Wednesday, February 22, 2017

நெஞ்சு பொறுக்குதில்லையே!

சென்னை - எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் நடைபெற்றுள்ள கொடுமை நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தலைகுனிய வைக்கத்தக்க கொடூரமாகும்.
3 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி, நகைகளையும் பறித்த பயங்கரம் அரங் கேறி இருக்கிறது. ஒரு குடிவெறி ஆண் ஓநாய்க்கு ஒரு பெண்ணும் துணைபோனார் என்பது கற்பனைக்கே எட்டாத கேவலத்தின் எல்லையாகும்.
குடிவெறியில் மகளையே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய தகப்பன்களைப்பற்றிய செய்திகள்கூட வந்ததுண்டு. குடி குடியைக் கெடுக்கும் என்பதையும் தாண்டி குடிவெறி என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நாகரிகத்தையும், மனிதப் பண்புகளையும் சூறையாடக் கூடிய இழிவான ஒன்றாகும்.
மருத்துவக் காரணங்களுக்காக அன்றி வேறு எவ்வகையிலும் மதுவை இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கவில்லை என்கிறபோது, மாநில அரசுகளோ, மத்திய அரசோ மதுவை எப்படி அனு மதிக்கின்றன என்று தெரியவில்லை.
நியாயமாக மத்திய அரசே இந்தியா முழுமைக்குமான மது விலக்குச் சட்டத்தைக் கண்டிப்பான முறையில் செயல்படுத்தியே தீரவேண்டும்.
கல்வி போன்ற மாநில ஆட்சிக்கான உரிமைகளில் மூக்கை நுழைத்து மத்திய அரசு பட்டியலுக்கும், பொதுப்பட்டியலுக்கும் கோழிக் குஞ்சை பருந்து தூக்கிச் செல்லுவதுபோல, மாநில அரசின் கருத்தினைக் கேட்காமலேயே அலக்காகத் தூக்கிச் செல்லும் மத்திய அரசு இந்த மதுவிலக்கை ஏன் மத்தியப் அரசுப் பட்டியலுக்குக் கொண்டு சென்று நாட்டு மக்களின் நலனைக் கட்டிக் காக்கக்கூடாது?
கூடா ஒழுக்கத்துக்குத் தூண்டுகோலாக இருப்ப தோடு மட்டுமல்ல - குடிப்பவனின் புத்தியைக் கெடுப் பதோடு, உடல்நலனையும் நார் நாராகக் கிழிக்கிறதே! இந்தப் பேரபாயத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாக் கும் கடமை மத்திய அரசுக்குக் கிடையாதா?
மக்கள்நல அரசு (Welfare State) என்பதற்கு உண் மையான பொருளைப்பற்றி அரசு கவலைப்படவேண் டாமா?
சில மாநில அரசுகள் வருவாய்க் கருதி மதுக்கடை களைத் திறக்கின்றன. இதில் இன்னும் என்ன கேவலம் என்றால், மாதம் ஒன்றுக்கு மது இவ்வளவுத் தொகைக்கு விற்கப்பட்டாக வேண்டும் என்று இலக்குகளை நிர்ணயிப்பதுதான்.
மனித வளத்தைவிட பணம்தான் ஓர் அரசுக்கு முக்கியமாக ஆகிவிட்டதா? என்ற கேள்வி நிச்சயமாக இந்த இடத்தில் எழத்தானே செய்கிறது.
மூன்று வயது குழந்தை என்பதைக்கூட எண் ணாமல், காமவெறி கண்களை மறைப்பதை எந்த வகையில் ஏற்க முடியும்? அண்மைக்காலமாக இந்தப் பாலியல் வன்கொடுமைகள் சர்வ சாதாரணமாகி விட்டன - இதுகுறித்த செய்தி வராத நாளே கிடையாதே!
காதலிப்பதாக நடித்துப் பெண்களைக் கர்ப்பம் தரிக்கச் செய்யும் கயமைத்தனமும் பெருகி வருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சிறு கடம்பூரில் நந்தினி என்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணை வேட்டையாடியது இந்து முன்னணிக் கும்பல்.
காதலனாக நடித்த அந்த மிருகம், தன் கயவாளி நண்பர்களோடு சேர்ந்து கூட்டுப் பாலியல் வன் மத்தை நடத்தி, ஏற்கெனவே கர்ப்பம் தரித்திருந்த அந்தப் பெண்ணின் கருவைக் கிழித்து வெளியில் எடுத்துநரவேட்டையாடியுள்ளனர்என்றால்,இந்த மிருகங்களைத்தண்டிக்கநாட்டில்இருக்கும் சட்டங் களே கூடப் போதாது என்றுகூட சொல்லத் தோன்ற வில்லையா?
பொது ஒழுக்கத்தை வளர்க்கவேண்டிய ஊட கங்கள் அரைகுறையுடையுடன் பெண்களை அட்டைப் படத்தில் போட்டு விற்கும் ஒரு வகை ‘விபச்சாரத்தனத்தில்’ ஈடுபடுகின்றன என்று சொன் னால், அது எப்படி தவறாகும்? நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்ற எண்ணம்தான் போலும்!
காவி வேட்டி உருவத்தில் காமவேட்டையாடும் சாமியார்கள் இன்னொரு பக்கம். அவர்கள் இப்பொழு தெல்லாம் ஓர் அரசியல் கட்சியின் காவி அடையாள அந்தஸ்துடன் பவனி வர ஆரம்பித்து விட்டார்கள்.
சமூக வலை தளம் என்ற பெயரால் கீழ்த்தரமான ஆபாசமான படங்களை உலாவ விடுகிறார்கள்.
சட்டமன்றம், நாடாளுமன்றம் நடக்கும் பொழுதே இத்தகைய ‘நீலப்’ படங்களில் மூழ்கிக்கிடந்த முடை நாற்ற செய்திகள் எல்லாம்கூட வெட்ட வெளிச்சத்துக்கு வரவில்லையா?
எண்ணூரில் நடைபெற்ற கொடூரம் நாட்டையே உலுக்கி எடுத்து விட்டது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கான தண்டனை வழங்கப்படுவதில் காலதாமதம் கூடவே கூடாது.
மிக விரைவாக வழக்கும் நடத்தப்பட்டு, மீண்டும் உயிரோடு உலவ முடியாத கடுந்தண்டனை கொடுப் பதன் மூலம், சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பிட வேண்டும்.
கட்சிகளும்,தலைவர்களும்ஆற்றும்சொற் பொழிவுகளில் இந்தச் சமூக அவலங்களைத் தோலு ரித்துக் காட்டி, தார்மீக விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தவேண்டும் - செய்வார்களா? எங்கே பார்ப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...