Saturday, October 15, 2011

விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம் இடையில் இரண்டே மாதங்கள்!


இமை மூடாமல் உழைத்து இலக்கை எட்டுவீர்!
தமிழர் தலைவர் அறிக்கை

கழகக் குடும்பத்தவர்களே!  இன உணர்வாளர்களே! பகுத்தறிவாளர்களே!

வணக்கம்.

நம் அய்யா தந்த அருட் கொடையாம்- விடுதலைக்கு 50 ஆயிரம் சந்தாக்கள் சேர்க்கும்- பகுத்தறிவு பரப்பும் அரிய பணியாளர்களாக மாறி தீவிரமாக, சொல்லொணாத ஆர்வத்துடன் உழைத்துக் கொண்டுள்ள உங்களுக்கு எமது தலை தாழ்ந்த நன்றி!

மலேசியாவில் குடிஅரசுக்குச் சந்தாக்கள்

மகிழ்ச்சிப் பெருக்கோடு ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

1925 இல் குடிஅரசு வார ஏட்டினைத் துவக்கி நடத்தி, பெரியதோர் அறிவுப் புரட்சிக்கு அடிக்கல் நாட்டிய தந்தை பெரியார் அவர்கள், அந்த முயற்சியில் எவ்வளவு தூரம் தனது தோழர்களுக்கு ஊக்கமூட்டி, கடல் கடந்த நாடுகளான மலாயா, சிங்கப்பூர், இலங்கை போன்றவற்றில் அந்த ஏட்டிற்கு சந்தாக்களை வசூலித்து, உலகம் முழுவதும் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் ஆக்கப் பணிகளை முடுக்கி விட்டார்கள் என்பதை குடிஅரசு களஞ்சியப் பணி தொகுப்பின் போது அறிய முடிகிறது. சிங்கப்பூர், மலாயா நாடுகளில் வாழ்ந்த பெரும்பாலான தமிழர்கள் - திராவிடர்கள். கட்சி, ஜாதி, மதம் என்று எதனையும் பாராது குடிஅரசு  வார ஏட்டிற்கு சந்தாக்களை வாரி வழங்கி, அதன் மூலம் மாபெரும் விழிப்புணர்வையும், சமுதாயப் புரட்சிக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பையும் நல்கியுள்ளனர் என்பது பெரிதும் வியக்கத் தக்கதாகும்!

குடிஅரசு  வார ஏடு 20-2-1927 இல் (நம்மைப் போன்ற பலர் பிறப்பதற்கு முன்பே) வந்துள்ள சந்தா சேர்ப்பு பற்றிய ஒரு செய்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது!

சந்தாக்கள் குவிந்தன!

நமது நன்றியறிதல் என்ற தலைப்பில் உள்ள செய்தி இதோ:

அடியிற்கண்ட கனவான்கள் சிங்கப்பூர் ஸ்ரீமான்கள் கோபால், ராஜகோபால், சுப்பய்யா, கோவிந்தசாமி, வெங்கடாசலபதி, சாரங்கபாணி ஆகிய ஆறு கனவான்கள் பெருமுயற்சியால் நமது பத்திரிகைக்கு சந்தாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் 74 சந்தாதாரர் பெருமக்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

குறிப்பு:-மேல்கண்ட 74 கனவான்களும் சந்தாதாரர்களாகச் சேர்ந்திருப்பதோடு நமது கொள்கைகளையும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு, மேலும் மேலும் நமக்கு ஊக்கமளித்திருப்பதற்கும், குடி அரசைப்  பரப்ப இனியும் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாய் அன்புடன் தெரிவித்திருப்பதற்கும், தமிழ் மக்களின் சுயமரியாதையின் பொருட்டு, நாம் தமிழ் மக்கள் சார்பாகவும், நமது சார்பாகவும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்

என்று தந்தை பெரியார் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து 3-4-1927 குடிஅரசு ஏட்டில்  உள்ள செய்தியையும் படியுங்கள்.

சிங்கப்பூர் ஸ்ரீமான் கோ. சாரங்கபாணி நாயுடு அவர்களின் பெருமுயற்சியாலும், இன்னும் அன்னாரைச் சேர்ந்த இதர கனவான்களின் முயற்சியாலும் கீழ்க்கண்ட நபர்களை நமது பத்திரிகைக்கு சந்தாதாரராகச் சேர்த்திருக்கின்றார்கள்.

இதில் 71 பேர் (ஏற்கெனவே 74+ இப்போது 71 ஆக கூடுதல் 145 சந்தாதாரர்கள் சிங்கப்பூரில் மட்டுமே).

