Saturday, March 30, 2013

ஒட்டுமொத்தமாக களவாடப்பட்ட 69% இட ஒதுக்கீடு ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமன மோசடி (3)

ஒட்டுமொத்தமாக களவாடப்பட்ட 69% இட ஒதுக்கீடு ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமன மோசடி 


(தகுதித் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? அதனால் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பாதிப்பா? என்பது குறித்து நாம் இங்கே விவாதிக்கவில்லை. அது வேறு செய்தி. தகுதி தேர்வு வைத்தாகிவிட்டது, ஆனால், அந்தத் தேர்வு முடிவுகளிலும், பணி நியமனத்திலும் இட ஒதுக்கீடு என்னும் அரசமைப்புச் சட்டப்படியான சமூகநீதி எப்படி மோசடியாகப் பறிக்கப் பட்டிருக்கிறது என்பதைப்பற்றிதான்....)
சார், என்ன இருந்தாலும் சொல்லுங்க...? 60% மார்க் கூட எடுக்காதவங்களையெல்லாம் எப்படி சார் ஆசிரியரா ஏத்துக்க முடியும்? என்றொரு கேள்வியை கோபமாக, செல்லமாக, ஆதங்கமாக என்று பல பாவனைகளில் பலரும் கேட்பார்கள்.
தரத்தைப்  பற்றிக்கவலைப்படும் இந்தக் கேள்வி நியாயமானதுதான்! இந்தக் கேள்வியை இப்படியும் கேட்கலாம்.
மொத்தமதிப்பெண்கள் 100% .... முழுமையான, நல்லதரமானஆட்கள் கிடைக்க வேண்டும் என்றால், 100%-த்தைதானே தகுதி அளவுகோலாக வைத்திருக்க வேண்டும்! எதற்காக 40% மதிப்பெண்களைக் குறைத்து, 60% என்று நிர்ணயித்தார்கள்.....? அப்படி யானால், தரத்தில் சமரசம் செய்து கொள் கிறார்களா..? அது எப்படி சார்..... எல்லாரும் 100% எடுக்கமுடியும்? இப்படி செஞ்சா, என்னைக்குக் காலி இடங்களை நிரப்பி முடிக்கிறது?
இப்போ புரியுதுல்ல. தரத்தயெல்லாம் முழுசா யாராலயும் பேண முடியாது!.... இருக்கக்கூடிய எதார்த்த சூழல மனசுல வச்சு. இப்போதைக்கு இவங்க இவ்வளவு எடுத்தாலே தகுதியான ஆளு தான்னு... ஒரு மதிப்பெண் நிர்ணயிக்கப்படுது.... அதுக்குப் பேருதான் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்....!
சரி அப்படிப்பார்த்தா 60%-ங்கிறது ஓரளவுக்குச் சரியான தகுதி மதிப்பெண் தானே நானும் உங்க வாதத்துக்கே வர்றேன்!
சரிதான். இப்பதான் நீங்க கொஞ்சம் மெல்ல விளங்கிக்க ஆரம்பிச்சிருக்கீங்க.... இன்னும் கொஞ்சம் மேல யோசிங்க..... அப்படி நிர்ணயிக்கப்படுற தகுதி மதிப்பெண் எந்தப் பிரிவினருக்கு என்பது தான் கேள்வி!
சரி, விடுங்க... எல்லா வாய்ப்பும் கிடைக்கிறவங்களுக்கே 60% எடுத்திருந்தால் போதும் என்பது தானே உங்க தகுதி அளவுகோல்.
இயற்கை நீதிப்படி பார்த்தால்கூட, எதையும் பார்த்துப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு மறுக் கப்பட்டு, அனைத்தையும் செவி வழியாக மட்டுமே கேட்டு உணர்ந்து கொள்ளவேண்டிய பார்வையற்ற வர்களுக்கும், முற்பட்ட வகுப்பினருக்கும் ஒரே தகுதி அளவுகோல் என்பது சரிதானா? பார்வையற்றோர் எப்படி ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களோ, அதுபோலத்தான், பிற்படுத்தப் பட்டோர் தொடங்கி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வரை முற்பட்ட வகுப்பினரோடு ஒப்பிடுகையில், ஏதோ ஒரு வகையில் வளர்வதற்கான சமவாய்ப்புச் சூழல் மறுக்கப்பட்டு, பாதிப்புக்குள் ளாகியிருக்கிறார்கள்!
இதையெல்லாம், கணக்கில் எடுத்து, மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் விவாதித்துதானே, தந்தை பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களும் அவர்களது வழிவந்தோரும் பெரும் முயற்சி செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஓரளவேனும் தீர்வு வழங்குவதற்காக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு என்னும் அரசியல் சாசன ஷரத்தே ஏற்படுத்தப்பட்டது!
அதெல்லாம் சரிங்க... 60% ங்கிறதே....
