Monday, October 17, 2011

தீபாவளி தத்துவமும்-இரகசியமும் மாணவர்கள் உரையாடல்

தீபாவளி தத்துவமும்-இரகசியமும் மாணவர்கள் உரையாடல் 

சித்திரபுத்திரன்

தீபாவளி பற்றி சித்திரபுத்திரன் எழுதியுள்ள ஆராய்ச்சி உரையாடலைக் கீழே தருகிறோம் பாமரர்களில் பல்லாயிரவர் உண்மை தெரிந்து வெறுத்துத் தள்ளியுள்ள தீபாவளியைப் படித்த கூட்டத்தார் கூடக் கொண்டாடுகிறார்களே! அதுதான் வெட்கக்கேடு சைவர்கள் என்பவர்கள்கூடக் கொண்டாடு கிறார்களே! அது இன்னும் பெரிய வெட்கக்கேடு. எல்லோருமே இதைப் பார்க்கட்டும் (ஆ-ர்).

டேவிஸ்: டேய், ராமானுஜம்... எங்கடா போகிறாய்?

ராமானுஜம்: எங்குமில்லை பிரின்ஸ் பாலைப் பார்த்து எனக்கு இரண்டு நாள் லீவ் கேட்கப் போகிறேன்.

டேவிஸ்: எதற்கு லீவு?

ராமா: 21ஆம் தேதி பண்டிகை லீவு, 22ஆம் தேதி சனிக்கிழமை 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  காலேஜ் இல்லை. இன்னும் ஒரு இரண்டு நாள் அதையொட்டி லீவு கிடைத்தால் ஊருக்குப் போய் 5 நாள் சாவகாசமாய் இருந்துவிட்டு வரலாம் என்று கருதி இன்னும் இரண்டு நாள் லீவு கேட்கிறேன்.

டேவிஸ்: என்ன பண்டிகை?

ராமா: தீபாவளிப் பண்டிகை

டேவிஸ்: தீபாவளி என்றால் அது ஒரு பண்டிகையா?

ராமா: ஆம்.

டேவிஸ்: அதற்காக எதற்கு?

ராமா: பண்டிகை கொண்டாடு வதற்கு.

டேவிஸ்: எப்படிக் கொண்டாடுவது?

ராமா: அதிகாலையில் எண்ணெய் தேய்த்து முழுகி புதிய உடை அணிந்து பலகாரம் சாப்பிட்டு பட்டாசு சுடுவது.

டேவிஸ்: குளித்து முழுகி புதிய உடை அணிந்து பட்டாசு சுடுவது ஒரு பண்டிகையா? இதற்காக நீ ஊருக்கு போக வேண்டுமா அதை அனுசரித்து சனி, ஞாயிறு வருவதுபோதாமல் மேற்கொண்டு இரண்டு நாள் தேவையா? இதென்னப்பா, நாட் களைக் கொலை செய்யும் பண்டிகை யாக இருக்கிறதே? லீவுக்கு கேள்வி கேட்பாடு இல்லையா?

வாரத்துக்கு சனி, ஞாயிறு லீவு; வருடத்தில் 2,3 மாதம் வெயில் கால லீவு. வருடத்தில் 15 நாள் ஜனவரி லீவு. பிறகு காஷுவல் லீவு. இவை போன்று என்னென்னமோ லீவு. இந்த 2,3 மாதத்தில் பல லீவுகள்! போதாக் குறைக்கு நாணயமாற்று லீவு! இப்படியே நாட்கள் பாழாகின்றன. நமக்கு படிக்கும் நேரமோ ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தான் தேறுகிறது. அப்படித் தேறும் நாட்களில் இப்படிக் கணக்கு வழக்கு இல்லாமல் நாட்கள் பாழாகின்றன அன்னிய ஆட்சி போய் சுய ஆட்சி வந்துகூடவா இந்தத் தொல்லை? நாட்களெல்லாம் இப்படி லீவு ஆகிவிட்டால் அப்புறம் படிப்புத் தான் எப்படி வரும்?

