Monday, July 3, 2017

அரசியலில் நல்ல இளைஞர்கள் சேர்ந்து நல்ல மாற்றத்தை உருவாக்க முடியாதா?

குன்னூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பயிற்சியாளர்களின் கேள்விகளுக்குத் தமிழர் தலைவர் அளித்த விடைகள்

குன்னூர், ஜூலை 2-  ரத்தம் சம்பந்த உறவைவிட கொள்கை உறவுதான் முக்கியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜூன் 24, 25 ஆகிய நாள்களில் குன்னூரில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிறைவு நாளான 25.6.2017 அன்று பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற பயிற்சியாளர்களின் கேள்விகளுக்குத்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.
அவ்விவரம் வருமாறு:
கேள்வி: நீட் தேர்வு வேண்டாம் என்று மக்களுக்கு எளிமை யாக எப்படி புரிய வைப்பது?
பூங்குழலி, கோவை மாவட்டம்
தமிழர் தலைவர்: தொடர்ந்து பொதுக்கூட்டங்கள், கருத் தரங்கங்கள் - அதோடு பிரச்சார அணியை நாம் நடத்தியிருக் கிறோம். மேலும் சிறிய புத்தகங்கள் வெளியிட்டு, கேள்வி - பதில் போன்று போட்டிருக்கிறோம். அந்த புத்தகங்களை பரப்பினாலே போதும். முதலில் நீங்கள் அதனைப் படிக்கவேண்டும். நீட் தேர்வு ஏன் கூடாது? என்பதற்கான ஆதாரமான செய்திகள் நிறைய இருக்கின்றன.
இன்றைக்கு விடுதலையில்கூட அறிக்கை வெளிவருகிறது. மாலையில் நடைபெறுகிற பொதுக்கூட்டத்திலும் நீட் பற்றித்தான் விளக்கமாக உரையாற்ற இருக்கிறேன்.
ஆகவே, இப்பொழுது எவ்வளவு பரப்ப வேண்டுமோ, அந்த அளவிற்குப் பரப்புகிறோம். உங்களுக்குத் தெரியும், மற்ற அரசியல் செய்திகளை ஊடகங்களில் பெரிதாகப் போடுவார்கள். நம்முடைய செய்திகள் என்றால், இருட்டடிப்பார்கள். அதையும் தாண்டித்தான் நம்முடைய பிரச்சாரத்தை செய்கிறோம்.
நீட் பிரச்சினைக்காக கருத்தரங்கம், மாநாடு, வாகனப் பேரணியை நடத்தியிருக்கிறோம். திரும்பத் திரும்ப நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம். பேசிக் கொண்டிருக்கிறோம். புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். தொடர்ச்சியாக போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். நீட் தேர்வு நடைபெற்று விட்டதே என்று மனம் தளரவேண்டாம் - போராடுவதை நிறுத்திவிடலாமா என்று நினைக்கக்கூடாது. வெற்றி அடையும்வரை நம்முடைய போராட்டம் தொடரும்.
தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார். அதனை எதிர்த்துப் போராடிய இயக்கம் திராவிடர் கழகம்தான் - நம்மோடு திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்தது. 21 ஆண்டுகளாகப் போரடியதின் விளைவாக அதில் வெற்றி அடைந்தோம்.
அதனால், மனம் தளரவேண்டிய அவசியமில்லை. இதில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்களுக்கு சொல்வோம். முதலில் உணராத பெற்றோர், இப்பொழுது உணர்ந்துவிட்டனர்.
முதலில் இதுபோன்ற நோய்கள் எல்லாம் வரும் என்று சொன்னால், சில பேர் அலட்சியமாக இருப்பார்கள். நோய் வந்து, அந்த நோயினால் சங்கடப்படும்பொழுதுதான், அதனைத் தீர்ப்பது எப்படி என்று கேட்பார்கள். அதுபோன்று இப்போது நோய் வந்துவிட்டது; நீட் தேர்வு முடிவு வந்துவிட்டது. 25 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. தேர்வு விழுக்காடு மிகவும் குறைவு.
பயிற்சி பெற்றவர்களால்கூட வெற்றி பெற முடியவில்லை. இன்னும் சில நாள்களில் திராவிடர் கழகம் ஒத்தக் கருத்துள்ள வர்களை எல்லாம் அழைத்து அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க உள்ளோம்.
ஆகவே, நம்முடைய பணி என்பது மிகத் தெளிவானது. நீங்கள் எல்லோரும் ‘நீட்’டைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள், உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மற்றவர்களுக்கும் கொடுங்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேறக் கூடாது என்பதற்காக...
