மிகப் பழைமை வாய்ந்த இந்து மதத்தில், எல்லா உயிர் வாழ்வனவும், அழிவில்லாத ஆத்மா படைத்தவை என்று போதிக்கப்படுகின்றது. ஆனால் மாறுபடாத யூத-_கிறித்தவ_இசுலாமிய மதங்களில், மனித ஆத்மா மட்டுமே அழிவற்றது என்று கூறப்படுகின்றது! 2000 ஆண்டுகட்கு முன் இருந்த புத்தர் இந்து மதத்தை எதிர்த்துப் புரட்சி செய்தவர்; இந்தியாவின் சிறந்த சமுதாய _ மதச் சீர்திருத்தவாதி; அவர் மனித ஆவிகூட நிலையானதல்ல என்று கூறிவிட்டார். இதுதான் இன்றைய அறிவியல் (விஞ்ஞானம்) கண்டுபிடிப்பும் ஆகும். ஆனால் பிற்காலத்தில் புத்த வேதங்களை எழுத வந்த சிலர், பித்தலாட்டமாகப் புத்தரின் அடிப்படைக் கொள்கைகளையே திரித்துக் கூறிவிட்டனர்! மனித மரணத்துக்குப்பின் அந்த ஆவி நிலைத்திருப்பதற்கு ஏதாவது காரணகாரிய விளக்கம் உள்ளதா? பார்க்கலாம் நாமே!
உயிர் என்பது என்னவெனில், மூச்சு (சுவாச) ஓட்டத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு சக்தியேயாகும். மூச்சின் (சுவாசத்தின்) மூலமாக குளுகோஸ், புரதம், கொழுப்பு ஆகிய சத்துகள் ஆற்றலாக மாற்றப்பட்டு பயன் உள்ளவை ஆகின்றன. ஒரு மெழுகுவர்த்தி எரிவதற்கு இதை ஒப்பிடலாம். மெழுகு உருகிவிடாமல், அல்லது எரிபொருளாக மாறாமல் இருக்குமானால், ஒரே மெழுகுவர்த்தியை எத்தனை தடவை வேண்டுமானாலும் கொளுத்தி, அணைத்து, பயன்படுத்த முடியும்! அதே போல, உயிர் போனபின் மனித உடல் அழுகித் தேய்ந்து குறைந்து மாய்ந்துபோகாமல் இருக்கக் கூடுமானால், அந்த உயிர் அல்லது ஆவியையே மீண்டும் செலுத்தி, மனிதன் சாகாமல் இருக்கச் செய்ய இயலும்.
உயிர் என்பது தங்கியிருக்க எப்போதுமே ஓர் உடல் தேவை! உடலை விட்டுப் பிரிந்து, அது எங்கேயும், எதிலேயும், தங்கமுடியாது! அதேபோல், மனம் என்பது தனியாக இயங்கக் கூடியதல்ல. அறிவியல் பரிசோதனைகளில், மனத்தைச் சார்ந்த உணர்வுகளான காதல், அன்பு, கோபம், வெறுப்பு, கொடுமை, இரக்கம் ஆகியவற்றுக்கு மூளையில் தொடர்புடைய தனித்தனி நரம்புகளை, மின் அதிர்வு செய்ததன் மூலம், உருவாக்கிக் காட்ட முடிந்தது! அதன் வாயிலாக என்ன புரிந்தது? மனித உடலில்தான் உயிர் தங்க முடியும்! அந்த உடலில் உயிர் தங்கி, உடலும் கெடாமலிருக்கும்போதுதான், மூளையிலுள்ள மனம் என்று நாம் அழைக்கும் செயலும் இருக்க முடியும்! உயிருக்கும் மனத்திற்கும் அப்பாற்பட்டு, ஆத்மா என்றோ, ஆவி என்றோ, ஏதும் கிடையாது! கிடையவே கிடையாது!! என்றும் கூறுகிறார்.
மனித ஆத்மா மட்டும்தான் அழியாதது என்று பிற மதங்களின் நம்பிக்கைப்படிப் பார்த்தால், வண்ணத்துப் பூச்சியாகவும், வண்டாகவும், புறாவாகவும் பிறந்தவர்களின் ஆத்மா எப்படி அழியாமல் இருக்கிறது?
எல்லா உயிர்களுக்கும் ஆத்மா உண்டெனில், செடி, கொடி, புழு, பூச்சி, பூஞ்சை, பாசி வகையறாக்களின் ஆத்மாக்கள் எல்லாம் எங்கே? அவற்றின் மறுசுழற்சிக்கு என்று என்ன விதிகள் இருக்கின்றன?
ஆ... ஊ... என்றால் ஆயிரம் விளக்கங்களைக் கேட்கும் விஜய் டி.வி. நடந்தது என்ன? குழு, விஜய் டி.வி. அரங்கத்துக்குள் நடப்பது என்ன? என்பதை வெளியே கொண்டுவர வேண்டாமா?
ஆக்கபூர்வமான விவாதங்கள் என்று அறியப்படும் நிகழ்ச்சிகளிலேயே அமானுஷ்யங்கள் என்று விவாதிக்கும்போது, உங்கள் அறிவியல் மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பேசுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. அப்படியென்றால் முட்டாள்தான் அங்கு பேச முடியுமா? பகுத்தறிவாளர்கள், அறிவியல் சிந்தனையாளர்கள் அத்தகைய நிகழ்ச்சிகளில் விளக்கமளிக்க முடியாத வண்ணம் இருட்டடிப்பு செய்யப்படும் அனுபவத்தைத் தொடர்ந்து பெற்று வருகிறார்களே! அப்படியென்றால் அவர்கள் விரும்புவது சுவாரஸ்யத்தை நீட்டித்துக் கிடைக்கும் வியாபாரத்தைத்தானே!
தொடர்கள் மூலமாக மட்டுமல்லாமல் இந்த மாதிரி உளவியல் மருத்துவர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் நடத்தப்பெறும் நிகழ்ச்சிகளும் நம் மூளையை மழுங்கடிக்கின்றன என்றால் அறுவை சிகிச்சைக் கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்வதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் முட்டாள், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னதில் எள்ளளவாவது பிசகு இருக்கிறதா? மக்களின் மடத்தனத்தைப் பயன்படுத்தி, அதை விரிவாக்கி விற்றுக் காசு பார்க்கும் இந்த மகாமகா அயோக்கியத்தனத்தைத்தான் அத்தனை ஊடகங்களும் செய்து வருகின்றன. இவற்றை அம்பலப்படுத்தி, மக்களைத் தெளிவுபெறச் செய்ய வேண்டியது நம் கடமை.