ராமா: நீ என்னப்பா! தீபாவளி வருஷத் துக்கு ஒரு நாள் பண்டிகையாக  வருகிறது. அதுகூடஉனக்குப் பொறுக்கவில்லையா? மனிதனுக்கு ஓய்வு வேண்டாமா?

டேவிஸ்: வருஷத்துக்கு ஒரு நாளாக ஒவ்வொரு நாளும்தான் வருகிறது; அதற்காக எல்லா நாளும் லீவு விடுவதா? ஓய்வுக்கு என்ன குறை; சனி ஞாயிறு போதாதா?

ராமா: சனி ஞாயிறு நமக்குப் போதும். வீட்டிலே குடும்பத்துடன் கொண்டாட ஒரு ஓய்வு நாள் வேண்டாமோ? சனி ஞாயிறு களில் வீட்டில் உள்ளவர்கட்கு ஓய்வு ஏது?

டேவிஸ்: என்ன ஓய்வோ, என்ன கொண்டாட்டமோ, எனக்கு ஒன்றும் புரியவில்லை இந்தப் பண்டிகைகளின் பேரால் வேலை நாட்கள் பாழாகின்றன.

ராமா: நீ என்ன கருப்புச் சட்டைக் காரன்போல் தோன்றுகிறது. பண்டிகை களை இப்படி வெறுக்கிறாயே!

டேவிஸ்: கருப்புச் சட்டை இல்லை; ஒரு இழவும் இல்லை. என்ன பண்டிகை இது? நாசமாய்ப் போன பண்டிகைகள், இப்படி மாதா மாதம் வந்து உயிரை வாங்கு கின்றனவே.

ராமா: அப்படிச் சொல்லாதே; பண்டி கைகள் எல்லாம் மத சம்பந்தமானவைகள். நாம் மதத்தைச் சார்ந்தவர்களாகவும், கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்தால் இந்த மாதிரி பண்டிகைகளைக் குறைகூறக் கூடாது. மனிதனுக்கு மதமும் கடவுளுந்தான் முக்கியமே ஒழிய இந்தக் கல்லூரிப் படிப்பு முக்கியமான தல்ல. இந்தப் படிப்பு என்பதெல்லாம் மதத்தை சரிவர பின்பற்றி கடவுளை சரிவர அறிந்து பக்தி செய்யத்தான். ஆதலால் இப்படி எல்லாம் பேசாதே.

டேவிஸ்: என்னப்பா பூச்சாண்டி காட்டுகிறாய்? பண்டிகை எதற்கு என்றால் லீவுக்கு என்கிறாய்! லீவு எதற்கு என்றால் குடும்பத்தோடு ஓய்வுபெறத்தான் என் கிறாய்! படிப்பு கெட்டு விடுகிறதே என்றால் மதத்துக்காகவும், கடவுளுக்காகவும் பண்டிகை கொண்டாடுவதாகச் சொல்லிக் கொண்டு இதைத் தவறு என்று சொன் னால் என்னைக் கருப்புச் சட்டைக்காரன் என்கிறாய்! முடிவாக படிப்பைவிட மதம் கடவுள்தான் பெரிது அதற்காகத்தான் படிக்கிறது என்கிறாய்! இது என்ன சமாதானம்? மேலும் ஒரு மனிதன் பிறக்கும் போதே மதம் அவன் கூடவே பிறக்கிறது கடவுளும் ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பு இருந்தே அவன்கூடவே இருந்து அவன் சாகும்வரை அவனை நடத்துகிறது இந்த இரண்டு கெட்டியான சங்கதிக்கு ஒரு மனிதன் படிக்க வேண்டியது எதற்கு? அதுவும் காலேஜில் படிக்க வேண்டியது எதற்கு? அப்படியானால் காலேஜிலே படிக்காதவர்களுக்கெல்லாம் மதம் கடவுள் அறிவும்பக்தியும் இல்லை என்றும் வராது என்றுமா சொல்லுகிறாய்?

