Saturday, September 7, 2013

கச்சத் தீவின் கண்ணீர்!


புலி வருகிறது புலி வருகிறது என்று சொல்லப் போய் இப்பொழுது நிஜப் புலியே வந்து விட்டது.
கச்சத்தீவு பிரச்சினையில் இந்திய அரசு நடந்து கொண்ட விதம் கொஞ்ச நஞ்சம் தமிழர்களுக்கு இருந்த ஒட்டும் உறவும்கூட அறவே சாகடிக்கப்பட்டு விட்டது.
கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று முதன் முதலாக திராவிடர் கழகம் இராமேசுவரத்திலே கச்சத் தீவு மாநாடு கூட்டி (26.7.1997) தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழக்குத் தொடுத்தார். (29.7.1997).
அ.இ.அ.தி.மு.க. சார்பிலும், டெசோ சார்பிலும் இதே காரணத்துக்காக வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிர மாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டுக்கு விரோதமாக ஏற்கெனவே இந்தியா முறை கேடாகப் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் நிழலில் நின்று பச்சைக் கொடி காட்டி - தமிழர்கள் மத்தியில் துரோகப் பட்டத்தைச் சுமந்து கொண்டு விட்டது.
2012 சனவரியில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் போடப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில் மத்திய கடலோரக் காவல் படையினர் தாக்கல் செய்த மனு ஒன்றில் தமிழக மீனவர்கள்  எல்லை மீறுவதாகவும் சர்வதேசக் கடல் எல்லையில் இருந்து தமிழகக் கடல் பகுதியில் 5 கி.மீ., வரை கடல் மீன்பிடி தடை மண்டலமாக தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென்றும் கூறி யதே! கடும் எதிர்ப்புப் புயல் தமிழ்நாட்டில் வெடித்துக் கிளம்பிய நிலையில் அது பின்வாங்கிக் கொள்ளப்பட்டது.
285.20 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தமிழ்நாட்டின் இராமேசுவரத்திலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவு (சர்வே எண் 1250) தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்ப தற்கு ஆயிரம் ஆயிரம் ஆவணங்கள் உண்டு.
ஒருக்கால் கண்களை மூடிக் கொண்டு கையொப்பமிட்டதால் இந்த ஆவணங்கள் இந்தியாவுக்குத் தெரியவில்லை போலும்;
ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரை (1949 செப்டம்பர் 7ஆம் தேதி வரை) கச்சத்தீவு இராமநாதபுரம் சமஸ்தானம் வசமே உரிமையுடையதாக இருந்தது. இந்தத் தீவைச் சுற்றி மீன்பிடிக்கும் உரிமையைக் குத்தகைக்கு விட்டிருந்தார். கச்சத் தீவு இரா மேசுவரம் கர்ணத்தின் எல்லைக்குட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1880 செப்டம்பர் 7இல் கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடித்தல், சங்கு எடுத்தல் போன்றவற்றிற்கு முத்துசாமி பிள்ளை என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியது. சேதுபதி சமஸ்தானம்; இது ராமேசுவரம் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது (2.7.1880).
1921ஆம் ஆண்டு கச்சத்தீவு குறித்து ஒரு கூட்டம்  வெள்ளையர் ஆட்சியின் போது ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை அரசு கச்சத்தீவு தங்களுக்குச் சொந்தம் என்று உரிமை கோரியபோது இராமநாதபுரம் அரசர் குடும்பத்தினர் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, இலங்கையின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.
