Monday, May 2, 2011

முதல் அமைச்சர் கலைஞரின் பதில்கள்


சோவின் நயவஞ்சகம்  தேர்தல் ஆணையத்தின் மாறுபட்ட செயல்பாடுகள்
ஜெயலலிதாவின் வாய்தா ஜாலம்
2ஜி - பா.ஜ.க.வின் ஜனநாயக விரோதப் போக்குகள்
சென்னை, மே 3- 2ஜி அலைக்கற்றைத் தொடர்பான பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி யின் ஜனநாயக நெறிமுறைக்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதல் அமைச்சர் கலைஞர் எழுதியிருப்பதாவது:

கேள்வி :-  துக்ளக் சோ ராம சாமி  அவர்கள், இந்தப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமை யிலான அ.தி.மு.க. தான் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப் படுகிறாரே?

சோவின் பழைய கதை!

கலைஞர் :-  தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால், அந்தத் தீர்ப்பை நீங்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு; ஏற்றுக் கொள்வேன்.  வேறுவழி?  ஆனால் அந்த ஏற்பில், முழு மனது என்ன, கால் மனதுகூட இருக்காது.  மக்கள், மாற்றத்தை விரும்புகிறார் கள் என்பது தெளிவாகத் தெரிகிற போது, முடிவு வேறு விதமாக அமைந்தால், அதை எப்படி முழு மனதாக ஏற்க முடியும்? என்று சோ மிகவும் ஆதங்கத்துடன் அங்க லாய்த்துப் பதிலளித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன் றில், தேர்தலுக்குப் பிறகு நடத்திய ஆய்வு, தி.மு.க. கூட்டணி முன்னணியில் இருப்பதைக் காட்டு வதாக விளக்கியபோது, சோ ராம சாமி அவர்கள், தி.மு.க. முன்னணி யில் உள்ளது என்பதை ஏற்க மறுத்ததோடு; ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்று ஜெயலலிதா வைப் பாராட்டிப் பதிலுரைத்தார்.  14.1.2002 அன்று  சென்னையில் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சி யில், சோ ராமசாமி அவர்கள், இப்போது டான்சி உட்பட அய்ந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். 

விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட் டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் போட்ட வழக்குகளை பொய் வழக்கு என்றும் கூறமாட்டேன். 

அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது.  அப்படி நான் குற்றம் சாற்றியதில் எந்தத் தவறும் இல்லை.  குற்றச்சாற்று நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்.  அவ்வளவுதான் என்று பேசியதை, இப்போது அவருக்கும், அவரது வாசகர்களுக் கும் நினைவுபடுத்துவது பொருத் தமாக இருக்கும் என்று கருது கிறேன்.  ஜெயலலிதா ஊழல் குற்றம் புரிந்தவர் என்றும், அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி என்றும் சாடிய அதே சோ ராமசாமிதான், இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு வக் காலத்து வாங்கி, அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டுமென்று எண்ணுகிறார்.

எண்ணங்கள் குதிரைகளானால், எண்ணிய நேரத்தில் காத தூரம் பறக்கலாம் என்பது பழமொழி யல்லவா? முழு மனதென்ன, கால் மனதென்ன - மனதையே காலால் மிதித்து நசுக்கி விட்டவர்களுக்கு; நாளொரு சிந்தனை - பொழுதொரு பேச்சு என்ற நயவஞ்சகப் போக்கு இருப்பதில் என்ன ஆச்சரியம்?

பா.ஜ.க.வின் ஜனநாயக நெறிமுறை இதுதானா?

கேள்வி :-  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை சம்மந்தமான பொதுக் கணக்குக் குழு அறிக்கை யினை, நாடாளுமன்றத்தின்  சபாநாயகருக்கு, திரு.முரளி மனோகர் ஜோஷி அனுப்பி வைத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :-  இந்தப் பிரச்சினை சம்மந்தமாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்கள் தலைமையிலான நாடாளு மன்றத்தின் பொதுக் கணக்குக் குழு விசாரணை செய்தது. இந்தக் குழுவின் அறிக்கை நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே, பத்திரிகைகளுக்கு வெளியானது குறித்து ஏற்பட்ட சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.  21 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவின் 11 உறுப்பினர்கள் அறிக்கையை நிராகரித்து விட் டனர்.