அப்படி வாங்க... நாங்க கேட்கிற இடஒதுக்கீடு கருணைய அடிப்படையா வச்சு கிடையாது. பொதுப் பிரிவினருக்கு 60% எடுத்தால் போதும்னு 40 சதவிகிதம் குறைச்சு நிர்ணயிச்சிருக்கிறது கருணைல கொடுத்ததா? இல்லைல... குறைந்தபட்ச மதிப்பெண்-னு முன்னேறிய ஜாதியினருக்கு ஒரு எல்லை வைக்கிற மாதிரி, எல்லா தரப்பினருக்கும்  ஒவ்வொரு எல்லை இருக்குமில்லையா? அந்த எல்லையை (குறைந்தபட்ச தகுதி அளவுகோலை) ஏன் வைக்கலைங்கிறது தான் இப்போ கேள்வி.
மேற்சொன்ன விளக்கம் - தகுதி, திறமை மோசடிப் பேச்சாளர்களுக்கு உரியது. ஆனால், உண்மையில்  TET விசயத்தில் இந்த விவாதம் எல்லாம் தேவையே இல்லாதது. ஏனென்றால் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தச் சொன்ன மத்திய அரசின் சட்டமே ஒவ்வொரு சமூகத் தினருக்கும் உரிய விகிதத்தை, தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கச் சொல்கிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இப்படித் தான் நிர்ணயிக் கப்பட்டிருக்கிறது.
இதோ,  NCTE (National Council for Teacher Education)  வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகள் http://www.ncte-india.org/RTE-TET-guidelines[1]%20(latest).pdf என்ற பக்கத்தில் இருக்கிறது.
அதன் விதி எண் 9(அ) சொல்வது என்ன?
Qualifying marks
9. A person who scores 60% or more in the TET exam will be considered as TET pass. School managements (Government, local bodies, government aided and unaided)
(a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC, differently abled persons, etc., in accordance with their extant reservation  policy;
9. ஆசிரியர் தகுதித் தேர்வில் 60ரூ அல்லது அதற்கு மேல் எடுக்கும் நபர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுவார். பள்ளி நிர்வாகங்கள் (அரசு, உள்ளாட்சி அமைப்பு கள், அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத)
(அ) அவரவர் பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கேற்ப SC/ST, OBC   மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து வகையான இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தகுதி மதிப் பெண்களில் தளர்வு வழங்கிக் கொள்ளலாம்.
இந்திய அளவில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் என்பதால், அந்தந்த மாநிலத்துக் கேற்ப, அமைப்புகளுக்கேற்ப அவரவர் பின்பற்றும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றிக் கொள்ளலாம் என்று இவ்வளவு தெளிவாக NCTE கொடுத்திருக்கும் வழிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டுத் தான், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அசாம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம், பீகார், கேரளா என இந்தியாவின் பிற மாநிலங்கள் அனைத்திலும் இடஒதுக்கீட்டுக்கான இந்த நடைமுறை பின் பற்றப்பட்டிருக்கிறது. பொதுப் போட்டிக்கான தகுதி மதிப்பெண்கள் 60%  என்றும், இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் 55 என்றும் அறிவித்து முடிவுகள் வெளியிடப்பட் டுள்ளன.
ஒரிசாவில் பொதுப் பிரிவினருக்கு 60%, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 50% ஆந்திராவில் பொதுப் பிரிவினருக்கு 60%, பிற்படுத்தப்பட்டோருக்கு 50%, தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40% என தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
