Monday, August 20, 2012

இன்னுமென்ன சந்தேகம்? பிராமணா! உன் வாக்குப் பலித்தது!!


ஒரு பார்ப்பனன் தன் பெண்ஜாதியின் நடத்தையில் சந்தேகங்கொண்டு அடிக்கடி அந்தம்மாளை விபசாரி, விபசாரி, என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால், அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக் கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக் கொண்டே வந்தாள்.
இப்படி இருக்கையில், அந்தப் பார்ப்பான் தன் மனைவி  அந்நிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக் கையில் ஒரு நாள் கைப்பிடியாய் பிடித்து விட்டான்.  அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப் போக்கும், சமா தானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் பிராமணா!, உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய்யட்டும்? என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைக் சுமத்தினாள்.
அதாவது, புருஷனைப் பார்த்து நீ அடிக்கடி என்னை விபசாரி, என்று உன் வாயால் சொல்லிக் கொண்டே  வந்தால் அல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது அது எப்படியும் பலித்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி) நீர் பரிசுத்தமான பிராமணரானதால் உமது வாக்குப் பலித்துவிட்டது.
உமது வாக்குப் பலிப்பதற்காகவே இந்தப்படி கடவுள் செயலால் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நான் என்ன செய்வேன்? நீர் ஏன் என்னை அப்படிச் சொன்னீர்? என்ப தாகச் சொன்னாளாம்.! அதேபோல் காங்கிரஸ் காரியக் கமிட்டியும், திரு. காந்தியும் சேர்ந்து 12.07.1931 செய்த பிரஜா உரிமை தீர் மானமானது நாம் காங்கிரசையும், அதன் தலைவர்கள் என்பவர்களையும் பற்றி அவர்கள் எப்படிப்பட்ட அபிப்பிராயக்காரர் கள் என்று குற்றம் சொல்லி வந்தோமா, அதே அபிப்பிராயம் இனி வேறு யாரும், வேறு எவ்வித வியாக்கியானமும், தத்து வார்த்தமும் செய்ய முடியாதபடி நன்றாய் வெளிப்படையாய் அழுத்தந்திருத்தமாய் சொல்லப்பட்டுவிட்டது. அது என்ன வென்றால்,
அரசியல் சட்டத்தில் ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமை என்பது  பற்றிய, விதிப் பிரிவுகளில் இந்தியாவில் உள்ள சகல சமுகத்தாருக்கும் அவர்களது கலைகள், சமுக நாகரிகங்கள், பாஷைகள், எழுத்துக்கள், தொழில்கள்,  பழக்க வழக்கங்கள். மதம், மத  தர்மங்கள் ஆகியவை காப்பாற்றப்படும் என்பதாக ஒரு உத்திரவாதம். அதாவது ஜாமீன் கொடுக்கப்படும் என்கின்ற நிபந்தனையும் சேர்க்கப்படும் என்பதாகத் தீர்மானித் திருக்கின்றார்கள்.
மற்றும், ஒவ்வொரு சமுக உரிமைகளைப் பற்றிய சட்டங்களும் காக்கப்படும் என்பதாகவும் ஒவ்வொரு மாகாணங்களிலுள்ள சிறுபான்மை வகுப்புகளின் உரிமைகளின் அரசியல் உரிமை மற்றும் இதர உரிமைகள் ஆகியவை காப்பாற்றப்படும் நிபந்தனையானது அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்குள் இருக்கும்  என்பதாகவும் தீர்மானித்து இருக்கின்றார்கள். அது அசோசியேட் பிரஸ் சேதியாகும்.
மற்றும், 13ஆம் தேதி வெளியான எல்லாத் தினசரிகளிலும் காணப்படுவது மாகும். அன்றியும், இத்தீர்மானங்களை ஆங்கிலத்தில் உள்ளபடியே மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டுமிருக்கின்றன ஆகவே, வாசகர்களுக்கு இவ்விஷயத்தில் இன்னுமென்ன சந்தேகம் இருக்கக்கூடும்? என்பது நமக்கு விளங்கவில்லை.
