Saturday, August 11, 2012

பார்வதி - பரமசிவன் முத்தக் காட்சி!


திருவாக்குஞ் செய்கருமங்
கை கூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும்
பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆணை முகத்தானைக் காதலாற் கூப்புவர்தங் கை
விநாயகக் கடவுளை வணங்கிக் காரியங்களைத் தொடங்கினால் நல்லது என்று கூறும் பண்டாரச் சன்னதிகளே! வேழ முகத்தானின் வாழ்க்கை வரலாற்றினைப் பாரீர்.
கசமுகாசுரன் என்பவன் தவம் செய்து, தான் மனிதராலும், விலங்குகளாலும், பிறவற்றாலும் காலமெல்லாம் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் பெற்றான்.  அந்த வரம் பெற்றமையால் அவன் தேவர்களைத் துன்புறுத்தினான்.
தேவர்கள் சிவபெருமானை வேண்ட சிவன் விநாயகனை உண்டாக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன் துணைவி சக்தி யோடு தோட்டத்திலே வீற்றிருந்தார். அப்பொழுது அங்கே ஓர் ஆண் யானை, பெண் யானையைப் புணர்தல் கண்டு, சக்தி பெண் யானை வடிவங் கொள்ள, சிவன் ஆண் யானை வடிவங் கொண்டு புணர்ந்தார். அவர்கட்கு யானை முகமும் மனித உடலுமாக ஒரு குழந்தை தோன்றியது. இதுதான் இன்று ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் கரியின் முகவன் கதை, இதற்கு ஆதாரமாக, திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில்-
பிடியத னுருவுமை
கொளமிகு கரியது
வடிகொடு தனதடி
வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன்
மிகு கொடை
வடிவினர் பயில்வலி
வலமுறை யிறையே
என்று பாடியுள்ளார். இப்படிக் காமத்தின் விளைச்சலால் மக்கள் பிறவியிலிருந்து, விலங்குப் பிறவியெடுத்து இணைந்த பிண்டங்களின் சதைக்கலப்பில் விளைந்த விநாயகன் வணங்க வேண்டிய கடவுளா? இதோடு மட்டுமல்ல, தன்னை ஈன்ற தாயும் தந்தையும் காமக் காய்ச்சல் மிகுதி யினால் உதட்டுச்சுவை பருகும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாராம், நெற்றிக் கண்ணனார் பெற்ற மகன்.
மும்மைப் புவனம்
முழுதீன்ற முதல்வி
யோடும் விடைப்பாகன்
அம்மை தருக
முத்தமென அழைப்ப
வாங்கே சிறிதகன்று
தம்மின் முத்தங்கொள
நோக்கிச் சற்றே
நகைக்கும் வேழமுகன்
செம்மை முளரி
மலர்த்தா ளெஞ்சென்னி
மிசையிற் புனைவாமே
மூன்று உலகங்களையும் பெற்ற சக்தியிடத்து, எருதுவை ஊர்தியாக உடைய சிவபெருமான், அம்மையே முத்தம் தருக எனச் சொல்லி அழைக்க அவர்களுக்கு இடையே இருந்த விநாயகன் சிறிது நீங்கிட, சிவனும், பார்வதியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்ள அதனைக் கண்டு புன்னகை செய்யும் யானை முகனது சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின் மேல் அணிந்து கொள்வோம் என்று கூறுகிறது நந்திக் கலம்பகம் எனும் நூல்.
பெற்றவர்கள் முயங்கும் போது உற்றுப்பார்த்து மகிழ்ந்திடும் காமவல்லி பெற்ற திருக்குமரன் விநாயகக் கடவுளை வீரமரபில் வந்த தமிழினம் வணங்க வேண்டியதுதானா? புராணப் புரட்டர் களின் மூளைச் சுரப்பிலிருந்து உதயமான ஆபாசக் கடவுளுக்கு ஆற்றங்கரையில் சிலை ஏன்? இந்த வெட்கங் கெட்ட உறவில் விளைந்த யானை முகத்தானுக்கு தேங்காய் உடைப்பும், நைவேத் தியமும் ஒரு கேடா? தமிழினமே! சிந்தித்துச் செயல்படு!
- பெரியகுளம் அருளாளன்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...