கேள்வி: மத்தியில் ஆளுகின்ற பி.ஜே.பி. அரசானது ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேறக் கூடாது என்ற ஒரே குறிக்கோளுடன் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறை. நம் மக்களுக்கு இது ஏன் தெரியவில்லை? இதை நம் மக்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது?
அன்புமதி, காரமடை
தமிழர் தலைவர்: அதாவது, நோய் வந்தது அறியாமை. அறியாமையில் இருக்கிறவர்களை அறிந்துகொள் என்று சொல்வது எளிதல்ல. மிகவும் கடினமானது.
படிப்பு சொல்லிக் கொடுப்பவர்களை எல்லாம் அடிக்கிறார் கள். இன்றைக்கு மதம் அதற்குக் குறுக்கே நிற்கிறது. பெண்கள் படிக்கக்கூடாது என்பதற்கு மதம் குறுக்கே நிற்கிறது என்றால், நோபல் பரிசு பெற்ற மலாலா எப்படி உலகம் முழுவதும் தெரியக்கூடிய அளவிற்கு வந்தார்.
தலிபான் என்கிற மதவெறியர்கள் - அவர்களுடைய மதக் கோட்பாட்டின்படி பெண்கள் படிக்கக்கூடாது என்று பெண் களைத் தடுத்தான்.
அதற்கு முன்பாக, அசல் மனுதர்மத்தில் சூத்திரர்கள் படிக்கக்கூடாது; பஞ்சமர்கள் படிக்கக்கூடாது; பெண்கள் படிக்கக் கூடாது என்று இருந்தது. ஆனால், இப்பொழுது அதெல்லாம் மாறிவிட்டது. இடைவிடாத நம்முடைய பிரச்சாரம், போராட்டத் தினால்.
அதனால்தான், திராவிடர் கழகத்தினுடைய முறை - கடி காரத்தினுடைய பெண்டுலம் இங்கும், அங்கும் நகர்ந்துகொண்டே இருப்பது போன்று பிரச்சாரம்- போராட்டம், போராட்டம்- பிரச்சாரம் என்று இப்படியே நடந்துகொண்டிருக்கும்.
நாம் நம்பிக்கை இழக்கவேண்டிய அவசியமில்லை. நன்றாக அதனை செய்யலாம். நீங்கள் எல்லாம் கொஞ்சம் அமைதியாக ஒரு செய்தியை நினைத்துப் பாருங்கள்.
தந்தை பெரியார் என்கிற தனி மனிதர், அய்யோ நம்மால் முடியுமா? என்று நினைத்திருந்தால், இன்றைக்கு இவ்வளவு பெரிய இயக்கம் - உலகளாவிய இயக்கத்தை உருவாக்கி இருக்கமுடியுமா?
நாம் இன்றைக்கு வெற்றியடைந்து கொண்டிருக்கிறோம் - அந்த வெற்றியின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால், நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்கள் அவதிப்படும்போதுதான் அதனை உணருவார்கள்.
நாம் எல்லோரும் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கு என்ன அடையாளம்? மூக்கின் அருகே கையை வைத்துப் பார்த்தால், சுவாசிக்கிறோம். அப்படி சுவாசிக்கின்றபோது காற்றை உள்ளே இழுக்கிறோம்; வெளியில் விடுகிறோம்.
உள்ளே காற்றை இழுக்க முடியாவிட்டாலும், வெளியில் விட முடியாவிட்டாலும் அந்த மனிதன் செத்துப் போனவன் என்பதாகும்.
ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்பொழுது ஆக்சிஜனை வைத்து அவன் சுவாசிக்க உதவுவார்கள். அதனை எடுத்து விட்டால், சுவாசிக்கமுடியாது. அப்பொழுதுதான் தெரியும், பிராண வாயுவுக்கு, சுவாசக் காற்றுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை அப்பொழுதுதான் அவன் உணருவான். ஏனென்றால், அவன் அவதிப்பட்டிருக்கிறான்.
அதுபோன்று சில நேரங்களில், பொதுவாக இருக்கிறவர் - சராசரி அறிவுக்கு மேல் இருக்கிறவர் - வருவதற்கு முன் காப்பார்கள். சில பேர் வந்த பின்தான் அதனை செய்வார்கள்.
ஆகவே, நம்முடைய பணி என்பது தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். உணராத மக்களை உணர வைக்கவேண்டும்.
