Thursday, August 2, 2012

ஈழத்தமிழர் இன்னல் களைந்திட வாரீர்! கலைஞர் கடிதம் 1.8.2012


உடன்பிறப்பே,
இன்று 1-8-2012.   இன்னும் இடையில் பத்தே நாட்கள்தான் உள்ளன. 12-8-2012 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது டெசோ அமைப்பின் சார்பில் நாம் நடத்தும்  ஈழத் தமிழர்  வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அந்த மாநாட்டினையொட்டி காலை 10 மணியளவில்  சென்னை, தியாகராயர் நகரில் கலைவாணர்  சிலை அருகில் அமைந்துள்ள அக்கார்ட்  ஓட்டலில்  ஆய்வரங்கம் (கான்கிளேவ்) என் தலைமையிலே நடைபெறவுள்ளது. ஆய் வரங்கத்தில் கருத்துக்கள் பரிமாற்றம் நடைபெறும்.
பொது மாநாடு  மாலையில் நடைபெறவுள்ள பொது மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் எவ்வாறு வடிவமைக்கப் பட  வேண்டும், ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் நம்முடைய கோரிக்கைகள், வேண்டு கோள்கள் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம் அந்த ஆய்வரங்கில்  கலந்து பேசி தீர்மானிக்கப்படும்.   மாலை 4 மணி அளவில்  ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொது மாநாடு  நடை பெறவுள்ளது.   அந்த மாநாட்டில்தான்  உன்னையும், உன்னோடு வருகின்ற நமது உடன் பிறப்புகளையும் சந்திக்க இயலும்.
ஆய்வரங்கத்திலும், மாலை பொது மாநாட்டிலும்  மத்திய அரசின் வேளாண் மைத் துறை அமைச்சர், இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அருமை நண்பர் மாண்புமிகு சரத் பவார் அவர்கள்; எனது அந்தக் காலத்து நண்பர் காஷ்மீரத்து சிங்கம்  ஷேக் அப்துல்லா அவர்களின் திருமகனும், மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சருமான மாண்புமிகு பரூக் அப்துல்லா அவர்கள்;  ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நண்பர் திரு. சரத் யாதவ் அவர்கள்; லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும்,  என்னுடைய நீண்ட நாள் நண்பரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள்;  சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலா ளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திரு.ராம் கோபால் யாதவ்  ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இலங்கையிலிருந்து....
இலங்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நண்பர் திரு. மாவை சேனாதிராஜா,  நண்பர் திரு. சுமந்திரன், நண்பர் திரு.  யோகேஸ்வரன்,  நண்பர் திரு. க. சரவண பவன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நண்பர்கள் திரு. கஜேந்திர குமார் பொன்னம்பலம், திரு. செல்வராஜா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், வழக்கறிஞர் திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எ. செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், நவ சமா சமாஜா கட்சியின் தலைவர் டாக்டர் திரு. விக்கிரம பாகு கர்ணரத்தினே அவர்களும்,  வருகை தந்து ஈழத் தமிழர்களின் உணர்வுகளையும் உள்ளக்கிடக் கையையும்  தெரிவிக்கவிருக்கிறார்கள்.
நைஜீரியாவிலிருந்து....
மேலும் நைஜீரியாவிலிருந்து ஈடோ, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், மாண்புமிகு ஓஸிகேனா போய் டொனால்டு; நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அப்துல் ரசாக் மோமோ; சுவீடன் பாராளுமன்ற உறுப்பினர் திரு. நஸீம் மாலிக்;  மொராக்கோவிலிருந்து  திரு. டைடா முகம்மது; திரு. அஃபெகோ முபாரக்;  துருக்கியிலிருந்து  முனை வர் திரு. கெமால் இல்திரிம்ஸ்;  மலேசியாவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் திரு. யுஸ்மாடி யூசுஃப்; மற்றும் திரு. ஆனந்த் குருசாமி ஆகியோரும்  வருகை தந்து  ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை முழுமை யாக உணர்ந்துள்ள காரணத்தால் தமது ஆதரவினை நல்கி உரையாற்ற விருக்கிறார்கள்.