கிழவன் சேதுபதி காலத்தில் அவரது கப்பல் படையினர் இந்தத் தீவில்தான் முகாமிட்டிருந்தனர். கிழவன் சேதுபதி என்ற ரகுநாத சேதுபதி காலத்தில் சேது மன்ன ருக்கும், டச்சுக்காரர்களுக்கும் நடைபெற்ற சண்டையின்போது மன்னன் கச்சத் தீவில் தங்கியிருக்கக் கட்டடம் கட்டப்பட்டது. அப் பொழுது ஏற்பட்ட பேரழிவால் கட்டடம் இடிந்து தீவின் பரப்பளவும் - 285 ஏக்கராகக் குறைந்தது. பிரதமர் இந்திரா - சிறீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தத்தின் (1974 ஜூன் 26) 5ஆம் பிரிவில் இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் கச்சத் தீவுக்கு வழக்கம்போல் சென்று வரலாம். அதற்கு இலங்கையிடமோ, இந்தியாவிடமோ விசா முதலான அனுமதி தேவையில்லை; ஆறாவது பிரிவுப்படி இந்திய இலங்கைக் கப்பல்கள் பாரம்பரிய மாக இருந்து வரும் உரிமைகள் தொடரப்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 1976 மார்ச்சு 23 கடல் எல்லை வரை யறுக்கும் ஒப்பந்தத்திலும் சரி, 1976 நவம்பர் 22 இந்தியா _- இலங்கை - மாலத்தீவு - கடல் ஒப்பந்தத்திலும் சரி  தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கத் தடை ஏதும் கிடையாது. வட்கே பாங்க் பகுதியில் மூன்று ஆண்டு காலத்திற்கு மட்டும் மீன்பிடிக்கும் உரிமையை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உயர்ரக மீன்களில் 2000 டன் இலங்கைக்கு விற்க இந்தியா முடிவு செய்கிறது. இதற்குப் பின்பு இரு நாட்டு அதிகாரிகளிடையே நடைபெற்ற கடிதப் பரிமாற்றங்களில்தான் மீன்பிடி தடை என்ற சதி அரங்கேறியது.
கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் போர்க் குரல்கள் கிளப்பப்பட்ட ஒரு கட்டத்தில் அன்றைய இலங்கை மீன் வள மற்றும் கப்பல்துறை அமைச்சராக இருந்தவர் இலங்கை நாடாளுமன்றத்தில் என்ன கூறினார் தெரியுமா?
எந்தவித ஆதாரத்துடனும் கச்சத் தீவை இலங்கை அரசு பெற்றிடவில்லை. இந்திய பிரதமர் இந்திராகாந்தி பார்த்துக் கொடுத்தது என்று சொன்னாரே! அந்தக் கப்பல் துறை அமைச்சர் வேறு யாரும் இல்லை; இன்றைய இலங்கை அதிபர்  மகிந்த ராஜபக்சே தான்!
2006 பிப்ரவரி 22ஆம் நாள் இந்திய மக்களவையில் எம். அப்பாதுரை (சி.பி.அய்.) எழுப்பிய வினாவுக்கு விடையளித்த இந்திய இணை அமைச்சர் இ.அகமது என்ன கூறினார்? கடிதப் பரிமாற்றம் மூலம் தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமை ரத்து செய்யப்பட்டு விட்டது என்றாரே!
2008இல் இரு நாட்டு அதிகாரி களுக்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. அதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான சென்சிடிவ் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என இலங்கை தரப்பு அரசு அதிகாரிகளால் வரை யறை செய்யப்பட்டது. அப்பகுதிகளுக்குள் மீன்பிடிக்க வந்தால், நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இலங்கை அதிகாரி களின் கோரிக்கைகளுக்கு இந்திய அதி காரிகள் அப்படியே ஒப்புதல் அளித்தனர். அதுதான் இப்பொழுதும் அமலில் உள்ளது; இதன் காரணமாகத்தான் இந்தியக் கடற்படையினர் பாதுகாப்புத் தர முடியாத  நிலை உள்ளது (தினமலர் 26.1.2011).
திமுக ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது என்று பேசுவ தெல்லாம் அபாண்டமானது. 1974 ஜூலை 23 ஆம் நாள் மக்களவையில் இதுபற்றி தி.மு.க. பிரச்சினையை எழுப்பியது.
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுக்கும் இந்த மோசமான ஒப்பந்தத்தைப் போடுவதற்குமுன் மத்திய அரசு எங்களோடு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, இந்த அவையின் ஒப்புதலைப் பெற்று இருக்க வேண்டும். இலங்கையோடு நல்லுறவு வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். ஆனால் இந்த ஒப்பந்தம் நம் நாட்டின் ஒரு பகுதியை எந்த வரை முறையுமின்றித் தாரை வார்த்துக் கொடுப் பதாக இருக்கிறது. இது எந்த ஒரு அரசும் செய்யக் கூடிய காரியமல்ல; எனவே வெளி நடப்பு செய்கிறோம் என்று கூறி திமுகவைச் சேர்ந்த இரா. செழியன், நாஞ்சில் கி. மனோ கரன் ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர். ஃபார்வேடு பிளாக்கைச் சேர்ந்த பி.கே.என். தேவர் பெரியகுளம் முகம்மது ஷெரிப் (முஸ்லிம் லீக்) ஒரிசா பி.கே. தேவ் (சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி) ஆகியோரும் வெளிநடப்புச் செய்தனர் ஆனால் கம்யூ னிஸ்டு உறுப்பினர் எம். கல்யாணசுந்தரம் ஒப்பந்தத்தை ஆதரித்தார் என்பது நினைவூட்டத்தக்கது -_ வேதனைக்குரியது.
தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் இந்திய அரசின் தவறைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் கச்சத் தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தம் நடந்தது. அப்பொழுது வெளியுறவு அமைச்சராக இருந்த சுவரன்சிங் இந்த ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை, கடற்பயண உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கவும் வலைகளை உலர்த்தவும்; அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள உரிமை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 1976இல் இரு நாட்டு செயலாளர்களுக் கிடையே தகவல் பரிமாற்றத்தின்படி மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டது. இந்தக் கடிதங்கள் நாடாளுமன்ற ஒப்புதலையோ தமிழக அரசின் ஒப்புதலையோ பெறவில்லை. அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலமும், நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமே இந்தியாவின் எந்தப் பகுதியையும் பிற நாட்டுக்கு கொடுக்க முடியும். எனவே கச்சத்தீவு ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றாரே டி.ஆர். பாலு.
இந்தியா 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம்; அத்தகைய ஒரு நாடு சுண்டைக் காய் நாடான இலங்கையிடம் சரண் அடைந்துவிட்டதோ என்று நினைக் கும் பொழுது வேதனையாக இருக்கிறது.
தமிழக மீனவர்கள் தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்றால் துப்பாக்கியால் சுடப்படு கிறார்கள் -_ இலங்கைக் கப்பற்படையினரால். அதே நேரத்தில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் சர்வ சாதாரணமாக வந்து மீன்பிடித்துச் செல்லுகிறார்களே!
இந்தியக் கடலோரக் காவல்படை அலுவலர் (பெயர் சொல்ல விரும்பாதவர்) சொன்னதாக பேட்டி ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (28.9.2010) வெளி வந்துள்ளது.
இந்தியாவின் ஆந்திரத்தை ஒட்டிய கடற் பரப்பில் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் வந்து மீன்பிடித்துச் செல்லுகின்றனர். அவர்கள் வசம் துப்பாக்கிகளும் உள்ளன. விசாகப்பட்டினம் காக்கிநாடா, மசூலிப் பட்டினம் வரை வந்து பெரிய வகை மீன் களைப் பிடித்துச் செல்லுகின்றனர் என்பதுதான் அந்தத்தகவல்.
இன்னும் ஒரு கேவலமும் கொடுமையும் உண்டு.சிங்கள மீனவர்கள் இரண்டு இந்தியக் கடலோர காவல் படையினரையே கடத்திச் சென்றனர் என்பதுதான் (2009 டிசம்பர்) கடலூர் வரை கடத்திச் சென்று விட்டனர். இந்திய அரசு இலங்கை அரசுடன் சமாதானம் பேசித்தான் இந்தியக் கடற்படையைச் சேர்ந்தவர் காப்பாற்றப் பட்டனர். (வாழ்க இந்தியாவின் சுயமரியாதை!)
எந்த அளவுக்கு ராஜபக்சே சென்றுள் ளார் என்பதற்குப் பிரேசில் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற அய்.நா. மாநாட்டில் பேசினர்.
எங்கள் கடல் பரப்புக்குள் யார் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தாலும்! அனைத்துலகச் சட்டப்படி 20 ஆண்டுகள் சிறையில் தள்ளுவேன் என்று பேசிட வில்லையா?
கச்சத்தீவுப் பகுதியில் மட்டுமல்ல; இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் வந்து கூட இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதுண்டு.
தமிழக மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தாலும் தமிழின அமைப்புகள் போராட்டம் நடத்தினாலும், தமிழக உறுப் பினர்கள் நாடாளுமன்றத்தில் கர்ச்சித்தாலும் இந்திய அரசு செவிட்டுக் காதைத்தான் தமிழர்கள் பக்கம் காட்டி வருகிறது.
2011 ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையே நடை பெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா விடம், இலங்கை தோல்வியடைந்த வெறி யில், இலங்கைக் கடற்படை என்ன செய் தது? தங்கச்சி மடத்தைச் சேர்ந்த விக்டர் அந்தோணி ராஜ், ஜான்பால் மற்றும் ஒட்டன்சத்திரம் மாரி ஆகியோர் நடுக்கடலில் இலங்கைக் கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்டனரே! என்னே கொடுமை!!