நாம் 2014 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தால் என்ன நடக்கும்? என்பதை அன்றைக்கே நாம்தான் இடையறாமல் சொன்னோம்.
அன்றைக்குப் பல இளைஞர்கள், வாட்ஸ்அப் இளைஞர்கள், பேஸ்புக் இளைஞர்கள் எல்லாம், மோடி வந்தால் வளர்ச்சி வரும். வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்ப்பார்கள் என்று நினைத் தார்கள். 18 வயது முடிந்தவர்கள் எல்லாம் ஏமாந்து வாக்களித்தனர். மோடியும் ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை. வறுமைக் கோடு ஒழியவில்லை.
எனவே, நாம் மக்களை விழிப்படைய செய்யவேண்டும்; மக்கள் பெரிய அளவில் இருக்கலாம்; அதனைக் கண்டு நாம் மலைக்கவேண்டாம்; எவ்வளவு பெரிய பலூனாக இருந்தாலும், நம்முடைய குண்டூசி அதனை காலி செய்யும் என்கிற நம்பிக்கையோடு அந்தப் பணியைத் தொடருவோம்.
பகுத்தறிவினை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே, ஏன்?
கேள்வி: கடவுள் இல்லை என்று பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தந்தை பெரியார் காலந்தொட்டு நீண்ட காலம்  செய்கிறோம். பொதுமக்கள் இன்னும் அதனை ஏற்றுக்கொள்ள மறுக் கிறார்களே, ஏன்?
பவித்ரா, கோவை
தமிழர் தலைவர்: நம்முடைய நாட்டில் நிறைய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஏராளமான மருத்துவர்கள், புதிய மருந்துகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், இன்னும் நோய் இருக்கிறது; புதிய புதிய நோய்கள் வருகின்றன. மருத் துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மருத்துவமனைகளை மூடிவிடலாம் - மருத்துவக் கல்லூரிகள் தேவையில்லை - மருந்துகள் தேவையில்லை என்று விட்டு விடுவோமா? விடமாட்டோம் அல்லவா!
ஆகவேதான், அது நடந்துகொண்டுதான் இருக்கும். நாம் செய்கின்ற பிரச்சாரத்தினால் பலன் இருக்கிறது. நோபல் பரிசு வாங்குகிறவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள்தான் உலகிலேயே அறிவாளிகள். அது போன்று நோபல் பரிசை பகுத்தறிவுக்கு வாங்குகிற இயக்கம் இந்த இயக்கம்தான். அதனால் அந்தப் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே!
கேள்வி: தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே, என்ன செய்யலாம்?
பவதாரணி, கோவை
தமிழர் தலைவர்: அதற்கு நாம் போராட வேண்டும்; ஆட்சி யின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். ஏற்கெனவே நாம் சொல்லி கலைஞர் ஆட்சிக் காலத்தில், சமச்சீர்கல்வி. தனியார் பள்ளிகளில் கட்டாயம் தமிழ் மொழியை சொல்லிக் கொடுக்கவேண்டும் என்கிற ஆணையைப் போட்டிருக்கிறார்கள். பல பள்ளிகள் அந்த ஆணையைக் கடைபிடிப்பதில்லை. ஆகவே, நாம் அதனை அந்தப் பள்ளிகள் செயல்படுத்துவதற்குப் போராடுவோம். தமிழ் மொழி படிக்காமல் தமிழ்நாட்டில் பட்டம் வாங்குகிற நிலையைப் போக்கவேண்டும்.
தாய்மொழி நம்முடைய மொழி. நம்முடைய பண்பாட்டி னுடைய மிகப்பெரிய நுழைவு வாயில். ஆகவே, அதனைக் காப்பாற்றுவதற்கு அந்தப் பருவத்தில் திராவிடர் கழகம் முயற்சி களை எடுப்பதில் சளைக்காது, பின்வாங்காது.
ஜாதி மறுப்புத் திருமணத்தால் மட்டும்
ஜாதி ஒழிந்துவிடுமா?
கேள்வி: ஜாதி மறுப்புத் திருமணத்தால் மட்டும் ஜாதி ஒழிந்துவிடுமா? வேறு என்னென்ன வழிகளில் ஜாதி ஒழியும்?
அறிவுமணி, காரமடை
தமிழர் தலைவர்: அதற்குத்தான் தந்தை பெரியார் சொன்ன கருத்து. ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் மட்டுமே ஜாதி ஒழியாது. ஆனால், ஜாதியை ஒழிக்க மட்டுமே என்று நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஒழியவேண்டும் என்று ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்.