இவர்கள் தவிர உலகின் பல்வேறு பகுதிகளிலே உள்ள ஈழத் தமிழர்கள் நமது டெசோ  மாநாட்டில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்று இண்டர்நெட் வாயிலாக தகவல் கேட்டவண்ணம் உள்ளனர்.   மேலும் பலர் பார்வையாளர்களாக கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மாநாட்டுப் பணிகள் காலையிலும் மாலை யிலும் அன்றாடம் அண்ணா அறிவாலயத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு அதன்படி மாநாட்டுக் கான தொடக்கப் பணிகளும், ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.  டெசோ அமைப்பில் நமது கழகத்தின் சார்பில் உறுப்பினராக உள்ள பொதுச் செயலாளர், இனமானப் பேராசிரியர் அவர்கள் அண்ணா அறிவாலயம் வந்து மாநாட்டுப் பணிகளில் தனது அனுபவமிக்க யோசனைகளைச் சொல்லி வருகிறார்.   மற்றொரு உறுப்பினரான சகோதரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டில் இருப்பதால் அன்றாடம் சென்னை அலுவலகத்திற்கு வரமுடியா விட்டாலும், நேரம் கிடைக்கின்ற போதெல்லாம், தொலைபேசி வாயிலாக மாநாட்டிற்கான ஆலோசனைகளைச் சொல்லி வருகிறார்.
இளவல் வீரமணி டெசோ அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவ ரான தமிழர் தலைவர் இளவல் வீரமணி அவர்கள் பணி காரணமாக அமெரிக்கா செல்வதாகவும்,  மாநாட்டுப் பணிகளைக் கவனிக்க விரைவில் திரும்பி விடுவேன் என்றும் என்னிடம் கூறிவிட்டுச் சென்றவர்,  அமெரிக்காவில் உடல் நலம் பாதிக்கப் பட்ட காரணத்தால், அங்கே சிகிச்சை பெற்று வரு கிறார்.  எப்படியும் மாநாட்டிற்கு வந்து விடுவதாக அங்கிருந்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெசோ அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவரு மான தம்பி திருமாவளவன் என் இல்லத்திற்கு வந்து  மாநாட்டுப் பணிகளிலே தனது கடமை என்ன என்று விசாரித்ததோடு,  மாநாடு குறித்த யோ சனைகளையும் நல்கினார்.   மற்றொரு உறுப்பின ரான தம்பி  சுப. வீரபாண்டியன், அவரது பணி காரணமாக லண்டன் சென்றவர், இந்த மாநாட்டிற் காகவே தமிழகம் திரும்பியுள்ளார்.   காலையிலும், மாலையிலும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து  இந்த மாநாடு குறித்த பணிகளிலே எனக்கு மிகவும் பேருதவியாக இருந்து வருகிறார்.
டெசோ உறுப்பினர்களைத் தவிர்த்து, மாநாடு குறித்த ஏற்பாடுகளை கழகக் கண்மணிகள்,  தம்பிகள் பொருளாளர்   மு.க. ஸ்டாலின்,  துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி.,  கல்யாணசுந்தரம், முனைவர் பொன்முடி, வழக் கறிஞர்கள்  கே.எஸ். ராதாகிருஷ்ணன்,  அசன் முக மது ஜின்னா ஆகியோரும், மாநாட்டின் விளம்பரம் மற்றும் அழைப்பிதழ் பணிகள் போன்றவற்றை எ.வ. வேலு அவர்களும் ஓய்வில்லாமல் கவனித்து வருகி றார்கள்.  இலங்கையிலே உள்ள தமிழர் தலைவர் களிடம் எல்லாம் தம்பி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவர்களையெல்லாம் நம்முடைய மாநாட்டிற்கு அழைக்கும் பணியிலே ஈடுபட்டுள்ளார்.
