Monday, December 19, 2016

மார்ச் 10 ஆம் தேதி பெண்களை இழிவுபடுத்தும் சாஸ்திரங்களைக் கொளுத்துவோம்!

அன்னை மணியம்மையார் பிறந்தநாளான மார்ச் 10 ஆம் தேதி
பெண்களை இழிவுபடுத்தும் சாஸ்திரங்களைக் கொளுத்துவோம்!
திருவாரூர் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு!
திருவாரூர், டிச.18 அன்னை மணியம்மையார் அவர் களின் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதியன்று பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் சாத்திரம் முதலிய நூல்களைக் கொளுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
திருவாரூரில் நேற்று (17.12.2016) மாலை நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட மாநாடுகளிலேயே சிறப்பு
அண்மைக் காலத்தில் கழகம் நடத்திய மாநாடு களிலேயே சிறப்பான மாநாடு இது. தங்களுக்கும் ஆற்றல் உண்டு என்று கழக மகளிரணியினர், பாசறையினர் நிரூபித்துக் காட்டியுள்ளனர், அவர்களுக்குப் பாராட்டு.
தோழர் என்று சொன்னால் ஆண் - பெண் இரு பாலரையும்தான் குறிக்கும்.  ‘குடிஅரசு’ இதழில் தோழர் என்று பெண்களைக் குறிப்பிட்டுள்ளார் தந்தை பெரியார். அதனை மீண்டும் இம்மாநாட்டின்மூலம் புதுப்பிப்போம்! (கைதட்டல்).
36 முத்தான தீர்மானங்கள்
நேரம் குறைவாக இருக்கிறது. உங்கள் உற்சாகத்தைப் பார்க்கும்பொழுது  இரவு முழுவதும் பேசலாம் என்று தோன்றுகிறது.
இங்கு நிறைவேற்றப்பட்ட முப்பத்தாறு தீர்மானங் களும் முத்து முத்தானவை. இதைப்பற்றி விரித்துப் பேச ஆரம்பித்தால் பல நாள்கள் பேசலாம்.
வறட்சிப் பகுதியாக அறிவித்திடுக!
குறிப்பாக திருவாரூர் பகுதிக்கு நாங்கள் வந்தால் மக்களிடம் மலர்ந்த முகங்களைப் பார்க்கலாம். இப் பொழுது வரும்போது சோகத்துடன் காணப்படுகிறது - காரணம் விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்கள் பெரும் இழப்புக்கு ஆளானதன் அடையாளமே அது.
நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்பது உண்மை. இந்த நேரத்தில், தமிழக அரசுக்கு நமது கனிவான வேண்டுகோள். விவசாயம் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் - இழப்பீடுகளையும் செய்யவேண்டும் என்று இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். (பலத்த கரவொலி).
பெண்ணுரிமைப்பற்றி தந்தை பெரியார் அளவு சிந்தித்தவர்கள் யார்?
பெண்கள் உரிமை என்று வரும்போது தந்தை பெரியார் அவர்கள் சிந்தித்ததுபோல, வேறு யாரும் சிந்தித்து இருக்க முடியாது. சிந்தனையின் எல்லைக்கே சென்று சிந்தித்தார். பாடுபட்டார்; அதனால்தான் நன்றி உணர்வுடன் பெண்கள் மாநாடு கூட்டி அவருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தைக் கொடுத்து மகிழ்ந்தனர்.
மகளிர் உரிமை என்றால், அதன் பொருள் மனித உரிமையே! இந்துத்துவா என்பது பெண்களை அடிமைப்படுத்தக் கூடியது. சிறுமைப்படுத்தக் கூடியது என்பதால், அதிலிருந்து பெண்கள் விலகி நிற்கவேண்டும் என்று ஒரு தீர்மானம் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மற்ற மற்ற நாடுகளிலும்கூட பெண்ணடிமை இருந்தது உண்டு. ஆனால், படிப்படியாக அங்கெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஏற்படவில்லை - நாம் சிந்திக்கவேண்டும்.
சமுதாய விஞ்ஞானி பெரியார்
சென்னை வானொலியில் பணியாற்றிய லீலா என்ற அம்மையார் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
‘ஆண்களால் பெண்களுக்கு உரிமைகள் கிடைக்காது என்று பெரியார் சொல்லுகிறார். அப்படிப் பார்த்தால் பெரியாரும் ஓர் ஆண்தானே?’ என்பது அவரின் நியாயமான கேள்வி.
நான் சொன்ன பதில்: ‘நல்ல கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். பெரியாரை அந்தப் பார்வையில் பார்க்கக் கூடாது; பெரியாரை ஒரு சமுதாய விஞ்ஞானியாகப் பார்க்கவேண்டும்‘ என்று கூறினேன். அதையேதான் இங்கும் நான் கூற விரும்புகிறேன்.
பெண்ணை இழிவுபடுத்தும் மனுதர்மம்!
நம் நாட்டு சாத்திரங்களும், இதிகாசங்களும், வேதங்களும் பெண்களை ஒரு மானுடக் கூறாகவே பார்ப்பதில்லை. அடிமையாக மட்டுமல்ல; இழிவான பிறவிகளாக, கேவலமாகப் பேசுகின்றன.
என் கையில் இருப்பது அசல் மனுதர்மம். அதன் ஒன்பதாவது அத்தியாயம் 14 ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?
‘‘மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரமும் முக்கியமானதாக எண்ணி அவர்களைப் புணருகிறார்கள்.’’
15 ஆம் சுலோகம் என்ன கூறுகிறது?
‘‘மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக யுடையவராதலால் கணவனால் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கிறார்கள்.’’
16 ஆம் சுலோகம் அதைவிட மோசம்.
‘‘மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்த போதே யுண்டானது என்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்யவேண்டியது’’ என்கிறது மனு. இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இதிகாசங்களும், உபநிஷத்துகளும், வேதங்களும் இந்த வகையில்தான் எழுதப்பட்டுள்ளன.
திருவாரூரில் நடக்கும் இந்த எழுச்சிமிக்க திராவிடர் மகளிர் மாநாட்டில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.
அன்னை மணியம்மையார் பிறந்த நாளான வரும் மார்ச் 10 ஆம் தேதியன்று பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய நூல்களைக் கொளுத்துவோம்! இந்தப் போராட்டத்துக்குப் பெண்களே எங்கும் தலைமை தாங்குவார்கள் என்றார். (கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று!)
(முழு உரை பின்னர்).

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...