நோய் நாடி, நோய் முதல்நாடுவதற்கு அய்யா என்ன சொன்னார், கீழ்ஜாதிக்காரனை தொடக்கூடாது என்று இருந்த நிலை மாறி, இப்பொழுது தொடக்கூடாது என்று சொன்னால் தண்டனை என்று இருக்கிறது. அதுபோன்ற நிலை வந்தாகி விட்டது. இன்றைக்குப் பெரிய மாறுதல்கள் வந்திருக்கின்றன. என்றாலும், இன்னும் அந்தப் பழைமை மனப்பான்மை இருக்கிறது.
ஆகவேதான், அய்யா என்ன சொன்னார் என்றால், ஜாதிப் பாம்பை அடித்தேன். வைக்கத்தில் ஆரம்பித்து, சேரன்மாதேவி குருகுலத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கூடாது என்று சொன்னார்கள்; அதைப்பற்றியெல்லாம் சொல்லியிருப்பார்கள் உங்களுக்கு. பிறகு அந்த வித்தியாசம் எல்லாம் மாறியது. இப்படி வளர்ந்து எல்லாம் வந்தாலும், அந்த ஜாதிப் பாம்பு மிகவும் பாதுகாப்பான இடத்தில் சென்றிருக்கிறது. அது எந்த இடம் என்றால், கோவில் கருவறை.
தாழ்த்தப்பட்ட ஒருவர் இப்பொழுது குடியரசுத் தலைவர் வேட்பாளராகி இருக்கிறார். அவருக்குப் போட்டியாக இன் னொரு தாழ்த்தப்பட்ட வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டு தாழ்த்தப்பட்டவர்களைப் போட்டி போடக்கூடிய அளவிற்கு எல்லா கட்சியினரும் அவர்களைத் தேடிப் பிடித்தி ருக்கிறார்கள் பாருங்கள், அதுவே பெரியாருக்குக் கிடைத்த வெற்றி! அதுவே நம்முடைய இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி.
பெரியார் வடபுலங்களில் பயணம் செய்திருக்கிறார். ஆனா லும், தாழ்த்தப்பட்ட ஒருவர் அய்.ஏ.எஸ். அதிகாரியாக முடிகிறது; உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆகமுடிகிறது; குடியரசுத் தலைவராக ஆக முடிகிறது. ஆனால், அர்ச்சகராக முடியவில்லை.
அய்.ஏ.எஸ். பதவியைவிட, குடியரசுத் தலைவர் பதவியை விட அர்ச்சகர் பதவி பெரிய பதவியா?
குடியரசுத் தலைவரே, சட்டையைக் கழற்றிக்கொண்டு அர்ச்சகரின் முன் நிற்கிறார்.
அந்த அளவிற்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு என்ன காரணம்? கருவறைக்குள் இருக்கிற ஜாதிதான்.
அதற்காகத்தான் தந்தை பெரியார், கடவுளை மற என்றார். கடவுள் கருத்தினால்தான்,  ஜாதியைக் காப்பாற்றுகிறார்கள். கடவுள், மதம், ஜாதி, புராணம், சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற் றையும் மாற்றி, கடைசியில் எங்கே வந்தார் பெரியார் என்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்.
எனவேதான், எல்லா முயற்சிகளையும் செய்தால்தான் ஜாதி ஒழியும். சில பேர் கேட்பார்கள், நாம் இவ்வளவு பாடுபட்டு ஜாதி ஒழியவில்லையே என்று.
திடீரென்று தூக்கிப் போடுகிற விஷயமா ஜாதி. அது மனதிற்குள் புகுந்துகொண்டிருக்கிறது. அதனை வெளியேற்ற வேண்டும். அதுவும் எவ்வளவு காலமாக இருக்கிறது. அய்யா யிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது.
எவ்வளவு பெரிய பாதுகாப்போடு ஜாதி இருக்கிறது - சாஸ்திர பாதுகாப்பு, கடவுள் பாதுகாப்பு, மத பாதுகாப்பு, அரசாங்கப் பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்போடு இருக்கிறது. ஆகவே, இதை யெல்லாம் தாண்டி நாம் அதனை ஒழிக்கவேண்டும் என்று சொன்னால், நம்முடைய இயக்கம் ஆரம்பித்து எவ்வளவு ஆண்டுகளாகின்றன. நூறு ஆண்டுகள். இதில் நமக்கு பல இடைஞ்சல்கள். நமக்கு விளம்பரங்கள் கிடையாது. அப்படியி ருந்தும் நாம் இந்த அளவிற்கு வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால், நிச்சயமாக எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
ஏன் ராமனைப்பற்றி பேசுகிறோம், ஏன் கிருஷ்ணனைப்பற்றி பேசுகிறோம், ஏன் கடவுள்களைப்பற்றி பேசுகிறோம், ஏன் இந்து மதத்தைப்பற்றி பேசுகிறோம்? சில பேர் சொல்வார்கள், இந்து மதத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறோம் என்று.