எனினும், பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் திரு.முரளி மனோகர் ஜோஷி, அறிக் கையை நாடாளுமன்றத் தலைவர் மீரா குமார் அவர்களுக்கு அனுப்பி வைத்து விட்டார்.  திரு.முரளி மனோகர் ஜோஷி வகித்துவந்த பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் எனும் பதவிக் காலம் 30.4.2011 உடன் முடிவடைந்து விட்டது.  அவருடைய பதவிக் காலம் முடிவடைந்தாலும், அவருக்குப் பிறகு, அவருடைய கட்சிக்காரர்தான் அந்தப் பொறுப்புக்கு வருவார் என்ற நாடாளு மன்ற நடைமுறையின்படி, திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்களையே மீண்டும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக நியமனம் செய்து, நாடாளு மன்ற சபாநாயகர் மீரா குமார் அறிவித்துள்ளார்.

திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்கள் அனுப்பி வைத்துள்ள அறிக்கை குறித்து பல்வேறு வகையான சர்ச்சைகளும், சந்தேகங்களும் எழுந் துள்ளன. குழுவின் வரைவு அறிக்கையின் நகல் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்மீது பத்திவாரியாக உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும்.  அந்த அறிக்கையில் ஏதாவது ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ தங்களுக்கு ஏற்புடையது இல்லை என்று உறுப்பினர்கள் கருதினால், அதைப் பற்றி தனித்தனியாக அதே அறிக்கையில் பிற்சேர்க் கையாக பதிவு செய்து கொள்ளலாம். 

குற்றம் சாற்றப்பட்ட வர்களை அழைத்து பொதுக் கணக்குக் குழு விசாரித்திருக்க வேண்டும். குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதுதான் நடைமுறை. மாறாக, நாடாளுமன்றத் தலைவருக்கு அனுப்பப்பட் டுள்ளது.  அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து, அதனை ஏற்றுக் கொள்வதும், நிராகரித்து விடுவதும், பெரும்பான்மை உறுப்பி னர்களைப் பொறுத்ததாகும்.  திரு.முரளி மனோகர் ஜோஷி பத்திரிகை யாளர்கள் சந்திப்பின்போது, பல உறுப்பினர்கள் வாக்கெடுப்பு வேண்டு மென்றார்கள். சிலர் அதை எதிர்த்தார்கள். எண்ணிக்கை முக்கியமானதல்ல; பின்பற்றக்கூடிய செயல்முறைதான் முக்கியமானதாகும்.  பெரும் பான்மை என்பதன் அடிப்படையில் என்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அறிக்கையினை பெரும் பான்மையினர் என்போர் நிராகரித்து விட முடியாது. (Several members had demanded a division, but some others had opposed it too.  The numbers are not important, the process is.    I don’t have to go by a majority - They cannot reject the report) என்று சொன்னதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு.பவன்குமார் பன்சால் அவர்கள் தெரிவித் திருக்கிறார்.  பா.ஜ.க.வின் மூத்த தலைவரான திரு.முரளி மனோகர் ஜோஷி அப்படிச் சொல்லி யிருந்தால், ஜனநாயகத்தின்மீது அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டும்.  ஜனநாயகம் என்பது எண்ணத்தை மட்டுமல்ல; எண்ணிக்கையையும் அடிப்படை யாகக் கொண்டதாகும்.

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, நாடாளுமன்ற நடவடிக்கைகளையே முடக்கியவர்கள் பா.ஜ.க.வினர்.  அப்படிப்பட்டவர்கள் ஜனநாயக நெறிமுறைகளுக்கும், நாடாளுமன்ற மரபுகளுக் கும் மாறாக, பொதுக் கணக்குக் குழு விவகாரத்தில் நடந்து கொண்டது எப்படி என்பதைத்தான் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்பு கிறார்கள். 

இப்போது நடந்துள்ள நிகழ்ச்சிகளை யெல்லாம் பார்க்கும்போது, நாடாளுமன்ற நடை முறைகளைப் பின்பற்றுவதைவிட; அறிக்கையை வேகமாகத் தயாரித்து, அதிலுள்ள அம்சங்களை  வெளியிடும் அவசரம் மட்டுமே தெரிகிறது.

