Saturday, August 13, 2011

கருணை காட்டுக! மறுபரிசீலனை அவசியம்

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சின்னசாந்தன், பேரறிவாளன், ஆகியோருக்குக் கருணை காட்ட வேண்டும், தூக்குத் தண்டனையை மாற்றிட வேண்டும் என்ற கருணை மனு குடியரசு தலைவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அளிக்கப்பட்டது.

16 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் கருணை மனு, நிராகரிக்கப்பட்டுள்ளதை, மனிதநேய கண்ணோட்டத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் 72 ஆவது பிரிவின்படி, குடியரசுத் தலைவருக்கு இப்படி கருணை மனு போடலாம் - உள்துறை அமைச்சகம்-இந்திய அரசு அமைச்சரவை கருத்துப் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் செயல்படுவது என்பது நடைமுறையாகும்.

தூக்குத்தண்டனை என்பதையே கைவிடவேண்டும் என்பது உலகெங்கும் பற்பல நாடுகளிலும் பரவலாக உள்ள கருத்து ஆகும்.

இங்கிலாந்தில் 1965 முதலே தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்ற முறைகளில் பெரிதும் இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறையைக் கையாண்டும் உள்ள நிலையில், இதுபற்றி சிந்திக்க வேண்டியதும் அவசியமாகும். குறிப்பிட்ட வழக்கில் மேற்காட்டிய மூவர் இதுவரை 20 ஆண்டுகளுக்குமேல் சிறைவாசம் அனுபவித்த நிலையில், அவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்பது, மனிதாபிமானத்தைக் கேள்விக்குறியாக்கும் ஒன்றாகும்.

இதற்குமுன்பிருந்த அரசுகள், குடியரசுத்தலைவர்கள் இதில் காட்டிய அணுகுமுறையை இப்போது கைவிட்டது ஏனோ புரியவில்லை. திருமதி நளினிக்குக் காட்டிய அதே கருணையை இம்மூவர்களுக்கும் அளிக்க மத்திய அரசு முன்வந்தால், அது ஒரு வகையான தாயுள்ளத்தோடு கூடிய கருணை காட்டும் செயலாகும்.

காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் நளினி விஷயத்தில் காட்டிய கருணையை இவர்களுக்குக் காட்டுவது, அவரது பெருமையை உயர்த்துமே தவிர, ஒருபோதும் தாழ்த்திவிடாது. இதனால் தீவிரவாதத்தை ஆதரிப்பது ஆகிவிடாது.

தனது முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது, மனிதத்தன்மையின் உச்சமும் ஆகும் என்று மத்திய அரசை பலகோடி தமிழர்கள், மனிதநேயர்கள் விரும்பும் நிலையில் ஒரு நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...