Tuesday, May 23, 2017

மாநில உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு முயற்சி!

‘‘தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் வழங்கும் 123- ஆவது சட்டத் திருத்த மசோதாவை வரவேற்கிறோம். ஆனால், அம்மசோதாவின் சில பிரிவுகள் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும்வகையில் அமைந்துள்ளன’’ என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
அவரது பேட்டி
1. தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் துக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் வழங்கும் மசோதாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை மனதில் வைத்தும்கூட இந்தத் திருத்தத்தைப் பிரதமர் மோடி கொண்டுவந்திருக்கலாம். ஆனால், திராவிடர் கழகமும் இன்ன பிற சமூகநீதி அமைப்புகளும் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். எனவே, இந்தச் சட்டத் திருத்தத்தை வரவேற்கிறோம். ஆனால், இச்சட்டத் திருத்தத்தில் சில விஷயங்கள் மோசமானவை. அதில் முக்கியமானது, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கும், மாநில அரசுகளுக்கும் அதிகாரம் இல்லாத அளவுக்கு அனைத்து அதிகாரங்களுமே குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட இருப்பதுதான். குடியரசுத் தலைவர் முடிவுசெய்வார் என்றால், அந்த அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது என்பதுதான் அர்த்தம். எனவே, மாநிலங்கள் உரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சத்துக்கு இடமளிக்காதவகையில், எந் தெந்தப் பகுதிகள் பிரச்சினைக்கு உரியவையாக இருக்கின்றனவோ அவற்றை விட்டுவிட்டு, இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.
2. தற்போது செயல்பட்டுவரும் பிற்படுத்தப்பட் டோருக்கான தேசிய ஆணையத்தின் செயல் பாடுகள் திருப்தி அளிக்கவில்லையா?
மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையிலான அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்திரா சஹானி வழக்கில் வழங்கப் பட்ட தீர்ப்பின்படி, 1994-இல்தான் மாநில அளவிலும் மத்தியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக ஆணை யங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றுக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் இல்லை என் பதால், வெறுமனே ஆலோசனை சொல்கிற அமைப்பாகத்தான் அவை இருந்துவருகின்றன. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மரபினர் ஆணை யங்களைப் போல அவற்றால் முழு அதிகாரத்தோடு செயல்பட முடியவில்லை.
3. சட்டத் திருத்தத்தின் எந்தெந்தப் பிரிவுகள் பிரச்சினைக்குரியவை எனக் கருதுகிறீர்கள்?
அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் வழங்கப் படுவதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மரபினர் ஆணையங்களுக்கு உள்ளது போன்று பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்கான திட்டமிடுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் அதிகாரத்தைப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளிக்கும் பிரிவுகள் மசோதாவில் நீக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும். பிற்படுத்தப் பட்டோருக்கான மத்திய பட்டியலில் புதிதாக ஒரு பிரிவினரைச் சேர்க்கவோ, நீக்கவோ உள்ள அதிகாரம் மாநில அரசின் வேண்டுகோளின் பேரிலேயே அமைய வேண்டும். மாநில அரசின் வேண்டுதல் இல்லாமல் தன்னிச்சையாக, ஆலோசனை என்ற பெயரில் அந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் பிரிவு நீக்கப்பட வேண்டும். மாநிலப் பட்டியலுக்கான அதிகாரம் மாநில அரசுகளிடமே நீடித்திட வேண்டும். அதற்கான விதிகள் மசோதாவில் இடம்பெறவில்லை. அதற்கான புதிய விதிகள் சேர்க்கப்பட வேண்டும். மேலும், மத்திய - மாநில ஆணையங்கள் நீதிபதியின் தலைமையில் செயல்பட வேண்டும் என்ற பிரிவுகளைத் தற்போது நீக்கியிருக்கிறார்கள். எனவே, யார் வேண்டுமானாலும், ஆணையத்தின் தலைவராக வரலாம் என்ற வாய்ப்பும் இருக்கிறது. இது தவறானது. எனவே, இத்தகைய பிரிவுகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.
4. அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா -123 ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற் றப்பட்டுள்ள நிலையில், அம்மசோதாவில் திருத் தம் செய்யும் கோரிக்கை ஏற்கப்பட வாய்ப்பு இருக்கிறதா?
மக்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இருக்கிற காரணத்தாலேயே ஒரே நாளில் அதிக விவாதங்கள் இல்லாமலேயே அதை நிறைவேற்றிவிட்டார்கள். ஆனால், மாநிலங்களவையில் பாஜக வுக்குப் பெரும்பான்மை இல்லை. எனவே, இந்தக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதே கருத்தை மே 15 இல் மாநிலங் களவைத் தெரிவுக் குழுவின் முன்னாலும் நான் எடுத்துக் கூறியிருக்கிறேன்.
5. மத்திய அரசின் நடவடிக்கை என்றாலே சந் தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது சரிதானா?
மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கல்வித் துறையில் மத்திய அரசு எடுக்கும் முடி வையே மாநிலங்கள் பின்பற்றியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு ‘நீட்’ தேர்வே ஓர் உதாரணம். இந்நிலையில், தற் போது பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களில் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளையும் பறிப்ப தற்கு முயற்சிக்கிறது மத்திய அரசு. கூட்டாட்சித் தத்துவத்துக்குப் பதிலாக ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்வு என்று ஒற்றையாட்சி முறையை இந்த ஆட்சி வலியுறுத்துகிறதோ என்று தோன்றுகிறது.
- புவி
நன்றி: ‘தமிழ் இந்து’, 22.5.2017

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...