இந்த விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுப்பார்; அவரது முடிவை அரசு ஏற்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கபில் சிபல் அவர்கள் கருத்து தெரிவித் திருப்பதையும்;   திரு.முரளி மனோகர் ஜோஷி அவர்களே மீண்டும் பொதுக் கணக்குக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.  என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

90 வயதிலும் படிப்பு


கேள்வி :- கேரளாவில், 90 வயதான மூதாட்டி ஒருவர் நான்காம் வகுப்பு தேர்வு எழுதியதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தீர்களா?

கலைஞர் :- கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பாத்திமா பீவி என்பவர், சிறுவயதில் கல்வி கற்க முடியாத நிலை இருந்ததால், தற்போது வயது முதிர்ந்து, 90அய் எட்டிய நிலையிலும் நான்காம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளார்.  குறைந்தபட்சம் நான்காம் வகுப்பு தேறியிருந்தால் மட்டுமே, அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறமுடியும் என்ற நிபந்தனை உள்ளதால், அதுவும் தேர்வு எழுத அந்த மூதாட்டிக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது. 

இந்த வயதில் தேர்வு எழுத வேண்டுமென்ற ஆர்வம் காட்டிய பாத்திமா பீவியை நாம் பாராட்டி ஆகவேண்டும். அதனால்தான் அய்யன் திருவள் ளுவர், கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ? என்று கல்வியின் அரிய சிறப்பினை அழகாகச் சொல்லி யிருக்கிறார்.  கேள்வி :- 12ஆம் அய்ந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவினை தயாரிப்பதற்குரிய முயற்சிகள் தொடங்கி விட்டதாக செய்திகள் வருகின்றனவே?

12ஆம் அய்ந்தாண்டுத் திட்டம்


கலைஞர் :- 2012-2017ஆம் ஆண்டுகளுக்கான 12ஆம் அய்ந்தாண்டுத் திட்டத்திற்குரிய பணிகள் தொடங்கி விட்டன.  இந்தத் திட்டம் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதற்கான அணுகுமுறை அறிக்கையைத் தயாரித் திடும் முயற்சியில் மத்திய திட்டக்குழு ஈடுபட்டி ருக்கிறது.

அய்ந்தாண்டுத் திட்டங்களுக்கான வரைவுகளைத் தயாரிப்பதில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளிலிருந்து சற்று விலகி, அனைவரும் பாராட்டத்தக்க ஒரு மாற்றத்தை மத்திய திட்டக் குழு உருவாக்கியிருக்கிறது.  அதன்படி, தொடக்கம் முதலே மத்திய மாநில அரசுகளை மட்டுமல்லாமல், திட்டம் தயாரிப்பதில் ஈடுபாடும், அனுபவமும் உள்ள பொதுமக்கள், பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் பார்வையாளர்கள் என அனைவருடனும் கலந்தாலோசனை செய்யத் திட்டக் குழு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு மாறுதலாகும்.  இப்படிச் செய்வதால் திட்டம் தயாரிப்பதில் அனைவரையும் இணைத்துக் கொள்ள வும், பல்வேறு வகையான கருத்துக்களை அறிந்து கவனத்தில் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

தேர்தல் ஆணையமும் மாநிலத்துக்கொரு செயல்முறையும்

கேள்வி :- தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி களைப் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் பேசியிருக்கிறாரே?

கலைஞர் :- தேர்தல் நடந்த 5 மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.   மற்ற மாநிலங்களில் கட்சித் தொண்டர்கள், கட்சியின் சின்னம் பொறித்த தொப்பி அணிந்திருந்தனர்.  மேலும், பிளக்ஸ் பேனர், பொதுக்கூட்டம் என அனைத்தும் நடந்தன.  ஆனால், தமிழகத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி விதித்துள்ளது.  ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதி முறைகளை தேர்தல் ஆணையம் கடைப்பிடித் துள்ளது.  இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக் கப்படும் என்று திரு.ப.சிதம்பரம் அவர்கள் சிவகங்கையில் பேசியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழகத்தில் எத்தகைய கெடுபிடிகள் -  காவல்துறை நடவடிக்கைகள், தேடுதல் வேட்டைகள், ஜனநாயக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில் விதிக்கப்பட்ட வரையறைகள் -  தேர்தல் ஆணை யத்தால் கடைப்பிடிக்கப்பட்டன என்பதை அனை வரும் அறிவர். தேர்தல் ஆணையம் இந்திய அரச மைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. தேர்தல் ஆணையம் என்பது விருப்பு வெறுப்புகளை அகற்றி, அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஓர் அமைப்பாகும். ஒவ்வொரு மாநிலத் திலும் வெவ்வேறு அளவுகோல்களை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்திடக் கூடாது என்பதே சிதம்பரம் அவர்களின் கருத்தாகும். 

