Thursday, November 1, 2012

பஞ்ச கச்சமும், உச்சிக்குடுமியும்!


தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கக் கூடியவர்கள், பார்ப்பனர் களின் பாரம்பரிய உடையான பஞ்ச கச்சம் கட்டி, உச்சிக்குடுமி வைத்துதான் கோவில் பணிகளைச் செய்யவேண்டும் என்று இந்து அறநிலையத் துறை ஆணை பிறப்பித்துள்ளது. இது ஒழுங்காகக் கடைப் பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அனைத்து சார்நிலை அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளார் களாம்.

இதன்மூலம் இந்த ஆட்சி எதனை கட்டிக் காக்க விரும்புகிறது? இந்துக் கோவில்கள் என்றால் அது பார்ப்பனர்களுக்குரியது - அதன் செயல்பாடுகள் அனைத்தும் பார்ப்பனீய முறையில் மட்டுமே அமைய வேண்டும். பக்தர்கள் மனதிலும் இந்த நிலை உறுதிப் படுத்தப்படவேண்டும் என்பது இதன் பின்னணியில் இருக்கக் கூடிய மனவோட்டம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கான மனித உரிமைப் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்துச் சென்றுள் ளார். அதற்காக பல்வேறு வடிவங்களில் திராவிடர் கழகம் போராடிக் கொண்டு இருக்கிறது. பிரச்சாரத்தையும் செய்துகொண்டு இருக்கிறது.

தந்தை பெரியார் அவர்களின் கட்டளையையேற்று தி.மு.க. அரசு சட்டம் செய்தது. தி.மு.க. ஆட்சியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அவர்களின் தலைமையில் அமைந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் அதன் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிபதி மகராசன் தலைமையிலும், நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலை மையிலும் தனித்தனியாக ஆணையங்கள் அமைக்கப் பட்டு, அவற்றின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன; செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுகூட, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க கம்பரசன்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டதே!

 அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உரிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, அவர்களைப் பணியில் நியமனம் செய்யும் ஆணையைப் பிறப்பிக்கும் ஒரு காலகட்டத்தில், பார்ப் பனர்கள் தங்களுக்கே உரித்தான ஜாதீய ஆணவத் துடனும், கோவில்களில் உள்ள தங்களின் ஏகபோக ஆதிக்கம் எந்த வகையிலும் பறிபோய்விடக் கூடாது என்கிற பிடிவாதத்தின் அடிப்படையிலும் அவர்களின் ஆன்மீகக் குருவான சங்கராச்சாரியார், அரசியல் குரு வான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஆகியோரின் அனுசரணையோடும், பரிந்துரைகளோடும் உச்சநீதிமன்றம் சென்று முடக்கினர்.

மீண்டும் அரசு ஆணைகள் பிறப்பிக்கும்போது, மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று முடக்குவதை தங்களின் பிழைப்பாகக் கொண்டுள்ளனர், செயல்பட்டும் வருகின்றனர்.

தங்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் இடை இடையே முட்டுக்கட்டை போட்டாலும், அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை கிடைக்கச் செய்யும் வரை திராவிடர் கழகம் ஓயப்போவதில்லை.

ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் சேர்த்து 207 பேர்கள் பணியில் சேரத் தயாராகவே உள்ளனர். இத்தகு நிலையில், அர்ச்சகர்கள் பஞ்சகச்சம் கட்டியிருக்கவேண்டும். உச்சிக்குடுமி வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை ஆணை பிறப்பிப்பதன் நோக்கம் என்ன?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் நிறை வேறப் போவதில்லை - செயலுக்கும் வரப் போவதில்லை என்று முடிவு எடுத்துவிட்டார்களா? அப்படியே செயல்பாட்டுக்கு வந்தாலும் பார்ப்பனர்களைத் தவிர மற்ற ஜாதிக்காரர்களும்கூட பஞ்ச கச்சம்தான் கட்டவேண் டுமா? உச்சிக் குடுமியும் வைக்கவேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படுமா?

உச்சிக்குடுமியும், பஞ்ச கச்சமும்தான் அர்ச்சகர் களின் அடையாளம் - அவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது? அப்படி சொல்லப்பட்டு இருந்தால் இதுவரை அதுபற்றி ஏன் அறிவுறுத்தப்படவில்லை - கட்டாயப்படுத்தப் படவில்லை? இந்தத் திடீர் ஞானோதயத்துக்கு என்ன பின்னணி?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை பதில் அளிக்குமா? இந்து அறநிலையத் துறையின் இந்தச் சிந்தனை - முடிவு - போக்கு - உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றிய வழக்கில் நியாயமாக நடந்துகொள்ளுமா என்ற அய்யப் பாட்டை ஏற்படுத்தக் கூடியதல்லவா!

தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள் என்ற சட்டத்தைப் புறந்தள்ளியது. விவேகானந்தர் இல்லத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகை விட்டது முதற்கொண்டு அ.இ.அ.தி.மு.க.வின் ஆட்சி பா.ஜ.க.வின் சாயலைக் கொண்டுள்ளது என்று கருத இடம் அளிக்கிறதே!


அண்ணா பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவோர் யார்?
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்காக வெற்றிச் சின்னமா? அல்ல - அது வெறிச் சின்னமே!
பி.ஜே.பி.
ராஜீவ் காந்தி கொலை: முக்கிய திருப்பம் எம்.கே. நாராயணன்மீது பார்வை!
தீபாவளியும் - அவதாரங்களும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...