Monday, February 17, 2014

சிதம்பரத்தில் சுயமரியாதைப் பிரச்சாரம்

- தந்தை பெரியார்

எனக்கு முன்பேசிய மூன்று கனவான் களும் பேசியவற்றிற்குப் பின் நான் சில விஷயம் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது முதலில் பேசியவர், தலைவர்கள் அடிக்கடி மாறுவதால் சுயராஜ்யம் தூரமாகி விடுகின்றது என்று சொன்னார்கள். நான் தலைவனல்ல; ஒரு தொண்டனாவேன்.

நான் எப்போதாவது மாறவும் இல்லை. பொது வாழ்வில் தொண்டு ஆரம்பித்த காலத்தில் நமது விடுதலைக்கு என்ன என்ன காரியங்கள் தடையாயிருக் கின்றது என்று சொன் னேனோ அதையேதான் இப்போதும் சொல்லுகிறேன். தீண்டாமையும் வருணா சிரம தர்மமும் ஒழிந்தாலல்லாது நமக்கு விடுதலை இல்லை என்பது எனது உறுதி.

அதற்காக இப்போதும் பாடுபடுகிறேன். காங்கிரசினால் தீண்டாமையும் வருணா சிரமும் ஒழியாது என்பது உறுதியாதலால் நான் அதை விட்டுவிட்டு அதற்காகத் தனி யாய் பிரச்சாரம் செய்கின்றேன்.ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட வில்லை என்கின்றார்.

ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட்ட காலத்தில் எனக்கு அவரி டம் இருந்த மதிப்பு இப்போது இல்லை. என்னவென்றால், இப்போது அவர் வருணா சிரமத்திற்கு வியாக்கியானம் செய்ததில் பிறவியில் ஜாதி உண்டென்று சொல்வ தோடு இந்த ஜன்மத்தில் பிராமணனுக்குத் தொண்டு செய்தால்தான் அடுத்த ஜன்மத் தில் பிராமணனாகப் பிறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.  இதைக் கேட்ட பிறகு அவரை மகாத்மா என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை.

மற்றபடி மற்ற மதங்களிலும் பிரிவு களும் மூடநம்பிக்கைகளும் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.

மற்ற மதங்களிலும் இருக்கின்றது என்கின்ற சமாதானம் போதாது. ஜனசமுகம் உண்மையான விடுதலை பெற மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டியது தான்.

ஆனால், இப்போது எனது வேலை அதுவல்ல. என் தலைமீதும் எனது சகோ தரர்கள் மீதும் சுமத்தப்பட்ட மதத்தின் யோக் கியதை வெளியாகி மக்கள் உண்மையறிந்து அதிலிருந்து அறிவு பெற்ற பிறகுதான் நமக்கு மற்ற மதங்களின் சீர்திருத்தத்தைப் பற்றி பேச யோக்கியதை உண்டு.

ஆதலால் மற்ற மதங்களில் ஊழல்கள் இருப்பதற்காக நாம் நமது மதம் என்பதின் ஊழல்களை மூடி வைத்திருக்க முடியாது. நான் தொட் டால் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமிகளைப்பற்றி அலட்சியமாய் பேசின தற்காக வருந்துவதாக பேசினார். நான் அதற்குப் பரிதாபப்படுகின்றேன். நான் தொட்டால் நான் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமியை நான் வேஷ்டி துவைக்கக்கூட உபயோகிக்க மாட்டேன்.

யார் என்னை என்ன சொன்னாலும் சரி, எனக்குக் கவலையில்லை அப்படிப்பட்ட குணம் ஏற்பட்ட உருவத்திற்கு என்ன பெயர் சொன்னாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை வெறும் கல்லென்றும் செம்பென்றும் தான் சொல்லுவேன். ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பிள்ளையை அனுசரித்து ஸ்ரீமான் ரங்கநாதன் செட்டியாரும் பேசியிருக்கிறாராதலால் அவருக்குத் தனியாய் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனாலும் முன்பு இந்த ஊர் ஜில்லா மகாநாட்டுக்குத் தலைமை வகித்த காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டுமென்பதையும் அதற்கு விரோத மாக மதம், சாஸ்திரம், புராணம் என்பதையும் பற்றி அப்போது அதாவது சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் நான் 2-மணி நேரம் அக்கிராசனர் என்கின்ற முறையில் பேசியிருப்பதை ஞாபகப்படுத்திக் கொண் டாரானால் நான் ஏதாவது இப்போது மாறி இருக்கின்றேனா அல்லது காங்கிரசும் அந்த இடத்தில் இப்போது இருப்பவர்களும் மாறி இருக்கின்றார்களா? என்பது புலனாகும்.  ஸ்ரீ அய்யங்கார் வெகு நேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக் காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை - என்று நாயக்கர் சொன்னதும் அய்யங்கார் எழுந்து நீங்கள் கல்லென்று சொன்னீர்களே இது சரியா? என்றார்.

உடனே ஸ்ரீமான் நாயக்கர், ஆம், வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள்! காட்டுகின்றேன் என்று மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைதட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலைகுனிந்தார்.

மற்றொரு பார்ப்பனர் - (பத்திரிகை நிருபர்) அந்தக் கல்லுக்கு மந்திர உச்சா டனம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன் னார்.