தேர்தல் ஆணையத்திற்கான அதிகாரங்கள் வரைய றுக்கப்பட்டு, முறைப்படுத்த வேண்டு மென்பதில், அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்க முடியாது.  ஒரே அமைப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுவது என்பது ஜனநாயகத்தை வளப் படுத்துவதற்கு உதவாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாள மின்றி ஓடுவதை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்க வில்லை. திரு.ப.சிதம்பரம் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பதைப் போல நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிப்பதுடன், இதுகுறித்து அரசமைப்புச் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனநாயகத்தின் மீதும், நமது அரசமைப்புச் சட்டத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து; உதாசீனப்படுத்தக் கூடியதல்ல!

கேள்வி :-2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை சம்மந்தமாக கழகத்தின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஜெயலலிதா மனம்போன போக்கில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

கலைஞர் :-    சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற முதுமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல் லையோ, ஜெயலலிதா அம்மையாருக்குப் பெரிதும் பொருந்தும்.  எந்தப் பிரச்சினையைப் பற்றி கருத்து தெரிவித்தாலும், தன்னை எல்லாவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதைப் போலவும், தூய்மை, வாய்மை இவற்றின் உருவகம் என்பதைப் போலவும், அறநெறிகளின் இருப்பிடம் என்பதைப் போலவும் கற்பனை செய்துகொண்டு; பிறர்மீது சேறு வாரி இறைப்பதில் அந்த அம்மையார் மிகவும் கைதேர்ந்தவர் என்பதைத் தமிழக மக்கள் நன்கறிவர்.

27.4.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழகத்தின் உயர்நிலைச் செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைப் பற்றி, கடைந்தெடுத்த தனது தீய எண்ணத்தின் வெளிப்பாடாக  அறிக்கை ஒன்றை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில் -  பூதத்தைப் பூனைக்குட்டி விழுங்கி விட்டதாகக் கூறுவதுபோல, அனுமானமாக பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமை கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்தப் பிரச்சினையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும் என்றும்; தி.மு.க. தலைமை மீது பழி சுமத்துவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஓர் அரசியல் பிரச்சினையாக்கி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியினரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்சினையைப் பெரிது படுத்தி, மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள் ளதைத் திரித்தும், திசைதிருப்பும் வகையிலும் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு எவ்வளவு என்பதை அறுதியிட்டு உறுதியாக இதுவரை யாராலும் அளவிட்டுக் கூற இயல வில்லை. 

1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று தனது அறிக்கையிலே சொன்ன தலைமைக் கணக்காயர், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன் விசாரணைக்காக ஆஜரானபோது, ஆதாரம் ஏதுமின்றி அனுமானத்தின் அடிப் படையிலேதான் இந்த இழப்பைச் சொல்லியி ருப்பதாக உறுதிப்படுத்தினார்; வெவ்வேறு கோணத்தில் இழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்குமா என்று கணக்கிட்டுப் பார்த்ததாகவும், அதிலே ஒரு கோணத்தில், வெறும் 57 ஆயிரத்து 666 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்தது என்றும் கூறியிருக்கிறார்.   மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த பா.ஜ. க.வைச் சேர்ந்த அருண் ஷோரி அவர்கள், வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சொல்லியிருக்கிறார். 