அதே நேரத்தில் மற்ற நாட்டைப் பார்க்கலாம்.
1974ஆம் ஆண்டு ஜப்பானிய மீன வர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து சீனக் கடற் கரையில் ஒதுங்கினர். சீனர்களால் ஜப் பானிய மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஜப்பான் சீறி எழுந்தது. உரிய இழப்பீடு தர வேண்டும் என்று ஜப்பான் வற்புறுத் தியது. சீனா முதலில் மறுத்தது. போர் தொடுக்கப் போவதாக ஜப்பான் மிரட்டவே சீனா பணிந்து வந்தது.
சீனாவோடு ஒப்பிடும்போது ஜப்பான் சுண்டைக்காய் நாடுதான். அதே நேரத்தில் தம் நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர் என்றபோது இயற்கையான சீற்றம் சீறிக் கிளம்பியது. அப்படியானால் இந்தியா தமி ழக மீனவர்களைத் தம் நாட்டைச் சேர்ந்த வர்கள் என்று எண்ணவில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
1995இல் ஒரு சம்பவம்; பிலிப்பைன்சு நாட்டைச் சேர்ந்த ஃபுளோர் கான்பிளேசின் என்ற பெண் கொலை குற்றத்துக்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் -_ - பிலிப் பைன்சின் எதிர்ப்பைமீறி; சிங்கப்பூர் நாட்டின் அரசு முறை உறவு அனைத்தையும் துண் டித்துக் கொண்டது பிலிப்பைன்சு. பல்லா யிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டாலும், தமிழக மீனவர்கள் ஆயிரத்திற்குமேல் கொலை செய்யப்பட் டாலும் இந்தியா அசைந்து கொடுக்க வில்லையே! தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்பதற்கு இது ஒன்று போதாதா?
- மின்சாரம்

அந்தோணியார் கோயிலின் கதை தான் என்ன?
அந்தோணியார் கோயிலுக்குச் செல்லத் தடையில்லை என்று ஏதோ சலுகை காட்டுவதுபோல கதைக்கிறார்களே -_ அந்தக் கதைதான் என்ன?
1982 முதல் 2002ஆம் ஆண்டு வரை திருவிழா நடக்கவேயில்லை. 2002-க்குப் பிறகு சில தடவை நடந்துள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து அங்கு சென்றவர்கள் எத்தனைப் பேர்?
2--002இல் -_60; 2004இல் _ 60; 2005இல் _ 11; 2006இல் _ 30; 2003, 2007, 2008 ஆண்டுளில் நடக்கவேயில்லை எல்லா வகையிலும் இலங்கை யிடம் இந்தியா தோற்று விட்டது என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.


திராவிடர் கழகம் நடத்திய கச்சத்தீவு மீட்பு மாநாட்டுத் தீர்மானம்

26.7.1997 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் நடைபெற்ற தமிழக மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்புரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
பாக். ஜலசந்தியின் இருபுறமும் இருக்கும் தமிழ் நாட்டின் மேற்குக் கரையில் உள்ள மீனவர்களும், தமிழீழத்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மீனவர் களும் மொழி, கலாச்சார ரீதியில் பல ஆயிரம் ஆண்டு காலமாக நெருங்கிய உறவினால் பிணைக்கப்பட்டுள் ளார்கள். ஆங்கிலேயர்கள் வெளியேறும் காலம் வரை தங்கு தடையற்ற படகுப் போக்குவரத்து இரு நாடு களுக்கும் இடையே நடைபெற்று வந்தது. தமிழ்நாட்டில் உள்ள வேதாரண்யம், அதிராம் பட்டினம், தொண்டி, மண்டபம், இராமேசுவரம் போன்ற துறைமுகங் களுக்கும், தமிழீழப் பகுதியில் உள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, ஊர்க்காவல் துறை, நெடுந்தீவு, மாதகல், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை போன்ற துறை முகங்களுக்கும் இடையே தொன்று தொட்டுப் பயணிகள் மற்றும் வணிகப் போக்குவரத்து நடைபெற்று வந்தது - வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும். இலங்கை - சுதந்திரம் பெற்ற பிறகு தமிழர் துறை முகங்களை சிங்களவர் மூடிவிட்டனர். இரு நாட்டுத் தமிழர்களுக்கிடையே நிலவி வந்த தொடர்புகள் திட்ட மிட்டுத் துண்டிக்கப்பட்டன. இதன் விளைவாக இரு நாடுகளையும் சேர்ந்த தமிழ் மீனவர்கள் பெரும் பாதிப் பிற்கு உள்ளானார்கள்.