ராமா: நீ கருப்புச் சட்டைக்காரன்தான் சந்தேகமில்லை உன்னோடு பேசிப் பயனில்லை!

டேவிஸ்: கோபித்துக் கொள்ளாதே. உன் பண்டிகையை அறிய வேண்டுமென்று தான் கேட்டேன். சங்கதி எங்கேயோ போய் விட்டதே தீபாவளி என்ன பண்டிகை? எதற்காகக் கொண்டாடுவது? மதத்தை எப்படி அறிந்திருக்கிறாய்? அதில் கடவுள் பக்தி எப்படி ஏற்படுகிறது? சொல் பார்ப்போம்.

ராமா: அப்படிக் கேள் சொல்கிறேன்.

தீபாவளி என்பது உலகத்துக்கு கேடு விளைவித்த ஒரு அசுரன் கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண் டாடுவதாகும். அதை நீயும் கொண்டாட லாம். இப்பொழுது வெள்ளையன் ஒழிந்த நாளை நாம் சுதந்தர நாளாகக் கொண் டாடவில்லையா? அதுபோல.

டேவிஸ்: அப்படியா? அந்த அசுரன் யார்? அவன் எப்படி உலகுக்குக் கேடு செய் தான்? அந்தக் காலத்தில் அணுக்குண்டு இருந்திருக்காதே? இந்தக் காலத்தில் அணுகுண்டு வைத்திருப்பவனையும் இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்னென்னவோ கேடு செய்கிறவர் களையும்பற்றி நாம் ஒன்றுமே பேசுவ தில்லை; அப்படியிருக்க அந்த அசுரன் யார்? அவனென்ன கேடு செய்தான்?

ராமா: அந்த அசுரன் பெயர் நரகாசூரன். அவன் பூமியிலிருந்து பிறந்தவன். அவன் தகப்பன் மகா விஷ்ணு. அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து தேவர்களின் பெண்களுக்கும் தொல்லை கொடுத் தான். அதனால் மகாவிஷ்ணுவும் அவர் மனைவியும் சேர்ந்து அவனைக் கொன்று விட்டார்கள்.

இனி எவரும் தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக் கக் கூடாது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக அவன் செத்த நாளைக் கொண்டாடுவது தெரிந்ததா? இதுதான் தீபாவளித் தத்துவம்.

டேவிஸ்: தெரிந்தது. ஆனால் அதை விளக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனம் ஆசைப்படுகின்றது. அதா வது அவன் மகா விஷ்ணுவுக்கும் பூமிக் கும் எப்படிப் பிறக்க முடியும்? பூமியானது மண், கல் உருவத்தில் இருந்தே மகாவிஷ்ணுக்கு பூமியுடன் எப்படி கலவி செய்ய முடிந்தது? பூமி எப்படி கர்ப்பம் தரிக்கும்? அதற்கு எப்படி பிள்ளை பிறக்கும்? எனக்குப் புரியவில்லையே?

ராமா:  அட பயித்தியக்காரனே! மகாவிஷ்ணு நேராகவா போய்க் கலவி செய்வார்? அதற்கு அவருக்கு மனை விகள் இல்லையா? ஆதலால் அவர் நேராகக் கலவி செய்யவில்லை. மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்தார்.

டேவிஸ்: பொறு! பொறு! இங்கே கொஞ்சம் விளக்கம் தேவை மகா விஷ்ணு பன்றி உருவம் ஏன் எடுத்தார்?

ராமா: அதுவா! சரி சொல்கிறேன் கேள். இரண்யாட்சதன் என்று ஒரு இராட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.

டேவிஸ்: பொறு!  பொறு! ஓடாதே இங்கே எனக்கு ஒரு மயக்கம்!

ராமா: இதிலென்னப்பா மயக்கம்? நான்தான் தெளிவாக சொல்லு கிறேனே!

பூமியைப் பாயாகச் சுருட்டிஎடுத்துக் கொண்டு சமுத்திரத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டான் என்று.

(தொடரும்)

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...