Friday, June 28, 2019

உயர்ஜாதியில் 'ஏழைகள்' அரசுப் பணிகளில் 28 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு மேலும் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடா?

மத்திய பி.ஜே.பி. அரசு செயல்படுவது யாருக்காக?
பசியேப்பக்காரர்களை வெளியே தள்ளி, புளியேப்பக்காரர்களை பந்தியில் அமர்த்துவதா?

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில், உயர் ஜாதியில் உள்ள ஏழைகள்''' 28 விழுக்காடுக்கும் அதிகமாக இருக்கும்பொழுது,மேலும் 10 விழுக்காடு இடங்களை உயர்த்தி அறிவித்திருப்பது என்பது பசியேப்பக்காரர்களைப் பந்தியிலிருந்து வெளியே தள்ளி, புளியேப்பக்காரர்களைப் பந்தியில் அமர வைக்கும் சமுகநீதிக்கு எதிரான மத்திய அரசின் திட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு இரையாகக்கூடாது  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

பெரியார் மண் - திராவிட பூமி - குறிப்பாக தமிழ் நாடு மற்ற பகுதிகளுக்கு சமுகநீதிக்கான கலங்கரை வெளிச்சத்தைப் பாய்ச்சியது - பாய்ச்சுகிறது.
தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு - எஞ்சிய 31 சதவிகித இட ஒதுக்கீடு என்பது திறந்த போட்டி - அனைத்து ஜாதியினரும் திறமை அடிப்படையில் போட்டியிடும் பொதுத் தொகுதியாகும்!

முன்னேறிய ஜாதியினர் எத்தனை சதவிகிதம்?

முன்னேறிய ஜாதியினரும் மற்றவர்களோடு இதில் போட்டியிட்டு இடங்களைப் பெறும் ஏற்பாடு தமிழ்நாட்டிலும் சரி, மற்ற வட மாநிலங்களிலும் முன் னேறிய ஜாதியினர் ஒரு சில மாநிலங்களில் கூடுதல் எண்ணிக்கை - உ.பி.யில் பார்ப்பனர் 16 சதவிகிதம், மற்ற ஜாதியினர் 12 சதவிகிதம் என்பது உயர்ஜாதியினர் சுமார் 20 சதவிகிதத்திற்கு அதிகமாக உள்ளனர்.
அவர்கள் ஏற்கெனவே கல்வி, உத்தியோகங்களில் விகிதாச்சாரத்திற்கு மேல் அதிகமான எண்ணிக்கை பெற்றுள்ளனர்.
இட ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS) என்று கூறி, 5 நாள்களில் ஓர் அரசமைப்புச் சட்டத் திருத்தம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக பா.ஜ.க. மோடி அரசு கொண்டு வந்து, உடனே நடைமுறைப்படுத்திட மாநிலங்களை அவசரப்படுத்துகிறது. கூடுதல் இடங்கள், நிதி உதவி தருகிறோம் என்று மாநிலங்களின் நாக்கில் தேனைத் தடவுகிறது.

வறுமை ஒழிப்புத் திட்டமல்ல - இட ஒதுக்கீடு!

"இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல - சமுக சமத்துவ சம வாய்ப்பை உறுதி செய்ய வஞ்சிக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்களைத் திறப்பதாகும். வேலை வாய்ப்பைத் தந்து, சமப்படுத்த செய்யும் நீண்ட கால ஜாதி நோய்க்கான சிகிச்சை முறையாகும்.'' இது உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாசகம்.

பந்தியில் யாருக்கு முன்னுரிமை?

தீவிர சிகிச்சைப் பிரிவில், உயிருக்குப் போராடும் நோயாளிகளைக் கொண்டு வந்து படுக்கை தந்து சிகிச்சை செய்வதே சமுகநீதி!
ஏற்கெனவே கொழுத்துள்ள - ஆரோக்கியமாக உள்ள மருத்துவப் பரிசோதனைக்கு வந்துள்ளவர் களை அங்கே அனுமதித்து - நோயால் பாதிக்கப்பட்ட வர்களை வெளியே தள்ளுவதாகும்.
பசியேப்பக்காரர்களுக்குப்'' பந்தியில் முன்னுரிமை தருவதுதானே நியாயம்? புளியேப்பக்காரர்களை'' முதல் பந்தியில் அமர வைக்கலாமா? அவர்கள் அதிகம் சாப்பிட்டு அஜீரணக் கோளாறினால் அவதிப் படுகிறவர்கள் அல்லவா?

