Thursday, August 9, 2012

முளையிலேயே கிள்ளி எறிக!


மதுரை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர், இமானுவேல் ஆகியோர் தம் சிலைகள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து,  சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டவேண்டும்.
வேறுவகையான வண்ணம் பூசப்பட்டு விசிறிவிடு வதற்குச் சில தீயசக்திகள் முயலக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல், எவ்வளவு சீக்கிரம் குற்றவாளி களைப் பிடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக வேகத்தை இதில்  காவல்துறை காட்டவேண்டும்.
தென் மாவட்டங்களில் தலைவர்களின் சிலைகள் பாதுகாப்பாகக் கூண்டுக்குள் வைக்கப்பட்டு இருப்பதே அவமானகரமான ஒன்றுதான் என்றாலும், அதையும் மீறி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது எப்படி?
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக தலைவர் களாக ஆக ஆசைப்படுபவர்கள் எளிதாகக் கண்டு பிடித்துள்ள வழி ஜாதி சங்கத்தை உண்டாக்குவதே!
நாட்டு மக்களுக்கு உண்மையான தலைவர்களாக வரவேண்டும் என்றால் கொள்கைகளும், லட்சியங் களும் இருக்க வேண்டும். அவற்றை நிறைவேற்று வதற்கான செயல் திட்டங்கள் இருக்க வேண்டும். அவற்றை நிறைவேற்றும் போது உரிய விலையைக் கொடுத்தாகவும் வேண்டும்.
ஜாதி சங்கத்தின் மூலம் எளிதாகத் தலைவராகி விட முடியும்; கொள்கைக் கோட்பாடுகள் என்றெல் லாம் தேவைப்படாது; பழம் பெருமையைச் சொன்னாலே போதுமானது அல்லது சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள இன்னொரு ஜாதியினரை எதிரி என்று காட்டி சுயஜாதி மக்களிடம் செல்வாக்குத் தேடிக் கொள்வது - இதுதான் ஜாதித் தலைவர்கள் செய்யக்கூடிய காரியம்.
மற்றபடி அம்மக்களின் சூத்திரத் தன்மையைப் பற்றியோ, கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பது குறித்தோ சிந்தனையும் கிடையாது. செயல் திட்டமும் கிடையாது. புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மேலே படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் தந்திரம் போலவே, அம்மக்களுக்கு வழி காட்டி தாம்தான் என்று காட்டிக் கொள்வது எல்லாம் ஏமாற்று வேலை மட்டுமல்ல. அம்மக்களை முற்போக்குத் திசைப் பக்கம் வந்துவிடாமல் தடுக்கும் பிற்போக்குத்தனமாகும்.
இப்பொழுது அடுத்த கட்டமாக தங்கள் ஜாதிக் காரர்கள் வேறு ஜாதிக்காரர்களைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று ஜாதித் தூய் மையைக் காப்பாற்றும் கடைந்தெடுத்த பிற்போக்குப் பாதையைக் காட்டத் தொடங்கியுள்ளனர். இதில் கொங்கு வேளாளர் அமைப்பும், வன்னியர் சங்கமும் முஷ்டியைத் தூக்குவது வேதனையைத் தரக்கூடிய தாகும்.
(அச்சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வேறு விஷயம்).
ஜாதிக்குள்ளோ, உறவினர்களுக்குள்ளோ திருமணம் செய்துகொள்வது கூட மருத்துவ ரீதியாகக் கூடாத ஒன்றாகும்.
சம்பந்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள் படித்தவர்கள், பகுத்தறிவாளர்கள் ஆகியோர் முன்வந்து ஜாதி அடிப்படையின் ஆணிவேரைக் கெல்லி எறியவேண்டும்.
21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் - அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளும் வளர்ந்து நம்மை நாம் மேன்மைப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, சக மனிதனை ஜாதிக் கண்கொண்டு பார்ப்பதும், உறுமுவதும் அறிவுடைமையானதுதானா? பண்புடையதுதானா?
ஜாதியை ஒழித்து சமத்துவ சமூகத்தை உருவாக்க தம் வாழ்நாளையே ஒப்படைத்து உழைத்த தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஜாதிக் களைகளை வளர்க்கலாம் என்று நினைப்பது, நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பிற்போக்குத் தனமாகும்.
ஜாதியைச் சாய்ப்போம்!
சமத்துவம் பேணுவோம்!
சமதர்மம் படைப்போம்!
வாழ்க பெரியார்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...