அப்படியில்லை. எங்கே ஜாதியிருக்கிறதோ, எங்கே நோய் இருக்கிறதோ, அதற்கு சிகிச்சை அளிக்கிறோம். எங்கே குப்பை கள் இருக்கிறதே, அங்கே பெருக்குகிறோம். எங்கே இழிவு இருக்கிறதோ, அதனை நீக்கவேண்டும் என்று நினைக்கிறோம்.
ஆகவே, நாம் தொடர்ந்து அதற்காகப் போராடிக் கொண்டி ருக்கிறோம். கலப்பு மணம் என்று சொல்லக்கூடிய ஜாதி மறுப்புத் திருமணத்தினால் மட்டும் ஜாதி ஒழியாது என்பது உண்மை. மற்ற முயற்சிகளையும் செய்யவேண்டும். அந்த முயற்சிகளில் திராவிடர் கழகம் மிகவும் குறியாக இருக்கிறது, ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியல் மாற்றத்தை இளைஞர்கள் உருவாக்கலாமே!
கேள்வி: அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுக்காமல், அரசியலில் கொள்கை உள்ள இளைஞர்கள் சேர்ந்து, ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்கலாம் அல்லவா?
பிரபாகரன், கோவை
தமிழர் தலைவர்: அதற்காகத்தான் திராவிடர் கழகம் அடையாளம் காட்டுகிறது - இவர்களை தேர்ந்தெடுங்கள் என்று அடையாளம் காட்டுகிறோம். நாம் ஒன்றும் ஒதுங்கிப் போகவில்லையே. யார் வேண்டுமானாலும் வெற்றி பெறட்டும் என்று நினைப்பதில்லையே! ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். பொதுக்கூட்டத்தில்கூட அதனை சொல்வோம், அந்தப் பழமொழியை மற்றவர்கள் சொல்வார்கள், திராவிடர் கழகம் அப்படி இருக்காது.
ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று அலட்சியமாக இருக்காது திராவிடர் கழகம். அதற்குப் பதிலாக, ராமன் ஆட்சியாக இருந்தால், அதனை ஒழிப்போம். ராவணன் ஆட்சியாக இருந்தால், அதனைக் காப்பாற்றுவோம் என்போம்.
கோவில்களை அதிகமாகக்
கட்டிக் கொண்டு இருக்கிறார்களே!
கேள்வி: கோவில்களை அதிகமாக கட்டிக்கொண்டே இருக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்?
பிரகாஷ், மேட்டுப்பாளையம்
தமிழர் தலைவர்: முட்டாள்தனம்தான் அதற்குக் காரணம். சில பேருக்கு பிடித்த ஆசை காரணம்; அறியாமை காரணம். இரண்டாவதாக, தவறு செய்கிறவன் அதிகமாகி இருக்கிறார்கள் என்று அர்த்தம். ரொம்ப பக்தியாக இருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அயோக்கியப் பயல் என்று அர்த்தம். அதனை மூடி மறைப்பதற்குத் தயாராக இருக்கிறான் என்று அர்த்தம்.
அதற்கு மதங்களில் மிகவும் வசதியாக வைத்திருக்கிறார்கள். எப்படி என்றால், ஒரு மதத்துக்காரர் சொல்கிறார், நீங்கள் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வந்து பூஜை செய்து, உண்டி யலில் காசு போட்டுவிட்டால், இந்த வாரம் செய்த பாவம் முழுவதும் போய்விடும் என்கிறார்.
இன்னொரு மதத்துக்காரர் சொல்கிறார், வியாழக்கிழமை பாத்தியா ஓதினால், உங்கள் பாவம் போய்விடும் என்கிறார்.
இன்னொருவர் சொல்கிறார், ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் நீங்கள் வந்து பாவ மன்னிப்பு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார். திங்கள் கிழமையிலிருந்து செய்கின்ற பாவம் அடுத்த வாரக் கணக்கில் போகும், அதனால் நீங்கள் தாராளமாகப் பாவம் செய்யலாம்.