ஆனால், தமிழ்நாட்டில் சகல வசதி-வாய்ப்பு களும் படைத்த ஆங்கில வழியில் படித்த பார்ப் பனர்கள் உள்ளிட்ட முற்பட்ட வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதே 60% தான், பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், மாற்றுத் திறனாளிகள், தமிழ்வழிக் கல்வி கற்றோர், பெண்கள், கைம்பெண்கள் உள்ளிட்ட தமிழ் நாட்டின் அத்தனை இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் சட்டத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானதல்லவா?
தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசு ஆணையிலும் (G.O. (Ms) No. 181, School Education (C2) Department, Dated 15.11.2011) NCTE  வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளது. ஆனால் தாங்கள் பின்பற்றப்போகும் அளவுகோல் என்ன என்பதை அப்போது வெளிப்படுத்தவில்லை. அரசாணையில் வெளிப்படுத்தாத முடிவை 07.03.2012இல் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் (04/2012) General Information என்ற தலைப்பில் தெரிவித்துள்ளது தமிழ்நாடு ஆசிரியர் தேர் வாணையம் (TRB).
Candidates securing 60% and above in the tests will be issued a TET Eligibility Certificate mentioning the language opted under Language I, which will be valid for 7 years from the date of issue of the certificate.
சமூக நீதிக்கெதிரான முக்கியமான இந்த முடிவை எடுத்தது யார்? இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வகுப்புவாரியாக நிர்ணயிக்கவேண்டிய அளவு கோலை நிர்ணயிக்காமல் விட்டது எப்படி? இதில் நாம் கேட்கும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் நிர்ணயம் - சட்டப்படியும், சமூக நீதிப்படியும் நமக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமை. இது சலுகையோ, போனால் போகிறது என்று போடுகிற பிச்சையோ அல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள், ஆசிரியர் சங்கங்கள் கூட இந்த மோசடியைக் கண்டு பிடிக்கவில்லை என்பது தான் கொடுமை!
இந்திய அரசியல் சட்டப்படி வழங்கப்பட்டிருக்க வேண்டிய இந்த சமூகநீதி உரிமையை வழங்காமல் செய்தது மாபெரும் குற்றம் அல்லவா?
தகுதி அளவுகோல் 60% என்பது (தமிழ்நாட்டில் 150 மதிப்பெண்களில் 60% என்றால் 90 மதிப்பெண்கள்) பொதுப் பிரிவினருக்கானது. அப்படியானால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு? 60% மதிப்பெண்ணுக்கு மேல் என்று அளவு வைத்து நிரப்பப்பட்ட இடங்கள் எல்லாம் பொதுப்போட்டி இடங்கள் என்றால் மிச்சம் இருக்கும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான 69% இடங்கள் களவாடப்பட்டுள்ளது தெரியவில்லையா?
இதுவரை நாம் பார்த்தது தகுதி மதிப்பெண்களில் சமூகநீதியும், மத்திய அரசின் ஆணையும் எப்படி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே! இனி, அடுத்த மோசடியைப் பார்ப்போம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

2 comments:

Unknown said...

kadantha aanduthan (2012) aasiriyar thaguthi thervil miga periya mosadi nadandhu ulladhu. Endha aandavadhu (2013) ida othukkedu patri aasiriyar thervu vaariyam arivkkaiyai velieduma alladhu adhey mosadi muraiyai dhan pin patruma enbadhudhan kelviya ulladhu. Ean endral kadandha aandu nadandha mosadiyaiye arasu kandu kolla villai

Unknown said...

Kandantha aandudhan aasiriyar thervu variyam thaguthi thervu ennum thervai nadathi muraiyana pinpatruthal illamal niyaman seithadhu. endha murai (20130 aandavadu eda othukidu koduthu arivikkai veli eduma enbadhu puriatha puthirave ulladhu

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...