புலன் விசாரணை செய்து, குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ள சி.பி.அய்.,  22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு என்று குறிப் பிட்டிருக்கிறது.  நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி அவர்களோ 1 இலட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு என்று சொல்லியிருக்கிறார்.  இப்படி ஒவ்வொருவரும் தங்கள் அறிவுக்கும், கற்பனைக்கும் ஏற்ப இழப்பின் அளவை சொல்லியிருக்கிறார்கள்.  இப்படி கருத்தியலான (Notional)ஒன்றை வைத்துக் கொண்டு, ஊதி ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் - கழகத்தின் மீது தூசி விழுந்தாலும், அதைத் தூணாக்கும் நடவடிக்கையில் - இன்றைக்கு ஜெயலலிதாவைப் போலவே ஒருசில அரசியல்வாதிகளும், நாளேடு களும், ஊடகங்களும் எத்தனிக்கின்றன என்பதற்கு நிரூபணங்கள் எதுவும் தேவையில்லை.

ஒருசில நாளேடுகளையும், ஊடகங்களையும் தொடர்ந்து படித்தாலும், பார்த்தாலும், இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம்.   அவர்களது நோக்கமெல்லாம் எப்படியாவது இந்தப் பிரச்சினையைப் பயன் படுத்திக் கொண்டு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தி, அழித்துவிட வேண்டும் என்பதுதான்.

நாளேடுகள் எப்படிப்பட்ட எல்லை வரைக்கும் சென்றுவிட்டன என்பதை உணர்த்திட, இன்றைய நாளேடு ஒன்றி லிருந்து உதாரணம் ஒன்றைக் காட்டட்டுமா? இன்றைய தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், The air in his Gopalapuram fortress resembles that of a big unwieldy family preparing for an impending funeral’’ (பெரியதொரு குடும்பம் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்வதைப் போன்று கோபாலபுரம் கோட்டை தோற்றமளிக் கிறது) என்று எழுதியிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் எந்த அளவுக்கு கீழ்த்தரமானது, இழிவானது, விபரீதமானது என்பதை நான் விளக்கிடத் தேவையில்லை.

இப்படியெல்லாம் நாளேடுகளும், ஊடகங்களும் வேலிகளைத் தாண்டும்போது, அரசியல் சதுரங்கம் -  ஆதிக்க வட்டாரம் என்று விமர்சிப்பதில் என்ன குறை சொல்ல முடியும்? மனசாட்சியைத் தொட்டுப் பார்த்தால், அப்படிப்பட்டவர்களது உள்நோக்க மும், நச்சு எண்ணமும் நன்றாகப் புரியுமே! கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்று ஜெயலலிதா கேட்டி ருக்கிறார்.  சன் டி.வியில் என் மனைவி தயாளு அம்மாள் பெற்றிருந்த 20 சதவிகித உரிமையை முழுவதுமாக விட்டுக் கொடுத்ததன் மூலம் 100 கோடி ரூபாய் கிடைத்தது என்ற விவரங் களையெல்லாம் 2008ஆம் ஆண்டிலேயே நான் வெளியிட்டிருந்தேன்; அதை என் குடும்பத் தாருக்குப் பிரித்துக் கொடுத்ததையும் விபரமாகக் குறிப்பிட்டிருந்தேன்.

ஜெயலலிதாவின் கதை என்ன?

ஜெயலலிதா தன்னை மிகப்பெரும் வழக்கறி ஞராகக் கற்பனை செய்துகொண்டு, நிறைய கேள்வி களைக் கேட்டிருக்கிறார்.  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அவைகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்வது சட்டப்படி சரியாக இருக்காது.  ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 1.7.1991 அன்று அவரிடமிருந்த சொத்து களின் மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய்.  அய்ந்தாண்டுகள் ஆட்சி செய்தபிறகு, 30.4.1996.ல் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்.  ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கு, 1997ஆம் ஆண்டிலிருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது.  அதைப்போலவே, பிறந்தநாள் நன்கொடையாக வந்த 2 லட்சம் டாலர்களை, தனது சொந்தக் கணக்கில் வரவு வைத்துக்கொண்டதால், சி.பி.அய். தொடர்ந்த வழக்கு, 1997ஆம் ஆண்டி லிருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்குகளில் ஜெயலலிதா ஆஜ ராகாமல், ஒவ்வொரு தடவையும் ஏதாவது கற்பனையான காரணங்களின் அடிப்படையில் வாய்தாவுக்கு மேல் வாய்தா பெற்று, வழக்குகள் முடிவு பெற்று தீர்ப்புகள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக கடந்த 14 ஆண்டுகளாக இழுத் தடித்து வருகிறார். வழக்குகளைச் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என்று நிரூபித்துக் காட்டுவேன் என்று அடிக்கடி சண்டமாருதம் செய்யும் ஜெயலலிதா, இந்த வழக்குகளைத் தொடர்ந்து 14 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருப்பதேன்? என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிறைவுப் பகுதி முக்கியமானது.  இந்த வழக்கிலும் உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக் குழு தீர்மானித்து, அதற்குரிய நட வடிக்கைகளை மேற்கொள்வதென முடிவெடுக் கிறது என்று தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கழகம், ஜெயலலிதாவைப் போல் அல்லாது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, இந்த வழக்கு வளையத்திலிருந்தும் நிச்சயமாக வெளியே வரும். 