இன்னொருத்தர் வருகிறார், நம்மாள் - அர்த்தமுள்ள இந்து மதம் பாருங்கள் - இப்படி சில்லறை சில்லறையாகப் பாவத்தை கழிக்கவேண்டாம் - 12 ஆண்டுகள் செய்கின்ற பாவங்களை சேர்த்து வைத்துக்கொண்டு, மகாமகம் என்கிற மூத்திரக் குளத்தில் மூழ்கி எழுந்தீர்கள் என்றால், எல்லா பாவங்களும் போய்விடும் என்கிறார்.
இப்படி ஒழுக்கக்கேட்டிற்கு உரிமம் கொடுத்துவிட்டால், எப்படி அவன் ஒழுங்காக இருப்பார்கள்.
இவ்வளவு பாவிகள் இருக்கிறார்கள், இவ்வளவு திருட்டுப் பயல்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சாமி சிலை திருடுகள் நடைபெறும்.
கோவில்கள் இருந்தால்தான் அங்கிருக்கும் சிலைகளைத் திருடுவதற்கு வசதியாக இருக்கும்.
புரடெக்ஷன் - இவன் கோவிலை உண்டாக்குவது
கன்சக்ஷன் - நுகர்வோர் யார் என்றால், முட்டாள் பயல் போன்று கீழே விழுந்து எழுந்திருக்கிறான்.
டிஸ்ரிபியூசன் - வெளிநாடுகளுக்கு அந்தச் சிலைகளைக் கடத்துகிறார்கள்.
திருடியே ஒரு கோவில் கட்டியிருக்கிறான் ஒருவன் - தண்டனை பெற்று சிறையில் உள்ளான்.
நேற்று வந்த ஒரு செய்தி என்னவென்றால், மரகதலிங்கத்தைத் திருடியிருக்கிறார், அதனுடைய மதிப்பு 2 கோடி ரூபாயாம்.
உலகத்திலேயே லிங்கத்தை கடவுளாக்கியவன் இவன்தான்; கும்பிடுகிறவனும் இவன்தான்; அதனை ஏற்றுமதி செய்கின்ற வனும் இவன்தான்.
அதனால் தொழில் ரீதியாக இருப்பதினால், சில பேருக்கு அந்த முகத்திரை தேவை - சில பேருக்கு மயக்க மருந்து தேவை - சில பேருக்கு ஏமாற்றுவதற்கு பிசினஸ் தேவை - இவை எல்லாவற்றிற்கும் கடவுள் தேவை.
ஆகவேதான், காந்தியார் சொன்னார், கோவில்கள் என் பவை விபச்சார விடுதிகள் என்று.
இயேசு நாதர் சொன்னார், கோவில்கள் என்பது திருடர் களுடைய குகை என்று. இப்படி சொல்லிவிட்டு, அவர் திருடர் களுடைய குகையை அதிகப்படுத்திக் கொண்டு போகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? திருட்டுப் பயல்கள் அதிகமாகி இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
கோவில்கள் விபச்சார விடுதிகள் என்றார்களே - அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்: ஏரி காத்த இராமர் கோவில் என்கிற கோவிலில், ஒரு பெண்ணை பாலியல் வன் முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். காஞ்சிபுரம் தேவநாதன் அர்ச்சகன் கருவறையில் பெண்களிடம் தவறாக நடந்தது ஊரறிந்த விஷயம்.
லாட்ஜில் விபச்சாரம் நடந்தால் காவல்துறையினர் பிடிப்பார் கள்; காரில் விபச்சாரம் நடந்தால் எட்டிப் பார்த்து கண்டுபிடித்து விடுகிறார்கள். மிகவும் பாதுகாப்பான இடம் எதுவென்றால் விபச்சாரத்திற்கு கடவுள் இருக்கிற கருவறை.
காஞ்சிபுரத்தில்தான், பெரியவாள், பழைய பெரியவாள், புதிய பெரியவாள், சின்னவாள், அவாள், இவாள் எல்லாம் இருக்கிற இடம்; இவ்வளவு அவாளும் இருக்கிற ஊரில், இவ்வளவு அசிங்கம் நடந்திருக்கிறது. அதனால், விபச்சாரத்திற்குப் பாதுகாப்பான இடம் எது கோவில். அதனால்தான், புதிது புதிதாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கவேண்டும் என்றால், அதற்காக உரிமம் பெறவேண்டும். கோவில் கட்டுவதற்கு உரிமம் தேவையில்லை. முட்டுக்கல்லை வைத்தால் போதும்.