மூன்றாவது கட்டமாக

15-5-1927 குடிஅரசு இதழில் ஸ்ரீமான்கள் கோ. சாரங்கபாணி நாயுடு, கோபால், சுப்பய்யா, கோவிந்தசாமி, வெங்கிடாசலபதி ஆகிய கனவான்களும் ஜோகூர் குடிஅரசு அபிமானிகளும் சேர்ந்து கீழ்க்காணும் கனவான்களை குடிஅரசு சந்தாநேயர்களாகச் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

246 ஆம் எண்ணிலிருந்து ஏ.கே.சுப்பையா செட்டியார் எனத் தொடங்கி 359 பி. நடராஜன் என்று முடிகிறது.

நான்காவது கட்டமாக

அதேபோல், 14-8-1927 குடிஅரசு இதழில் எண். 360 இல் தொடங்கி (எம். இராமசாமி வள்ளலார்) எண். 422 இல் பி.எம்.என்.எம். முத்துக் கருப்பன் செட்டியார் என்பதில் முடிகிறது. இதற்கும் நன்றி அறிதலைத் தெரிவித்துள்ளார்.

அய்ந்தாவது கட்டமாக

ஈ.வெ.கிருஷ்ணசாமி மலேயா புறப்பாடு

6-11-1927  குடிஅரசு இதழில் முக்கியமாக வெளியிடப் பட்டுள்ள ஒரு தகவல்:

குடிஅரசு பத்திராதிபதியின் தமையனார் ஸ்ரீமான் ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்கள் மலேயா, நாட்டு நண்பர் பலரின் வேண்டுகோளின்படி, இம்மாதம் 11 ஆம் நாள் டெயிரியா கப்பலில் பிரயாணம் செய்ய உத்தேசித்திருக்கிறார்கள். ஆதலால் அந்தப்படி வரும் ஸ்ரீமான் நாயக்கர் அவர்களுக்கு மலாயா நாட்டுத் தமிழ் மக்கள் தக்க அன்பு காட்டி அவர்களது எண்ணத்தை நிறைவேற்றுவார்களென நம்புகிறோம்.

குடிஅரசு 6-11-1927

ஓர் மகிழ்ச்சி என்ற தலைப்பில் குடிஅரசு  11-12-1927 இதழில் வெளி வந்துள்ள ஓர் முக்கிய தகவல்:

ஸ்ரீமான் ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்கள் ஸ்ரீமான்  சுப்பராயலு நாயுடு அவர்களுடன் மலேயா நாட் டுக்கு, குடிஅரசு பத்திரிகையின் கொள்கை பரப்பும் விஷயமாய் சென்றிருக்கும் விஷயம் முன்னமேயே அறிந்திருக்கலாம். அங்கு அவர்களை அந்நாட்டுவாசிகள் மிக்க அன்புடன் வரவேற்று, வேண்டிய ஆதரவளித்து வருகின்றார்கள் என்கின்ற சேதியைக் கேட்க நமது வாசகர்கள் அதிக மகிழ்ச்சியடைவார்கள்.

தவிர, கோலாலம்பூரில் துரைசாமிப் பிள்ளை, என்.வி.விஸ்வலிங்கம், பொன்னையா, சந்திரசேகரன், தம்பிராஜு, சுப்பையா இன்னும் மற்றவர்களும் பத்திரிகை விஷயமாகவும் முயற்சி எடுத்து ஆதரவளித்து வருவது மிகவும் நமது நன்றிக்குரியதாகும். விவரமான ஜாபிதா பின்னால் பிரசுரிக்கப்படும்.

குடிஅரசு 11-12-1927

ஆறாவது கட்டமாக


1929 இல் மலேயா புறப்பட்ட தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே, குடிஅரசு சந்தாக்களைப் பெருவாரியாகச் சேர்க்கவே,  பெரியார் பெருந் தொண்டர் நாகை என்.பி. காளியப்பன்அவர்களை தந்தை பெரியார் தனியே, கப்பலில் அனுப்பி வைத்தார்.

அவரும் ஏராளமான சந்தாக்களைத் திரட்டி, தந்தை  பெரியார் அவர்கள் 1929இல் (அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையாரோடு திரும்பும்போது) அவர்களிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடையில் இரண்டே மாதங்கள்

தோழர்களே, தோழியர்களே, இயக்கக் கொள்கை லட்சியம் பரவிட நாம் எப்படி பாடுபடவேண்டும். எதனை முன்னிலைப்படுத்திப் பணியாற்ற வேண்டும் என்று தந்தை பெரியார் நமக்கு வகுப்பு எடுத்துள்ளதுபோல் உள்ள தல்லவா மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளும் - செய்திகளும்?

எனவே இடையில் இரண்டே மாதங்கள் உள்ளன!

இமை மூடாமல், இடையறாமல், கடுமையாக உழைத் தால் வெற்றி தானே நமக்கு வந்து சேரும்!

அதே பணியில் அயராது ஈடுபடுங்கள்! 
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...