Thursday, January 30, 2020

சீர்திருத்தவாதிகளுக்கு மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்

"மரணமடைவதற்கு தயாராக இருங்கள் துரோகிகளே" என்று நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட 15 பேருக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ், கருநாடக மேனாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் பிருந்தா காரத், மூடநம்பிக்கை விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிஜகுணானந்தா உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திரையுலகிலும், அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கடிதத்தில் 15 முக்கிய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கொலை மிரட்டல் கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட அனைவரும் கொலை செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் துரோகிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொலை மிரட்டல் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் அனைவரும் அந்தக் கடிதத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபரால் எழுதப்பட்டுள்ள இந்த கொலை மிரட்டல் கடிதத்தில், நிஜகுணானந்தா, "நீங்கள் உங்கள் சொந்த மதத்துக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறீர்கள். ஜனவரி 29-ஆம் தேதி உங்களுடைய இறுதிப் பயணத்திற்குத் தயாராக இருங்கள். உங்களைத் தொடர்ந்து கீழே பட்டியலில் உள்ளவர்களும் தங்களது இறுதிப் பயணத்தை மேற்கொள்வார்கள். அதற்காக, நீங்கள் அவர்களை தயார் செய்ய வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொலைமிரட்டல் பட்டியலில், நிஜகுணானந்தா, கருநாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ், பஜ்ரங் தள அமைப்பின் முன்னாள் தலைவர் மகேந்திர குமார், நடிகரும் சமூகச் செயற்பாட்டாளருமான சேதன் குமார், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பி.டி.லலிதா நாயக், பேராசிரியர் பகவான், சமூகச் செயற்பாட்டாளர் மகேஷ் சந்திர குரு, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் ஆலோசகர் தினேஷ் அமீன் மட்டு, எழுத்தாளர் சந்திரசேகர் பாட்டில், எழுத்தாளர் அக்னி ரீதர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா காரத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், "நிஜகுணானந்தா சுவாமியை கொலை செய்வோம் என்று அச்சுறுத்தும் ஒரு கோழை குழு கடிதம் எழுதியுள்ளது. இந்த பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளது..  இந்தியா சிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபலங்களுக்குக் கடிதம் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக கருநாடக உள்துறை அமைச்சர் பஸவராஜ் பொம்மை, "இந்த விவகாரம் குறித்து காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். எடியூரப்பா, முன்னாள் முதல்வாரக இருந்தபோது வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு எச்.டி.குமாரசாமி மற்றும் சித்தராமையா ஆகிய இருவருக்கும்   வழங்கப்படும்" என்று கூறினார். கருநாடகாவில், மூடநம்பிக்கை களுக்கு எதிராகவும், இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகவும் எழுதியும் பேசியும் வந்த கன்னடப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், எழுத்தாளருமான கல்புர்கி மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொலை வழக்குகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சுவாமி நிஜகுணானந்தா, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு கொலைமிரட்டல் விடுத்து கடிதம் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்துத்துவ அமைப்பினரால் பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளருமான கவுரிலங்கேஷ் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் இதே போன்ற ஒரு கொலை மிரட்டல் கடிதம் எழுதப்பட்டது, அதிலும் அடையாளம் தெரியாத நபர் எழுதியிருந்ததாக விசாரணை அமைப்பினர் கூறியிருந்தனர். அவ்வாறு கொலைசெய்யப்படுவோர் பட்டியல் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணை ஆவணமாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
யாரோ ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதுபற்றிப் பெரிதுபடுத்தலாமா என்று அலட்சியப்படுத்தக் கூடாது.
இதற்கு  முன் இப்படி எழுதப்பட்டவர்களால் கொலையும் நடத்தப்பட்டுள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் இதற்கு முன் சீர்திருத்தவாதிகளைப் படுகொலை செய்த மதவெறியர்களுக்குரிய தண்டனை கிடைக்கவில்லை.
வேறு வேறு பெயர்களில் அவர்கள் இருந்தாலும் அடிப்படையில் ஹிந்து அடிப்படைவாதிகளே. இதையெல்லாம் பார்ப்பன ஏடுகள் கண்டு கொள்ளாதது ஏன் என்பதையும் மற்றவர்கள் சிந்திக்க வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...