இருபுறத்திலும் உள்ள தமிழ் மீனவர்களும் தங் களுக்கு இடையே எவ்வித சச்சரவுமின்றி தாராளமாக வும், சுதந்திரமாகவும் மீன்பிடித் தொழிலைச் செய்தனர். இரு தரப்புத் தமிழ் மீனவர்களும் ஒரு போதும் ஒருவ ருக்கு எதிராக மற்றவர் தமது அரசுகளிடம் புகார் செய்ததில்லை.
இராமநாதபுரம் அரசருக்குச் சொந்தமான கச்சத் தீவில் - ஆண்டுதோறும் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் - இருநாட்டுத் தமிழர்களும் கலந்து கொண்டு மணவினைத் தொடர்புகள் வரை கொண்டு மகிழ்ந்து வந்தனர். ஒரு போதும் அவர்களுக் கிடையே எத்தகைய சச்சரவும் மூண்டது கிடையாது. தமிழருக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளித்ததாகக் கூறப்படுவது சட்டப்படி செல்லாத ஒன்றாகும்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் எத்தகைய புகாரும் கூறாத நிலையில் சிங்களக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டை யாடத் தொடங்கியது. குறிப்பாக 1983-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு வரை சிங்களக் கடற்படை, விமானப்படை ஆகியவற்றால் 250-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 150-க்கும் மேற் பட்டவர்கள் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். தழிழ் மீனவர்களுக்குச் சொந்தமான கட்டுமரம், விசைப்படகு, வலை ஆகியவற்றுக்கான சேதம் ரூ. 12 கோடிக்கு மேலாகும். மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக் கும் போக முடியாத வகையில் ஏற்பட்ட இழப்பு கணக் கிட முடியாததாகும்.பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இந்திய அரசோ இலங்கை அரசோ இதுவரை எந்த நட்ட ஈடு எதுவும் அளிக்கவில்லை.
சிங்கள அரசு தமிழ் மீனவர்களைக் கொன்று குவிப்பதற்கு கச்சத்தீவு பிரச்சினை காரணமல்ல; மீன்பிடி உரிமை காரணமல்ல; தமிழ்ப்போராளிகள் பிரச்சினையும் காரணமல்ல; இவையெல்லாம் போலிச் சமாதானங்களாகும்.
தமிழர்கள் எங்கேயிருந்தாலும் அவர்களை அழித் தொழிக்க வேண்டும் என்றும், சிங்களப்பேரின வாதிகளின் இனவெறிக் கொள்கையே இதற்கு அடிப்படைக் காரணம் என்பதை அனைவரும உணர வேண்டும். இத்தகைய தமிழினப் படுகொலை வெறி யுடன் செயற்படும் சிங்களக் கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. அதைத் தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசோ ஒப்புக்காகக் கண்டனக்குரல் எழுப்புவதுடன் தனது கடமை தீர்ந்துவிட்டதாகக் கருதி அமைதி கொள்கிறது.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதைத் தடுக்க முன் வராத இந்திய - தமிழக அரசு களை இம்மாநாடு கடுமையாக கண்டனம் செய்கிறது.
கச்சத்தீவின் உரிமை, சட்டப்படி இன்னமும் நம்மி டமே உள்ளது என்ற உண்மையை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்துவதோடு, கச்சத்தீவை மீண்டும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இம் மாநாடு மத்திய அரசை வற்புறுத்துகிறது.
எனவே, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மேலே கண்ட இரு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்திய - தமிழக அரசுகள் தவறுமேயானால், அக்டோபர் திங்களில்  (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) அனைத்துக் கட்சித் தலைவர்களும் இராமேசுவரத்திலிருந்து படகுகளில் தியாகப்பயணமாகப் புறப்பட்டு - சிங்களக் கடற்படையை எதிர்கொண்டு அறிவழியில் போராட வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. இப்போராட்டத்தில் சேர முன்வருமாறு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர் களுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
//
// 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...