ஆங்கில இதழின் ஆய்வு தரும் புள்ளி விவரம்

மோடி அரசு வழங்கிய முன்னேறிய ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு (ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் சம்பள ஏழைகள்' வீடு, நில புலம் உள்ள ஏழைகள், வறுமையாளர்களாம் - மத்திய அரசு ஆணைப்படி) வழங்குவதற்கு எந்த நியாயமும் இல்லை. மும்பையிலிருந்து வெளிவரும் எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லியில்'' (Economic and Political Weekly), (ஜூன் 8, பக்கம் 12) 5 பல்கலைக் கழக ஆய்வாளர்கள், அறிஞர்கள் எழு தியுள்ள ஓர் கட்டுரையில் வெளிவந்துள்ள தகவல்கள்.
மத்திய கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் 10 சதவிகிதம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு ஒதுக்கி அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரக் காரணம் அவர்களுக்குரிய இடங்கள் கிடைக்கவில்லை என்று கூறியே!

ஆனால், உண்மை நிலை என்ன?

இந்த 5 ஆய்வாளர்களும் National Institution Ranking Frame work (NIRF) என்ற மத்திய மனிதவள (கல்வி) துறையின்கீழ் இயங்கும் - அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் துறைகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய ஜாதி மாணவர்கள் எண்ணிக்கை பற்றிய இந்தியா முழுவதும் 445 உயர்கல்வி நிறுவனங்களில் (2018 கணக்குப்படி) ஆய்வு செய்ததில், அவர்கள் ஏற்கெனவே 28 சதவிகித இடங்களைப் பெற்றுள்ளனர், கல்வி கற்று வருகின்றனர் (There is no Under Representation - in fact over represention) என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்!

ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவர் 

இந்த 10 சதவிகிதம் சேர்ந்தால், புளியேப்பக்காரர் களாகி விடுவர். மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு மேற்பட்ட ஏகபோகத்தை அவர்கள் அனுபவிக்கின் றனர்.
இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் போட்டி யிட்டுப் பெற்ற இடங்கள் வாய்ப்புகள் வெகுவாகக் குறைவாகிவிடும் பேராபத்து பொதிந்துள்ளது!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டு மானத்தை உடைத்து நொறுக்கும் (Demolishing the basic structure of the Constitution of India) முயற்சியே இந்தப் பொருளாதார அடிப்படையிலான திட்டமாகும்.

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே அவசரமா?

வழக்குகள் உயர்நீதிமன்றங்களில், உச்சநீதிமன் றத்தில் தி.மு.க., தி.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல சமுகநீதி அமைப்புகள் போட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எப்படியும் இந்த ஏகபோகத்தை உள்ளே திணித்துவிடவே - மத்திய ஆட்சி அவசர கூடுதல் நிதி ஒதுக்கீடு, அவசர கூடு தல் இடங்கள் என்று நாக்கில் தேனினை மாநில அரசுகளுக்கும், தனியார் கல்வித் துறைகளுக்கும் தடவுகிறது.
இதிலும் தமிழ்நாடுதான் திராவிடர் இயக்கம்தான் வழிகாட்டி. விழிகளைத் திறக்க வைக்கவேண்டிய விவேகமும், வேகமும் நிறைந்த கடமையாற்ற வேண் டிய நிலையில் இருக்கிறது.

எச்சரிக்கையாக இருக்கவேண்டும் தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு இதில் உறுதியாக இருக்கவேண்டும். முதலில் சிறியதாகத்தான் - கன்னக் கோல் ஓட்டை தொடங்கும்; பிறகு சுவரே இடிந்து விழுந்துவிடும் - எச்சரிக்கை - ஏமாந்துவிடக்கூடாது.

கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
28.6.2019

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...