செங்கல் வண்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அதிலிருந்து கீழே விழுந்த இரண்டு செங்கலை எடுத்து சாலையில் ஓரத்தில் போடுவதைவிட்டுவிட்டு, அதனை நட்டு வைத்து, அதன்மேல் கொஞ்சம் மஞ்சள், குங்குமத்தைத் தடவி, ஒரு எலுமிச்சை பழத்தை வைத்தால், ஒருவன் சுற்றி வருவான், ஒருவன் பத்து பேராவான், பத்து பேர் நூறு பேராவான், நூறு ஆயிரம் பேர் ஆவான். கொஞ்ச நாள் கழித்து அங்கே ஒரு உண்டியலை வைத்து வசூல் செய்வார்கள்.
கொஞ்ச நாள் கழித்து, இந்த செங்கலீஸ்வரனிடம் சென்றால், கல்லூரியில் இடம் கிடைத்துவிடும்; நீட் தேர்வில் பாசாக வேண் டுமா? செங்கலீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள் என்பார்கள்.
எனவே, இந்த அறிவு பலவீனம் - ஆகவே, கோவில்கள் என்பது மயக்க பிஸ்கெட்டு. பல பேருக்கு அது வருமானம். அத்தனை வசதியும் அங்கேதான் இருக்கிறது. காவல்துறை யினரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். நடு ரோட்டில் குடிசை போட்டால் விடமாட்டார்கள்; ஆனால், நடு ரோட்டில் கோவில் கட்டுங்கள், அவரே ஒரு கும்பிடு போட்டுச் செல்வார். ஆகவே, இத்தனைக் கோளாறுகளுக்கும் அது இடமாக இருக்கிறது.
பெரியாரை உலகமயமாக்க
என்ன செய்யவேண்டும்?
கேள்வி: பெரியாரை உலகமயமாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
ஜூனிதா தேவி, வெள்ளக்கோவில்
தமிழர் தலைவர்: உலக மயமாகிக் கொண்டிருக்கிறார் பெரியார். அதனுடைய அடையாளம்தான் அடுத்த மாதம் ஜூலையில் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகமும் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் - பெரியார் பன்னாட்டமைப்பு ஆகியவை இணைந்து, பெரியார் சுயமரியாதை மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலிருந்து 50 பேர் செல்கிறோம். உலகின் பகுதியிலிருந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் நாம் கும்மிடிப்பூண்டியை தாண்டியது கிடையாது. ஆனால், உலகளாவிய நிலையில் இருப்பதினால் தான், யுனெஸ்கோ பெரியாருக்கு விருது அளித்தது.
ஆகவேதான், பெரியாரை உலகமயமாக்கும் பணி என்பது இருக்கிறதே, அது மிகவும் சிறப்பானது. யாருடைய தத்துவமும், உதவியும் இல்லாத அளவிற்கு தந்தை பெரியார் உலகமயமாகி வருகிறார். காரணம், பெரியாருடைய தத்துவம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம். விஞ்ஞானத்தை யாரும் பரப்புவதற்காக முயற்சி எடுப்பதில்லை.
விஞ்ஞான கண்டுபிடிப்பான செல்போனை வாங்குங்கள், வாங்குங்கள் என்றா சொல்கிறார்கள். யாரோ ஒரு இரண்டு பேர் வாங்கினால், பத்து பேர் வாங்குகிறார்கள். இன்றைக்கு செல்போன்களுக்கு டிமாண்ட் இருக்கிறது.
அதுபோன்று பெரியார் என்பது சமூக விஞ்ஞானம் - எதிர்காலத்தில் பெரியார் உலகமயமாவது என்பது விஞ்ஞானம் எப்படி சமூகத்தில் பரவியிருக்கிறதோ, அது போன்றதே!
கடவுளைப் புகுத்தாமல்
இருந்திருந்தால்...
கேள்வி: கடவுள் என்கிற ஒரு பொருளை நம்மிடம் பார்ப்பனர்கள் புகுத்தாமல் இருந்திருந்தால், நம் நாடு எப்படி இருந்திருக்கும்?
தமிழ்அமுதன், கோவை
தமிழர் தலைவர்: உலகத்திலேயே நம்பர் ஒன் நாடாக நம் நாடு இருந்திருக்கும். இந்தக் கேள்வியை கேட்டவரை மிகவும் பாராட்டுகிறேன் நான். எப்படி என்றால், இதே கருத்தினை அய்யா எழுதியிருக்கிறார்.
