Wednesday, June 15, 2016

'கல்கிகள்' கனைத்தாலும்.....


'கல்கி'கள் கனைத்தாலும் அர்த்தம் உண்டு. அது கண்டிப்பாகப் பார்ப்பனர் அல்லாதாரின் கழுத்தில் 'கத்தியைப்' பாய்ச்சுவதற்கான சைகை யாகத் தானிருக்கும். காமராசர் முதல் அமைச்சர் ஆன போது பெரிய பதவி, சின்ன புத்தி என்றும், கதர்ச் சட்டைக்குள், கருப்புச் சட்டை என்றும் கேலிச் சித்திரம் போடவில்லையா? குயில் முட்டை யிட்டு காகம் அடைகாப்பது போல திராவிடர் கழகக் கொள்கை என்ற முட்டைகளை காமராசர் என்ற காகம் (ஆட்சி) அடைகாப்பதுபோல  கார்ட்டூன் போட்டது. இதே கல்கி தான் (1957).
ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை இன்றைக்கு வரை வக்காலத்துப் போட்டு எழுதுவதும் 'கல்கி'தான்.
இந்த வார 'கல்கி' இதழில் (19.6.2016 ஒரு கேள்வி பதில்)

கேள்வி: ஹரியானாவில் இடஒதுக்கீடு கோரி 'ஜாட்' சமூகத்தினர் மீண்டும் போராட்டம்?

பதில்: ஹரியானா மட்டுமின்றி தில்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குப் போராட்டம் பரவும் அபாயம் உள்ளது. முந்தைய கலவரத்துக்குப் பிறகு ஹரியானா அரசு 'ஜாட்' சமூகத்தினருக்கு அளித்த இடஒதுக்கீடுக்கு உயர்நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. வழக்கு விசாரணை நடந்து முடியும் வரை 'ஜாட்' சமூகத்தினர் காத்திருப்பதே நியாயம்! அவர்களைச் சில தலைவர்கள் - தூண்டி விடுவது பெரும் தவறு. இடஒதுக்கீடு குறித்து தேசிய அளவில் மறு சிந்தனை ஏற்பட வேண்டிய நேரம் இது. ஜாதி அடிப்படையில் சலுகைகள் என்ற கருத்து மாறிப் பொருளாதார அடிப்படைக் கவனத்தில் கொள்ளப்பட்டாலொழிய பிரச்சினை தீரப் போவதில்லை" என்று 'கல்கி' பதில் சொல்லி இருக்கிறது.

ஒன்றை இதில் கவனிக்க வேண்டும். இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் கூடவே கூடாது என்று சொல்லுபவர்கள், ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள். ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் பார்ப்பனர்கள். இதிலிருந்தே இதற்குள்ளிருக்கும் சூட்சமும், அர்த்தமும் வெளிப்படையாகவே தெரியும்.

'கல்கி'கள் நம்பும் வேதமும், மனு சாஸ்திரமும் பிராமணன், சூத்திரன் என்று பிறப்பின் அடிப் படையில் பிளவுபடுத்தியது பொருளாதார அடிப் படையிலா?

இடஒதுக்கீடு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டனவே என்று கேள்வி கேட்டால் அவர்களின் முகத்தில் விழும் பதில் அடி  - மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வந்தது எத்தனை ஆண்டுகள் கழித்து என்பதை மறைப்பது ஏன்?

இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து (1950 ஜனவரி 26) 54 ஆண்டுகளுக்குப் பிறகுதானே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வாய்ப்புக் கிட்டியது. அதுவும் கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது எந்த ஆண்டு? 2012-2013இல் தானே?

இன்றைய நிலையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் விகிதாசாரம்தான் என்ன? நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 450 பொது மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் வெறும் 5 (1.1%) தாழ்த்தப்பட்டோர் 16 (3.5%) மலைவாழ் மக்கள் 7 (1.6%),  மத்திய அரசு துறை களில் குரூப் 'ஏ' மற்றும் 'பி' பிரிவுகளில் நிலைமை என்ன? 'ஏ' பிரிவுப் பணிகளில் மொத்தம் 74866 இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் 8316 (11.11%) தாழ்த்தப்பட்டோர் 10434 (13.94%) மலைவாழ் மக்கள் 4354 (5.82%) 'பி' பிரிவுப் பணிகள் 1,88,776 இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் 20069 (10.63%) தாழ்த்தப்பட்டோர் 29373 (15.56%) மலைவாழ் மக்கள் 12073 (6.4%)

பிற்படுத்தப்பட்டோருக்குரிய 27 சதவீத இடங்கள் எட்டப்பட்டுள்ளதா? தாழ்த்தப்பட்டோ ருக்குரிய 15 சதவீத இடங்கள் கிடைக்கப் பெற் றனவா? மலைவாழ் மக்களுக்குரிய  ஏழரை சதவீத இடங்கள் அளிக்கப்பட்டுள்ளனவா?

உண்மை இவ்வாறு இருக்க, பார்ப்பனர்கள், அவர்கள் கையில் வசமாக சிக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ஊதிப் பெருக்கி, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் விகிதாசாரத்துக்கு மேலாக உரிமைகளைப் பெற்றுள்ளது போல பொய்ப் பலூனை வானில் பறக்க விடுவதைப் பார்த்தீர்களா?

நம் இனத்தைச் சேர்ந்த, இடஒதுக்கீட்டால் பலன் பெற்ற பார்ப்பனர் அல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களும் கூட பார்ப்பனர் களோடு சேர்ந்து கொண்டு இடஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தலாமா? சிந்திப்பீர்! பார்ப்பனர்கள் விரிக்கும்  வலையில் சிக்காதீர்!

- கறுஞ்சட்டை


.
 1

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...