கராச்சிக் காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டுவிட்டது என்று வாய்த் தப்பட்டை அடித்ததெல்லாம் சுத்த ஹம்பக் என்பதாகவோ, அல்லது அது அதனுடைய உண்மை அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களின் கூற்று  என்பதாகவோ இப்போது யாவருக்கும் நன்றாய் விளங்கியிருக்குமென்றே கருதுகின்றோம்.
ஏனெனில் ஒவ்வொரு வகுப்பாருடைய, அதாவது இந்தியாவில் எத்தனை சமயத்தார், வகுப்பார் உண்டோ அத்தனை வகுப்பாருடைய உரிமைகளையும் பொறுத்த கலை ஆதாரங்கள் அதாவது வேத சாஸ்திர புராணங்கள். அவர்களது பாஷைகள்,  பாஷை எழுத்துக்கள் வகுப்புக் கல்விகள், வகுப்புத் தொழில்கள், அந்தந்த வகுப்பு பழக்க வழக்கத்தில் இருந்துவரும்  நடவடிக்கை கள், ஒவ்வொரு வகுப்பா ருடைய மதங்கள் அதாவது சமயம், உட்சமயம், புறச் சமயம், அந்தந்த மத தர் மங்கள், அதாவது கோவில், கோவில் சொத்து, மடம், மடங்களின் சொத்துக்கள், மததர்மமான மற்ற காரியங் கள் செய்வதற்கு விடப்பட்டி ருக்கும் தர்ம சொத்துக்கள் ஆகியவை எல்லாம் காக்கப்படும் என்பதாக காங்கிரஸ் உறுதிகூறி இருப்பதோடு உத்திரவாதமுமேற்றுக் கொண்டிருக்கின் றது.
ஆகவே, இது சமதர்மக் கொள்கை யாகுமா? அல்லது சுயமரியாதை கொள்கை யாகுமா? அல்லது நவ ஜவான் பாரத சபைக்கொள்கையாகுமா? அல்லது போல்ஸ்விக் கொள்கையாகுமா? என்பதை நம் நாட்டு வாலிபர்களை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகிறோம். இந்த மாதிரி யான சுயராஜ்ஜியம் ஏற்படுவதற்காக வெள்ளைக்காரன் இருக்கும் அரசியல் அதிகாரத்தைப்  பறித்து இந்த மாதிரி உத்தரவாதம் ஏற்றுக்கொண்ட காங்கிரசுக் காரரிடம் மகாத்மா இடமும் திரு. ஜவஹர் லால் இடமும் ஒப்படைக்கலாமா என்று நிதானமாய் யோசித்துப்பாருங்கள் என்று மறுபடியும் நினைப்பூட்டுகின்றோம்.
மற்றும் பார்ப்பனரல்லாத காங்கிரஸ் பக்தர்களே, இந்த உத்தரவாதமானது காரியக் கமிட்டி  உயர்திருவாளர்கள் சி. ராஜகோபாலாச் சாரியார், பண்டித மாளவியா ஆகிய பிராம் மணோத்தமர்களால் கொண்டு வரப்பட்ட ஏகமானதாய் தீர்மானிக்கப்பட்டிருக்கின் றது என்பதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது என்பதையும் உணருங்கள் என்றே சொல்லுகின்றோம்.
உலகில் வயிறு வளர்ப்பதேதான் பிரதானமான காரியம் என்று கருதி இருப்போமானால், மனித உருவாய் பிறந்ததற்கு வருத்தப்படவேண்டி யது தான் என்பதே எமது அபிப்பிராயம். மற்றபடி சுயமரியாதையே பிரதானமானது என்று கருதுகின்றவர்களுக்குத்தான் மனிதனாய் பிறந்ததைப் பற்றி சில சமயங்களிலாவது மகிழ்ச்சியடைய இட முண்டு என்று சொல்லலாம். நிற்க.