நாயக்கர்:- அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ள தானால் இதோ - எதிரில் இருக்கும் சகோ தரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதே சம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக்கூடாதா? என்றார்.

அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.

மறுபடியும் ஸ்ரீ திரு. நாராயணய்யங்கார் இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன்! ஆனால் நீங்களா வது ஒரு புது மதம் சொல்லுவது தானே என்றார்.

நாயக்கர்:- நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத் திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றா தீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.

அய்யங்கார்:- இருக்கின்றதை மறைப்ப தானால் புதிதாக ஒன்றைக் காட்ட வேண் டாமா? என்றார்.

நாயக்கர்:- வீட்டிற்குள் அசிங்கமிருக் கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும்? இந்து மதம் என்பதாக உலகமெல்லாம் நாறுகின்றதே. அந்த துர் நாற்றம் போய்விட்டால் அதுவே போதும், நீங்களே இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே இனி நான் என்ன சொல்ல வேண்டும்!

அய்யங்கார்:- நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசுகின்றீர்களே! உங்களுக்கு லட்ச லட்சமாக சொத்துக்கள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கக் கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.

நாயக்கர்:- ஸ்ரீமான் அய்யங்கார் சொல்லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கள் கிடையாது. ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடிய தாயிருக்கின்றது. அதையும் எனக்குச் சரியென்று தோன்றிய வழியில் பொது நலத் துக்குத்தான் செலவு செய்து வருகிறேன்.

அல்லாமலும் இந்தத் தொண்டுக்கு வரு முன் பெருவாரியாக - வியாபாரமும் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கின் றேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு நிறுத்தி விட்டேன்.

இந்தப் பிரச்சார செலவு சிலசமயம் மாதம் 200, 300 ரூபாய் வீதம் ஆகிவருகிறது மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அனேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டி யில்தான் போகிறேன். அப்படி இருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.

அய்யங்கார்:- புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத் திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவ தில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரை யும் ஒன்றாகக் கண்டிக்கிறீர்கள். அப்படி யானால் என்னதான் செய்கின்றது? எந்த புஸ்தகத்தை தான் படிக்கின்றது?

நாயக்கர்:- நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத் திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும், கதைகளும் எதிலிருந்தா லும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன் (என்று ஆவேசமாய் சொல்லி கடைசியாக முடிவுரையாக சொன்னதாவது), இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்வேன்.

சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும் கூச்சல் போடவும்கூட பார்த்திருக்கின்றேன். இதெல்லாம் அனுபவிப்பது எனக்குச் சகஜம் தான். எவ்வளவுக்கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, எவ்வளவுக்கெவ்வளவு எதிர்பிரச்சாரங்கள் ஏற்படுகின்றதோ அவ் வளவுக்கவ்வளவு எனது வேலை சுலப மாகும், எனது எண்ணமும் நிறைவேறும் என்கின்ற தைரியம் எனக்கு உண்டு.

இம்மாதிரி வேலைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்இருந்தே பலர் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் அந்தச் சமயம் இருந்த அரசர்கள் முட்டாள்களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப் பட்டவர்களாகவும் இருந்ததினால் அது பலிக்காமல் போய்விட்டது. ராமராஜ்ய மாகவோ , பாண்டிய ராஜ்யமாகவோ இருந்தால் நான் இதுவரை ஒரே பாணத்தால் கொல்லப்பட்டிருப்பேன் அல்லது கழுவேற் றப்பட்டிருப்பேன்.

நல்ல வேளையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய் விட்டது. வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும் மனிதனின் சுயமரியாதையைப் பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாகப் பேச இடம் கிடைத்துவிட்டது.

சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி, நான்கு நாள் முன்னோ பின்னோ சாக வேண்டியது தான். வீட்டில் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத் தொண் டிற்குப் பிரவேசிக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாகப் பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால் தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும் தாயாருக்கும் முடிவு சொல்லி உத்தரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம்.

நான் பேசிக் கொண் டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெனில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும், தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம்.
ஆயிரம் தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும்கல், வெறும்கல். நமது தேசிய இயக்கம் என்கின்ற காங்கிரஸ் முதலியவைகள் வெறும்புரட்டு, வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளா விட்டாலும் சரி நான் யாருக்கும் போதிக்க வரவில்லை. எனக்குப்பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக் கொள் ளுங்கள். தப்பானால் தள்ளி விடுங்கள்.

சாமி போய்விடுமே என்று யாரும் சாமிக்காக வக்காலத்து பேச வேண்டியதில்லை. பேசினாலும் நான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. உண்மையான கடவுளும் உண்மையான தேசியமும் எனக்குத் தெரியும்.

அதை வெளியிடும் தொண்டு தான் இது என்று பேசி உட்கார்ந்திருந்தார்.  (25-02-1928 அன்று சிதம்பரத்தில் வக்கீல் இராமையா தலைமையில் நடந்த சுயமரி யாதைப் பொதுக்கூட்டத்தில் பல குறுக்குக் கேள்விகளுக்கு விடை  தந்து தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

- குடிஅரசு - சொற்பொழிவு - 04.03.1928


.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...