Friday, December 19, 2014

பிபிசி தமிழ்ச் சேவை ஹிந்தி சேவையுடன் இணையும் நிலையை முறியடிப்போம்!

பிபிசி தமிழ்ச் சேவை ஹிந்தி சேவையுடன்
இணையும் நிலையை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி தமிழ்ச் சேவையை, டில்லிக்கு மாற்றி ஹிந்தியுடன் இணைப்பது தமிழர்களுக்குச் செய்யும் கேடு - இப்பொழுது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி .வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1920-களில் இங்கிலாந்து, தன்னுடைய காலனி நாடு களுக்கான ஒரு பொது வானொலிச் சேவை உருவாக்கியது.  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ரெத் என்பவரின் சிந்தனை யில் துவங்கிய இந்த வானொலிக்கு ஆரம்பத்தில் ஜான் ரெத் தலைவராக இருந்துவந்தார் 1927 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இது மூடப்பட வேண்டிய நிலையில் இருந்தபோது பிபிசி உலகப் பொது அமைப்பின் (தற்போதைய அய்.நா. போன்ற அமைப்புடன்)  பொது நிதியில் இயங்க ஆரம்பித்தது. (அதுவரை பிரிட்டன் நாடாளுமன்ற கட்டுப்பாட்டில் இருந்து வந்தது) பிபிசி என்ற பெயர் பிரபலமாகிவிட்டதால்   எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து அழைக்கப்பட்டது.

பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் என்னும் பொருள்படும்British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும்.  பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத் தள சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.

28 மொழிகளில் ஒலிபரப்பு!

இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.

தமிழோசை நிகழ்ச்சிகளை பிப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் நேரடி ஒலிபரப்பு செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளைப் பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பிப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூ டான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை பிபிசி ஹிந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டில்லியில் இயங் கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது. 

பிபிசி பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் தருகையில், பெருகிவரும் நேயர்களுக்கு ஏற்ப பிபிசி தமிழ்ச் சேவை புதுடில்லிக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ்ச் சேவை இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களை கவர்ந்துள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை நேயர்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் இடம்பெறுவதாகவும் பிபிசியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது.

இவ்வானொலி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவ தோடு செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப் படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகின்றன.

பிபிசி தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம்  தனது தேசியச் சேவையில் மறு ஒலிபரப்பு செய்கிறது.

இடமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு

பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதி லுமிருந்து சுமார் 70 லட்சம் நேயர்கள் உள்ளனர்.  முக்கிய மாக பிபிசி தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது.
டில்லிக்கு மாற்றப்படும் நிலையில் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசையிலும் மேலோங்கும். டில்லிக்கு மாற்றப்படும்போது பெருவாரியான இலங் கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்திய இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்தி களையே அதிகம் ஒலிபரப்பப்படும், அதே வேளையில் இந்தியத் தமிழர்களுக்கான பயனுள்ள எந்த ஒரு நிகழ்ச்சி களும் அதில் இடம்பெறாத சூழல் ஏற்படும். பிபிசி போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலைமையை விட்டு தூரச்செல்லும்போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும் பிபிசி தமிழோசை டில்லிக்கு மாற்றப்படும்போது ஒரே நிர்வாகத்தின்கீழ் இது வருவதால் பிபிசி தமிழோசைக்கு என்று முக்கியத்துவம் தரப்படுவது நிறுத்தப்படும் அபாயம் உண்டு.

முக்கியமாக சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சி யுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும்.   எடுத்துக் காட்டாக இலங்கை வானொலியின் சுதந்திரமான அமைப் பில் அரசியல் நுழைந்த பிறகு தமிழ் ஒலிபரப்பு முற்றிலுமாக மக்களின் ஆதரவை இழந்து இன்று பெயருக்கு இயங்கி வருவதுபோல் பிபிசி தமிழோசையின் எதிர்காலமும் அமைந்துவிடும்.  இதனால் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்குப் பொதுவான ஒரு தகவல் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழக அரசின் கவனத்துக்கு....

இத்தகைய காரணங்களால் இலண்டனைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம்  - அதே முறையில் செயல்படுவது தொடரப்பட வேண்டும்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், அமைப்புகளும், உலகத் தமிழர்களும், அமைப்புகளும் சிறப்பாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கருத்தைச் செலுத்துமாறு வலியுறுத்து கிறோம்.

ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அரசியல் கண்கொண்டு பார்க்காமல் தமிழர்களுக்கான பொதுப் பிரச்சினையில் ஒத்த குரல் கிளம்புவது அவசியமாகும்.


கி.வீரமணி   
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை5.11.2014

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...