Monday, November 3, 2014

மோடியின் மேடைப் பேச்சு மெச்சத் தகுந்ததாக இல்லை

இந்தியாவின் பிரதமர் என்ற ஒரு நிலைக்கு வந்த பிறகும்கூட நரேந்திர மோடி அதற்கான தன்மையில்  நடந்து கொள்வதாகத் தெரியவில்லை; குறிப்பாக அவர் வாயைத் திறந்தாலே யாரையாவது சாடுவது - எதை யாவது

குற்றப்படுத்துவது? என்ற ரீதியில் இருக்கிறதே தவிர, 125 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டுக்கான பிரதமர் என்ற தகுதியில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு வருவதில்லை.

வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில் பங்கேற் றால் அவரைப் பற்றிச் சிறப்பாகச்  சொல்லுவதற்கு எவ்வளவோ சேதிகள் உண்டு. அவரைப் புகழ வேண்டும் என்பதற்காக காந்தியாரைச் சிறுமைப்படுத்த வேண்டுமா? படேல் என்ற ஒருவர் இல்லையென்றால் காந்தியார் என்பவரே கிடையாது என்று பேசியுள்ளார்.

காந்தியாரைக் கொல்ல சதித் திட்டங்கள் பின்னணியில் இருக்கின்றன என்று தெரிந்திருந்தும், காந்தியார் (1948) கொலை செய்யப்படுவதற்கு முன்பே கூட பல முறை கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட் டார் என்பதை அறிந்திருந்தும், உரிய வகையில் காந்தியாருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்கும் கடமையில் உள்துறை அமைச்சராகவிருந்த படேல்  முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தவறி விட்டார் என்ற குற்றச்சாற்று பொதுவாக அவர்மீதுண்டு. அதை அறிந்த படேல் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் நேருவுக்கு அனுப்பினார். இதை வைத்துக் கொண்டே ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எப்பொழுதுமே படேல் மீது இனந் தெரியாத ஒரு பற்றுதல் உண்டு. (Soft Corner).
காந்தியார் படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடையைப் பிறப்பித்தவரே இந்தப் படேல்தான். அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள் அல்லது மறைப்பார்கள்.

என்னதான் காந்தியார் ராமபஜனை பாடினாலும், இந்துத்துவாவாதிகளுக்குக் காந்தியாரை அறவே பிடிப்பதில்லை; பாகிஸ்தான் பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்ற நினைப்பு! அந்தக் கால கட்டத்தில் .கலவரத்தில் சிறுபான்மை மக்கள் பக்கம் காந்தியார் நின்றதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு அவர்மீது கடும் கோபமும் ஆத்திரமும் கரை புரண்டு ஓடக் காரணமாக இருந்தன.

போதும் போதாததற்கு இந்தியா மதச் சார்பற்ற நாடு - கோயில் காரியங்களுக்கு அரசு கஜானாவிலிருந்து ஒரு பைசாகூட செலவழிக்கப்படக் கூடாது.

நான் மதிக்கும் ராமன் வேறு; இராமாயண ராமன் வேறு என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார் காந்தியார் என்ற உடன் இந்து வெறிக் கும்பல் காந்தி யாரை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்ற முடி வுக்கு வந்து விட்டனர்; திட்டம் போட்டு காந்தியாரின் உயிரையும் குடித்தனர் - கேடு கெட்டவர்கள்.

காந்தியார்மீதான வெறுப்பு அவர்களைப் பொறுத்த வரை இன்று வரை தொடரத்தான் செய்கிறது. அதனால் தான் பிரதமர் மோடி படேல் என்ற ஒருவர் இல்லை யேல் காந்தியாரே கிடையாது என்று கூறி, படேல் போர்வையில் காந்தியாரைச் சிறுமைப்படுத்துகிறார்.

மைநாதுராம் கோட்சே போல்தே! என்ற ஒரு நாடகத்தையே மும்பை - டில்லி நகரங்களில் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நடத்திக் காட்டவில்லையா?
காந்தியார் என்ற தனி மனிதனைக் கொல்லவில்லை; காந்தி என்ற அரக்கனைக் கொன்றேன் என்று கோட்சே கூறுவதாக அந்த நாடகத்தில் காட்சி இடம் பெற்றதே!

அதே போல் நேருவையும் அவர்களுக்கும் அறவே பிடிக்காது; அதனால்தான் கேரளாவில் நடைபெற்று வரும் கேசரி என்ற ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் காந்தி யாரைக் கொன்றதற்குப் பதிலாக கோட்சே நேருவைக் கொன்றிருக்க வேண்டும் என்று எழுதுகிறார்கள்.

படேலைப் பாராட்ட வேண்டும் என்பதைவிட படேலை துக்கிப் பிடித்து காந்தியாரையும், நேருவை யும் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். நேரு ஒரு பகுத்தறிவுவாதி என்று அறியப் பட்டவர்! நாம் சாணி யுகத்தில் வாழவில்லை; பக்ரா நங்கல் போன்ற வளர்ச்சித் திட்டங்கள்தான் உண்மை யான கோயில்கள் என்று அணை திறப்பு விழாவில் ஜவகர்லால் நேரு பேசினார் என்றால், அது இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு பிடித்தமாக இருக்குமா?

நேருவுக்குப் பதிலாக படேல் பிரதமராகியிருந்தால் நாட்டை நல்ல அளவுக்கு முன்னேற்றியிருப்பார் என்று இவர்கள் பேசுவதெல்லாம் உள்நோக்கத்தோடுதான்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்ணாடி மாளிகையில் இருப்பவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லெறிந்தால் அதன் எதிர் விளைவு என்னவாக முடியும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடி தன்னை ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரராகவே நினைத்துக் கொண்டு மேடைப் பிரசங்கம் செய்து கொண்டு வருகிறார். அரசு மேடைகளை  அரசியல் பிரச்சார மேடைகளாகப் பயன்படுத்துவது நாகரிகமன்று.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் அரசின் வானொலியைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மணி நேரம் தம் கட்சிப் பிரச்சாரத்தைப் பிளந்து கட்டினார் எவ்வளவு எதிர்ப்புகள் வெடித்துக் கிளப்பின!

இதில் என்ன  வேடிக்கை தெரியுமா? ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ஒரு மணி நேர வானொலி உரையை பிரதமர் நரேந்திர மோடியோ வானளாவப் புகழ்ந்து தள்ளினார். ஊழல் என்பது பணம் பெறுவது மட்டுமல்ல; சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், நெறி பிறழ்ந்து நடந்து கொள்வதும்கூட ஊழல்தான்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இவர்கள் போற்றும் இந்து மதம் என்பதே ஊழலின், ஒழுக்கக் கேட்டின் ஊற்றுக் கண்தானே - பிறவியில் பேதம் பேசுவது தானே! தன் கண்ணில் உத்திரம் இருப்பது தெரியாமல் அடுத்தவர் கண்களில் தூசு விழுந்தது பற்றி நீட்டி முழக்கலாமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...