Saturday, August 13, 2011

நாகை - திராவிடர் மாணவர் கழக இன எழுச்சி மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்!

தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீட்டுக்குத் தனிச் சட்டம் கொண்டு வருக!

நாகப்பட்டினம் ஆக.13- ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறியர் ராஜபக்சேவுக் குத் துணைபோகும் சீனா, ருசியா நாடுகளில் போக்கினை மாற்றிட இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் தூதுக் குழுவாகச் செல்ல வேண்டும் என்றும், தனியார்த் துறைகள் வளர்ந்துவரும் நிலையில், தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடுக்கு வழி செய்யும் வகையில் தனிச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் நாகப்பட்டினத்தில் இன்று (13.8.2011) நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக இன எழுச்சி மாநில மாநாட்டில் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன தீர்மானங்கள் வருமாறு:

(1) ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு வழி கோலுக!


(அ) ஈழத்தில் ராஜபக்சேவின் கொடுங் கோல் அரசு வெளிநாட்டு அரசுகளின் இராணு வத் துணையோடு பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்து இரண்டாண்டுகள் கழிந்த நிலையிலும், ஈழத் தமிழர்களுக்கான வாழ்வு உரிமைகள் மீட்கப்படவில்லை. வாக்குறுதி கொடுத்தபடி எந்தவித அரசியல் தீர்வும் எட்டப்படவில்லை. மேலும் தமிழர்கள் அங்கு உரிமைகளை நாளும் இழந்து கொண்டுதான் உள்ளனர்.

தமிழக அரசும் இந்திய அரசும் மேலும் கடுமையான அழுத்தங்களைத் தொடர்ச்சி யாகக் கொடுத்து தமிழின மக்களின் வாழ்வுரிமைக்கு வழி கோல வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(ஆ) அய்.நா. நியமித்த மூன்று பேர்கள் அடங்கிய நிபுணர் குழு, ராஜபக்சே போர்க் குற்றங்களைச் செய்துள்ளார் என்று அதி காரப் பூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதா மதம் நடந்து வருகிறது.

அய்.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா, ருசியா போன்ற நாடுகளும், சுழற்சி முறையில் அதில் அங்கம் வகிக்கும் இந்தியாவும் இதில் முட்டுக்கட்டை போட்டு வருவது கண்டிக்கத் தக்கதாகும்.

இந்தியா தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், சீனா, ருசிய நாடு களின் மனப்போக்கை மாற்றும் வகையில், இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் ஒரு குழுவாகச் சென்று, அந்நாட்டு ஆட்சியாளர்களிடம் எடுத்துக் கூறி, இப்பிரச்சினையில் மனித உரிமையின் மாண்பைக் காப்பாற்றும் வகையில் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கையில், முட்டுக்கட்டை போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துமாறு இடதுசாரிகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

(2) (அ) இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே மீது நடவடிக்கை தேவை
அய்.நா.அறிக்கையின் அடிப்படையில், சட்டப் பேரவையில் கட்சி வேறுபாடின்றி, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் கவுரவத்தைச் சிறுமைப்படுத்தும் வகையிலும், இலங்கைப் பாதுகாப்புத் துறைச் செயலாளரும், அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே பேசியிருப்பதற்கு இம்மாநாடு வண்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியாவில் உள்ள ஒரு மாநில சட்ட சபையின் தீர்மானம் குறித்து வெளிநாட்டில் உள்ள பொறுப்பான பதவியில் இருக்கக்கூடிய ஒருவர் சிறுமைப்படுத்திப் பேசியிருப்பதன் அடிப்படையில், இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

(2) (ஆ) ஈழத் தமிழர்களான ஏதிலிகளுக்குக் கல்வி வாய்ப்பினை அளித்திடுக!

உற்றார் உறவினர்களையும், உடைமைகளையும் இழந்து ஏதிலிகளாகத் தமிழ் நாட்டில் சரண் புகுந்துள்ள ஈழத் தமிழர்களின் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கலைக் கல்லூரிகளிலும், தொழிற் கல்லூரிகளிலும் போதுமான இடம் தந்து அவர்களுக்குப் பேருதவி புரியுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

(3) தமிழ் நாட்டு உரிமைகள் மீட்பு!

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம், காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்னைகள் நீதிமன்ற குறுக்கீடுகளின் காரணமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளை சம்பந்தப்பட்ட அரசுகள் செயல்படுத்தாத நிலையிலும், இரண்டு வகைகளிலும் தமிழ்நாட்டின் உரிமைகள் முடக்கப்பட்டு உள்ளன.

இவற்றிற்கு விரைந்து தீர்வு கிடைக்க உடனடியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசையும் மத்திய அரசையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(4) சட்டக்கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றோருக்கு மீண்டும் தேர்வா?


சட்டக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்று வெளியில் வருவோர் அகில இந்திய அளவில் தகுதித் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற நிபந்தனை - முதல் தலைமுறையாக சட்டம் பயின்று தொழில் நடத்த முன்வருவோரை முடக்கும் சூழ்ச்சி என்பதால், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. இந்த இரட்டைத் தேர்வு முறை தேவையில்லை என்பதையும் இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

(5) வேண்டாம் அகில இந்திய நுழைவுத் தேர்வு

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்னும் மருத்துவக் கவுன்சிலின் முடிவை இம்மாநாடு கண்டிக்கிறது.

இது மாநில உரிமையில் தலையிடுவது என்பது மட்டும் அல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களையும், கிராமப்புற மாணவர்களையும் பாதிக்கக்கூடியது என்பதால், இந்தத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும், மத்திய அரசு தலையிட்டு அகில இந்திய நுழைவுத் தேர்வுத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(6) சமச்சீர் கல்வியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும்:

சமச்சீர் கல்வியைத் தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட - எல்லோருக்கும் சமமான பாடத்திட்டம் என்பதை எதிர்க்கும் - நவீன குலக்கல்வி திட்ட முயற்சிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை இம்மாநாடு வெகுவாகப் பாராட்டி வரவேற்கிறது.

(7) தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை:

அரசுத் துறைகளும் பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெருகி வரும் நிலையில், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கான சட்டத்தைக் கொண்டு வருமாறு மந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

(8) கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான மாநாடு வரவேற்கத்தக்கது

கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கூறி, வரும் செப்டம்பரில் மாநாடு நடத்தவிருப்பதாகத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கையை இம்மாநாடு மகிழ்வோடு வரவேற்கிறது.

(9) அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்குக!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்குவது தொடர்பாக டாக்டர் சித்தகாந்த் மகாபத்ரா (ஒரிசா) அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை உடனே வெளியிடுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

(10) மாணவர், இளைஞர் மத்தியில் பிரச்சாரம்:

மத போதை, மது போதை, தவறான கலாச்சாரப் போதைகளில் சிக்கிச் சீரழியும் இளைஞர் சமூகத்தினரைத் திருத்திடவும், நல் வழிப்படுத்திடவும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும், பயனுள்ள கண்காட்சிகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...