Wednesday, September 28, 2011

தடை செய்க சோதிடத்தை!


தடை செய்க சோதிடத்தை!


அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கார்ல்சேகன் வானியல் ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பிரபஞ்ச வெளியில் புதிதாக இரு சூரியன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா விண்ணில் செலுத்திய கெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்களிலிருந்து இது தெரிய வந்துள்ளது. இந்த இரு சூரியன்களையும் 229 நாள்கள் சுற்றிவரும் கிரகம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிரகம் பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு என்பது ஏறக்குறைய ஒன்பதரை லட்சம் கோடி கிலோ மீட்டர்).

இரண்டு சூரியன்கள் இருந்தாலும் ஒரே திசையில் இருப்பதால் பூமியைப் போலவே இங்கும் பகல் இரவு ஏற்படுகிறது. என்ன விந்தையென்றால் இவ்விரு சூரியன்களும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. இதனால் 20 நாள்களுக்கு ஒருமுறை கோள் மறைப்பு (கிரகணம்) வருகிறதாம்.

இரு சூரியன்களைச் சுற்றி வருவதால் அந்தக் கிரகத்துக்கு இரண்டு சூரிய உதயங்களும், இரண்டு அஸ்தமனங்களும் ஏற்படுகின்றனவாம்.

ஒரு சூரியன் ஆரஞ்சு நிறத்திலும், மற்றொன்று சிவப்பு நிறத்திலும் உள்ளதாம். ஒன்றையொன்று சுற்றிக் கொள்ளும் இவ்விரு சூரியன்களுக்கிடையே 65 மில்லியன் மைல்கள் இடைவெளி உள்ளதாம்.

இந்தப் புதிய கிரகத்துக்கு கெல்லர் 16பி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அறிவியல் நாளும் இவ்வாறு புதியனவற்றைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க, இங்கே ஜோதிடர்கள் இன்னும் நவக்கிரகத்தையே (ஒன்பது) கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் கூறும் நவக்கிரகத்தில் கிரகமே இல்லாத நட்சத்திரமான சூரியனைச் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கிய கிரகமான பூமிக்கு அந்தப் பட்டியலில் இடம் இல்லை; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனைச் சேர்த்துக் கொண்டு, ஜாதகம், ஜோதிடம் என்று பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவின்  முன்னாள் குடியரசுத்  தலைவரும், விண்ணியல் அறிஞருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் என்ன சொல்லுகிறார்?

சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவிலுள்ள கிரகங்கள்மீது மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும், அக்கறையும் வந்திருக்கிறது. அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்துகொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்து அதை (சோதிடத்தை) ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

விண்கோள்களின் (கிரகங்களின்) இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து தங்கள் வாழ்க்கையை அவை (கிரகங்கள்) ஆட்டிப் படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள்? என்பதுபற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை  என்று  (அக்கினிச் சிறகுகள் நூலில்) விஞ்ஞானி அப்துல்கலாம் சொல்லியிருக்கிறார்.

மக்களை அறியாமையில் அழுத்திச் சுரண்டும் இந்தச் சோதிடம் தடை செய்யப்படவேண்டாமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...