1 comment:

அதிரைக்காரன் said...

ம்! நீண்ட பதிவாக இருப்பதால் பலர் படிக்காமல் சென்றிருக்கக்கூடும்.இதே நிகழ்ச்சி குறித்த பதிவை நானும் பதிவு செய்துள்ளேன்.முடிந்தால் பார்வையிட்டு கருத்திடவும்http://www.blogger.com/img/blank.gif.

அப்புறம், இஸ்லாமியர்களுக்கு முன்ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை. இவ்வுலக வாழ்வுக்குப் பிறகு மீண்டும் மனிதனாகவே எழுப்பப்படுவோம் என்ற நம்பிக்கையே உண்டு.

சொர்க்கம், நரகம் குறித்த நம்பிக்கை மறுஜென்மத்தில் மட்டுமே என்பதே முஸ்லிம்களின் நம்பிக்கை. பிறமத நம்பிக்கைகள் குறித்து கருத்தில்லை.

மூடத்தனத்தை எதிர்க்கிறேன் என்று சகட்டுமேனிக்கு,அரைகுறை புரிதலுடன் இஸ்லாத்தையும் இங்கு குறிப்பிட்டிருப்பதால் இந்த விளக்கம்.பகுத்தறிவாளர்களுக்கு அதிகம் விளக்க வேண்டிய தேவை இல்லை என்பதால் இப்போதைக்கு இதுபோதும் என்று கருதுகிறேன்.

மாற்றுக் கருத்து,ஐயமிருந்தால் தயவு செய்து தயங்காமல் கேட்கவும்.

ஒரே கடவுளை கற்பிப்பவன் அறிஞன்;
ஒரே கடவுளை நம்புபவன் முஸ்லிம்;
ஒரே கடவுளை மறுப்பவன் பகுத்தறிவு இல்லாதாவன்.

நான் முஸ்லிம். நீங்கள்...?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...