Saturday, August 13, 2011

முஸ்லீமும், பிராமணரும் ஒன்றா?

வீரசிங்கம்பேட்டைக் கலவர வழக்கை விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்காக ஸ்பெஷல் மாஜிஸ்ட்டிரேட்டும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஒருவாரமாக விசாரணையும் நடந்து வருகிறது.

இவ்வழக்கு நடந்து வருகையில் அப்பிரதேச நிலையைச் சரிப்படுத்தத் தண்டப் போலீசாரைச் சர்க்கார் நியமித்திருக்கிறார்கள். இத்தண்டப் போலீசின் செலவினத்தை இக்கிராமவாசிகளே ஒப்புக்கொள்ள வேண்டுமென்று சர்க்கார் அறிக்கை கூறுகிறது. இதைப்பற்றி நாமேதும் கூற விரும்பவில்லை. ஆனால் இத்தண்டப் போலீசுக்கு ஆகும் செலவினம் இருக்கிறதே அதைப் பற்றி விபரம் கூறும்போது மேற்படி கிராமவாசிகள் கொடுக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு மேற்படி கிராமத்திலுள்ள பிராமணர்கள் முஸ்லீம்கள் இவர்கள் நீங்கலாக என்று கூறியிருப்பதுதான் நமக்குப் பெரும் சந்தேகத்தை உண்டாக்குகிறது.

இன்றைக்கெல்லாம் மாதம் 450 ரூபாய்க்குள்தான் டிவிஷனல் மாஜிஸ்ட்டிரேட் தெண்டச் செலவு மாதாமாதம் விதிக்கக்கூடும். 300 வீடுகள் அங்கே இருக்கிறதென்று வைத்துக்கொண்டால், வீட்டுக்கு மாதம் ஒன்றரை ரூபாய் வரக்கூடும். ஒரு வருடத்திற்குப் பதினெட்டு அல்லது இருபது ரூபாய்க்கு அதிகம் வருவதற்கில்லை. இது ஒரு பிரமாதமான செலவென்றுகூட நாம் கருதவில்லை. தெண்டத் தீர்வை கொடுக்க வேண்டியவர்களில் முஸ்லீம்களை விலக்கி இருப்பதுகூட ஒரு விதத்தில் நியாயம். ஆனால், பார்ப்பனர் நீக்கம் நியாயமானதா? என்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

எந்தவிதம் எண்ணி அல்லது கருதி இவ்விதிவிலக்கு சர்க்காரால் புகுத்தப்பட்டது என்பதை அறிய நாம் ஆவலுருவதைப் போலவே, நமது வாசகர்களும் ஆசைப்படக்கூடும்.

சர்க்கார் உத்தரவில் கருதுவதால் என்ற பதம் முஸ்லீம்களைப் பற்றி சொல்வது நியாயம். அவர்கள் மாரியம்மன் என்பதை ஒரு தெய்வமாக அவர்கள் கருதுவதில்லை. இக்கலக வழக்கு சகாப்தத்துக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை சர்க்கார் கருதுவது முற்றிலும் நியாயம்.

ஆனால், அய்யரை, பிராமணர்களை விதிவிலக்கின் மூலம் விலக்க கருதுவதுதான் நமக்கு விளங்காததில் ஒன்றாக இருக்கிறது. இந்து என்ற மதத்தினர்களின் சாமிகளில் ஒன்று மாரியம்மனாகும். இந்து மதத்தில் முதன்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பிராமணர்கள். இவர்கள் வீடு அக்கிராமத்தில் 5 அல்லது 6 வீடுகள் இருக்கக்கூடும். ஆறு அய்யர்மார் வீட்டுக்கு தெண்டவரி விதிக்க வேண்டுமென்று சொல்ல அவ்வளவு குறுகிய மனப்போக்கு நமக்கில்லை.

சர்க்கார் அப்படிச் செய்தால் ஒரு பிராமணரல்லாத தேவரிடமோ, சேர்வையிடமோ அவர்கள் சென்று சூத்திரர்களால் பிராமணர்களுக்கு தெண்டத்தீர்வைகூட கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பாவம் லேசில் போகாது என்றால் அய்யருக்கு தேவரிடம் இரண்டு மூன்று வருடத்துக்கு கொடுக்கக்கூடிய அளவு பணம் வசூலாகி விடும் என்பதும் நமக்குத் தெரியாததல்ல!

ஆனால், இச்சிறு உத்தரவினால் மற்றவர்கள் உரிமை மற்றவர்களின் நியாயமான நிலைமை இவைகள் சீர்குலைக்கப்பட்டு, சின்னாபின்னமாக இடமேற்பட்டு விடுமோ! என்றுதான் அஞ்சுகிறோம். பணமிச்சத்துடன் மட்டும் பார்ப்பனர்கள் பங்கு இதில் லாபமாய்விடுகிறது என்று கூறமுடியாது.

அய்யர்மாரை விலக்கியது தவறி வந்ததா? அல்லது ஆங்கில பதப்பிரயோகம் அசந்தர்ப்பத்தால் வீழ்ந்துவிட்டதா என்பதை எல்லாம் சிந்திக்க வேண்டுமெனக்கூறி, இக்குறிப்பை இத்துடன் நிறுத்துகிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...