கேள்வி :- தமிழ்நாட்டில் மின் வெட்டைப் பற்றித் தொடர்ந்து ஏடுகள் எழுதுகின்றனவே?

தமிழ்நாட்டில் மட்டும்தான் மின்வெட்டா?

கலைஞர் :-  மின்வெட்டு என்பது தமிழ்நாட்டில் மாத்திரம் நிலவக்கூடிய ஒன்றல்ல.  இந்தியாவில் பல மாநிலங்களிலும் இதே நிலைதான் இன்றளவும் நீடித்து வருகிறது.  கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை அதிகச் செலவானாலும் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் முயற்சி செய்தாலும் கூட, அந்த முயற்சியில் முழு அளவுக்கு வெற்றிபெற முடியாமல் இருப்பதற்குக் காரணம் வேறு மாநி லங்களிலும் உபரி மின்சாரம் இல்லை என்பதுதான்.  நேற்று முன்தினம்கூட நாளேடுகளில் செய்தி ஒன்று வந்தது.  கடந்த 5 ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் நிருவாகம் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படும் பீகார் மாநிலத்தில் கூட, மின்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.  பீகார் மாநி லத்தில் பன்னிரெண்டுக்கும் மேலான நகரங்களில் மின்தட்டுப்பாடு காரணமாகத் தொடர்ந்து குழப்பமான நிலைமை ஏற்பட்டு வருகிறது. 

பல நாட்களாக மின்சார விநியோகமே இல்லை; எங்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை என்று பொதுமக்கள் கூக்குரல் எழுப்பும் அளவுக்கு பீகாரில் மின்தட்டுப்பாடு.  தமிழகத்தைப் பொறுத்தவரை இனி வருங்காலத்தில் மின்சார நிலைமை நிச்சயமாகச் சீராகும். தமிழகத்தில், 2011-2012ஆம் ஆண்டில் 14 ஆயிரத்து 224 மெகாவாட்டும், 2012-2013ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 517 மெகாவாட்டும், 2013-2014ஆம் ஆண்டில் 16 ஆயிரத்து 927 மெகாவாட்டும் மின் தேவை இருக்குமென மத்திய மின்துறை ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.  இப்படி வளரும் மின் தேவையை கருத்திலேகொண்டு, மின் உற்பத்தித் திறனைக் கூட்டுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றும் இன்றைய அரசு உறுதியளித்துள்ளது.

கேள்வி :- மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறாரே?

கலைஞர் :- மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் சம்மந்தமாக 2010ஆம் ஆண்டிலேயே என்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறேன்.  25.1.2010 அன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் பூவுலகின் நண் பர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர் சிவராமன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் திரு.ஆர்.செல்வம், நிருவாகி டாக்டர் ஜீவானந்தம், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர் நடிகை திருமதி.ரோகிணி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுத் தலைவர் திருமதி ஷீலு, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் திருமதி.சங்கீதா, திரு.ராம் ஆகியோர் சந்தித்து, மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர். 

அவர்களின் மனுவினை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் கலைஞர் அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றும், வேளாண்மைத் துறை அமைச்சர் இதுகுறித்து சட்டப் பேரவையில் விளக்கமாகக் கூறியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியதுடன் - எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரையில் இதனை விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் என்று குறிப்பிட்டதை நினைவு படுத்துகிறேன்.

-இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பதிலளித்தார்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...