பம்பாய் காரியக் கமிட்டியின் உத்தரவாத தீர்மானத்தைக் கொண்டு காங்கிரசின் உண்மையான தன்மையை ஒரு வரியில்  கூற வேண்டுமானால், காங்கிரஸ் என்பது சுயமரியாதைக் கொள்கைக்கு நேர்மாறான முரண்பட்ட ஸ்தாபனம் என்று சொல்வதை விட வேறு என்ன சொல்லமுடியும்? என்று அறிவும், நாணயமும், மானமும் உள்ள மக்களை யோசித்து பார்க்கும்படி வேண்டு கின்றோம். நிற்க.
காரியக் கமிட்டியின் இந்த உத்தரவாதத் தீர்மானத்தைப் பற்றி தேசிய பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் தமிழ்நாடு பத்திரிகை 13ஆம் தேதி  தனது உபதலையங்கத்தில் எழுதி யிருப்பதையும் இந்தச் சமயத்தில் குறிப் பிடுகிறோம். இந்த உப தலையங்கத்தில் ஒவ்வொரு எழுத்தும் வெகு நடுக்கத்துடன்  எழுதப்பட்டிருந்தாலுங்கூட  அதில் உண்மை ஒருவாறு வெளியாகியே விட்டது. அதாவது:-
இந்திய தேசிய காங்கிரசுக்குத் தலைகுனியும்படியான காலம் வந்ததைக் குறித்து நாம் மிகவும் துக்கப்படுகின் றோம். காங்கிரசின் தேசிய லட்சியம் இப்போது பின்னடையவும் நேர்ந்து விட்டது. பிரதி வகுப்பாரின் பாஷை எழுத்து, கல்வி, ஆசார அனுஷ்டானம், மதம், தர்மச் சொத்துக்கள் ஆகிய விஷயங் களுக்குத் தக்க  பாதுகாப்பளிப்பதாக (காங்கிரஸ்) காரியக்கமிட்டி கூறுவதின் கருத்து நமக்கு விளங்கவில்லை.
மற்ற மக்களுடைய பிரஜா உரிமை, சுயமரி யாதை, மனிதத்தன்மை ஆகியவற்றிற்குப் பங்கம் விளைவிக்காத வரையில் பிரதி மனிதனுடைய மதம், ஆச்சாரம், அனுஷ் டானம் பாதுகாக்கப்படும் என்று காரியக் கமிட்டி கூறி இருந்தால் அதன்பொருள் தெளிவாக ஏற்பட்டிருக்கும். இந்தியா வில் சமதர்மத்தை நிலைநிறுத்துவதற்குக் காரியக் கமிட்டியின் முடிவு முட்டுக் கட்டையாக அமையுமென்று அஞ்சுகின் றோம் என்பதாகக் குறிப்பிட்டு இருக் கின்றது.
இவை எப்படி இருந்தபோதிலும் இன்றைய தினம் இந்த நாட்டில் இருந்துவரும் ஜாதி, மத பேதங்களும், ஆச்சார அனுஷ்டானங்களும், மதங்களும், மத தர்மச் சொத்துக்களும் காப்பாற்றுவ தற்காக நமக்கு சுயராஜ்ஜியம் வேண்டும் என்ற கருத்தின் மீது தான் இன்றைய தேசியக் கிளர்ச்சி நம் நாட்டில்  நடை பெற்று வருகின்றது என்று சொன்னவர் களின் வார்த்தைகளில் எந்த எழுத்தாவது தப்பிதமானது என்று இதிலிருந்து யாரா வது சொல்ல முடியுமா? என்று கேட் கின்றோம்.
அன்றியும், காங்கிரஸ் கூட்டத்தில் இத்தனை காலம் பிரஸ்தாபிக்கப்படாத ஒரு புதிய விஷயமும் இந்த  ஜவாப்தாரி தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது, கவனிக்கத்தக்கதாகும்.அதாவது பழக்க வழக்கம், தொழில், மததர்ம சொத்துக்கள் ஆகியவையும் காப்பாற்றப்படும் என்ப தோடு. அதற்கு ஜவாப்தாரிதனமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதாகும். ஆகவே இனிமேல் இந்தியாவைக் காங்கிரஸ்  பார்ப்பனிய சுயராஜ் ஜியமாக்க செய்ய வேண்டிய வேலை எது பாக்கி? என்பதாக நமக்கு விளங்கவில்லை.
இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால்,  காங்கிரசும், காந்தி கோஷ்டியும்  இப்போது உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சமதர்ம, பொதுவுடைமை உணர்ச்சியை அழிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்துக்கொண்டு  பாமர மக்களுக்குச்  செய்யும் சதியும், துரோகமும் அல்லவா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
இந்த உண்மையை உணர்ந்துதானே ருஷ்ய சமதர்மக்காரர்கள், காங்கிரஸ் பொது ஜனங்களுக்குத் துரோகமான தென்றும், காந்தி பொது ஜன துரோகி யென்று தைரியமாய்ப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அன்றியும் மாஸ்கோவில் இருந்து வந்த சேதி ஒன்று தமிழ்நாடுவில் பிரசுரித்திருக்கின்றபடி ருஷியாவில் இந்தியா என்பதாக ஒரு நாடகம் ஆடப்படுவதாகவும்.
அதில் பிரிட்டிஷ் ஆட்சி கொடுங்கோன்மையானதென்றும், காந்தி பொது ஜனங்களைத் தப்பான வழியில் ஏமாற்றி நடத்திக் கொண்டு போகின்றவர் என்றும் கருத்து வைத்து சரித்திரம் எழுதி நாடகம் நடை பெறுகின்றதென்பதாகக் குறிப்பிடப்பட்டி ருக்கின்றது.
இவற்றையெல்லாம் பார்த்த பிறகும், நன்றாய் உணர்ந்த பிறகும் இனியும் சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசைப் பற்றி சிறிது கூட தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை என்பதாகவும், அது ஒரு பெரிய ஜன சமுகத் துரோக சபையாகவும், தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை ஏமாற்றி கழுத்தறுக்கும் வஞ்சக சபையாகவும் இருக்கின்ற உண்மையை பொது ஜனங் களுக்குப்படும்படி விளக்க வேண்டி யதையே முக்கிய கடமையாகக் கொள்ள  வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்தக் கடமைக்கு யாரும் பயப்படுவது சிறிதும் மனிதத் தன்மை யாகாதென்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இதற்காக, நாம் யாரையும் காங்கிரஸ் கூட்டத்தில்  கலகம் செய்யும்படியாகச் சொல்லவில்லை. அது மிகவும்  தப்பான தும், பயங்காளித்தனமானது மான காரிய மாகும். ஆதலால், ஒவ்வொரு இடங்களி லும் இதற்கென்றே தனிக்கூட்டம் கூட்டியே பேச வேண்டுமென்று வலியுறுத்திச் சொல்லுகிறோம். அப்படிப்பட்ட கூட்டத்தில் காங்கிரசுக் காரர்கள் குழப்பம் செய்தால் அதற்காக யாரும் பின்வாங்க வேண்டிய தில்லை  அதன் மூலமாகவே காங்கிரஸ் என்பது காலித்தனமும் உடையது என்பதை ருஜிப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கூடப் பெறலாம். ஆகையால் அதற்குப் பயப்பட வேண்டியதில்லை.
ஆனால்,  சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்து விட்டார்கள்? என்று கேட்டால், காங்கிரசின் புரட்டை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார் கள் என்று சொல்லிவிடும் பதிலே அதற்குப்  போதுமான பதிலாகும்.  ஏனெ னில், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு நேர்மாறான கொள்கைகளேதான் பெரி தும் காங்கிரசில் இருப்பதை மனதார உணர்ந்தும் சுயமரியாதையும் காங்கிரஸ் கொள்கையும்ஒன்றுதான் என்று சிலர்  விஷமப்பிரசாரம் செய்வதால் அதை ஜனங்கள் அறியும்படி செய்வதன் மூலமே சுயமரியாதை கொள்கைகளை எடுத்துச் சொல்ல வசதி ஏற்படுகின்றது . எனவே, இந்தச் சமயத்தில் அலட்சியமாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கிறோம்.
 தந்தை பெரியார்  - குடிஅரசு - தலையங்கம் -  19.07.1931

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


ஆகஸ்ட் 16-31


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...