நாசமா போன பசங்க, இந்தக் கடவுள் என்கிற ஒரு மூட நம்பிக்கையைப் புகுத்தாமல் இருந்திருந்தால், நம்மாள்தான் பெரிய ஆளாக இருந்திருப்பார்கள். குறுக்கே வந்து கடவுள் சேர்ந்ததினால், முழுவதுமாக நமக்கு ஒரு பெரிய இடைஞ்சலாகி, இன்னமும் அந்த மயக்கம் பல ரூபங்களில் வருகிறது.
இந்து என்ற வார்த்தைக்குப்
பொருள் என்ன?
கேள்வி: இந்து என்கிற வார்த்தைக்கு என்னென்ன பொருள்?
பொன்னையன், சேலம்
தமிழர் தலைவர்: திருடன் என்று ஒரு பொருள். மோசமானவன் என்று இன்னொரு பொருள். இந்து என்கிற வார்த்தை இருக்கிறது பாருங்கள், இறையனார் அவர்கள் தொகுத்த ஒரு சிறிய புத்தகம் இருக்கிறது, அதனை வாங்கிப் படியுங்கள். அதில் மிக அழகாக அத்தனையையும் தொகுத்து சொல்லியிருக்கிறார்.
இந்து என்று நாம் பெருமையாக சொல்லிக் கொள்கிற விஷயம் அல்ல. சூத்திரன் என்று சொல்வதை ஒரு காலத்தில் பெருமையாக நினைத்தோம். அதுமாதிரி இது, வெளி நாட்டுக்காரன் வந்தான் பாருங்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் வெறுப்பான வார்த்தையை சொல்லவேண்டும் என்பதற்காக, இங்கே இருந்த மக்கள் இவர்களுக்குக் கொடுத்த பெயரே தவிர, அதற்கு உண்மையான ஆரம்பப் பெயர் இது கிடையாது.
ஆரம்பப் பெயர் ஆரியர்களுடைய சனாதன மதம், வேத மதம், ஆரிய மதம், பார்ப்பனீய மதமே தவிர இந்து என்கிற பெயர் கிடையாது. இது உயர்நீதிமன்றத் தீர்ப்புகளிலேயே உறுதியாயிற்று.
நம் அமைப்பினுடைய நடைமுறை குறித்து விளக்கம் தேவை?
கேள்வி: நவீன தொழில்நுட்பங்கள் உள்ள இன்றைய சூழலில், நம்முடைய அமைப்பினுடைய நடைமுறை குறித்து விளக்கம் தேவை?
நதீம், கோவை
தமிழர் தலைவர்: அதற்காகத்தான் நம்முடைய அமைப்பு களில் இப்பொழுது இணையம் - பெரியார் வலைக்காட்சி போன்றவைகளை செய்து கொண்டிருக் கிறார்கள். அது விரிவாகிக் கொண்டே இருக்கும். இணையம், தகவல் தொழில்நுட்பத் தொடர்பு என்பதற்காக ஒரு தனி செயலாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் இயக்கத்தில்.
நிறைய இளைஞர்கள், வேலை வாய்ப்பு இல்லை என்று நினைக்கின்ற கணினிப் பொறியாளர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். உங்களில் யார் யாருக்கு விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் தாராளமாக தலைமைக் கழகத்தினரோடு தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் உண்டு.
இணையத்தின் மூலமாக நாம் நிறைய பணிகளை செய்துகொண்டிருக்கிறோம். அதேபோன்று நீங்களும் வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் நியாயமான வார்த்தைகளைப் பதிவு செய்யுங்கள் - கொள்கைகளைப் பரப்புங்கள் -அதற்காக அவைகளைப் பயன்படுத்துங்கள்.
ஆனால், தவறான பரப்புரையை செய்யாதீர்கள். இரண்டாவதாக, கொள்கைகளுக்கு விளக்கம், சந்தேகத்தை யாராவது கேட்டால், நீங்களே பதில் சொல்லி, சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் சில நேரங்களில். உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தால், விளக்கம் சொல்லுங்கள். அப்படி தெரியவில்லை என்றால், தலைமைக் கழகத்தோடு தொடர்பு கொண்டு கேளுங்கள், அதற்கு விளக்கம் சொல்வார்கள்.
ஆகவே, உங்களுக்கு இருக்கின்ற வாய்ப்புகளை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
இனிமேல் எதிர்காலம் இந்தத் துறையில் இருப்பதினால், திராவிடர் கழகம் முன்னுரிமை கொடுத்து, அதற்கான பணியை செய்யும்.
உங்கள் கேள்விகளுக்கு நன்றி!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...