வட இந்தியத் தலைவர்களுடன் பேசி மா நாட்டிற்கு அழைப்பதற்கான பணிகளை நாடாளு மன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கவனித்து வருகிறார். ஆய்வரங்கம் நடத்துவதற் கான ஏற்பாட்டினையும் விருந்தினர் தங்குவதற்கான  ஏற்பாட்டினையும் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் செய்து வருகிறார்.  பொது மாநாடு நடைபெறுவதற்கான மேடை அமைப்பு பணிகளை சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ. அன்பழகன் கவனித்து வருகிறார்.
இந்த மாநாட்டின் மைய நோக்கக் கருத்துருக் களை விளக்கி கையேடு  ஒன்றும் டெசோ சார்பில்  ஆங்கிலத்திலும் தமிழிலும் தயாரிக்கப்பட்டு 16-7-2012 அன்றே  ஏடுகளுக் குத் தரப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டிற்குத் தேவையான முக்கியமான குறிப்புகளை மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி  திரட்டித் தந்துள்ளார். இந்தக் கையேடு தயாரிப்பில் தம்பி அசன் முகமது ஜின்னா முக்கியப் பணி ஆற்றியுள்ளார்.
மாநாட்டு தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் நாம் நிறைவேற்றவுள்ள தீர்மானங்கள் எல்லாம் போரினால் பாதிக்கப் பட்டும், இடம் பெயர்ந்து வாழும்  ஈழத் தமிழர் களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தி உயர்த்து வதற்கும், ஜனநாயக உரிமைகளோடு கண்ணியத் துடன் வாழ்வதற்கும், அதற்கு  தாய்த் தமிழகத்திலே உள்ள நாமும், இந்திய அரசும்  எந்த வகையில் எல்லாம்  உதவிட முடியும் என்பதை வலியுறுத்து வதற்காகவுமான  முயற்சியிலே  ஈடுபட்டுள்ளோம்.  ஈழத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு வழியில்லாமல்  உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் குடியேறி புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ற பெயராலும், அகதிகள் என்ற பெயராலும் அல்லாடிக் கொண்டிருக்கும்  நமது  தமிழ் இனத்தவர்  மீண்டும் இலங்கை திரும்பி அமைதியானதும், உரிமையுடன் கூடியதுமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவதற்கு   ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச  நிறுவனங்களின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும்  இந்த மாநாட்டின்  ஆய்வரங்கில் நாம் கலந்து பேசி முடிவெடுக்கவுள்ளோம்.
இந்த  மாநாடு குறித்து  நாம் அறிவித்த போது,  தமிழகத்திலே உள்ள சில நாளேடுகள் அதைப்பற்றி எப்படியெல்லாம் விமர்சனம் செய்தன என்பதை நீ படித்தறிந்திருப்பாய்!   மாநாடு நடக்காது என்றும்  - மத்திய அரசு அனுமதி கொடுக்காது என்றும் - மாநில அரசு  தடை செய்யப் போகிறது  என்றும்  - கழக முன்னணியினர் ஆதரவு இந்த மாநாட்டிற்கு இல்லை என்றும் - மாநாடு வெற்றி பெறாது என்றும் தங்களால் முடிந்த அளவிற்கு விளம்பரம் தேடிக் கொடுத்தார்கள்.  அந்த ஏடுகள் எல்லாம் இன்னமும் வெளி வந்து கொண்டுதான் உள்ளன.   அந்த ஏடுகள் எந்த அளவுக்கு தமிழ் இன உணர்வைப் பாது காத்திடப் பணியாற்றுகின்றன என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் முடிந்து விட்டனவா?  29-7-2012 தேதியிட்ட தினமலர் நாளேட்டில் கடலில் முளைக்கிறது புது ஆபத்து  - ஊடுருவும் சீனாவுக்கு உதவுகிறது இலங்கை என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை வந்துள்ளது.  அதில் போர் முடிந்த கையுடன் தனது நாட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டதுடன் சீன இன்ஜினியர்களுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பும் கொடுத்தது.   இன்ஜினியர்கள் என்ற போர்வையில் சீன ராணுவத்தின் கட்டுமானப் பிரிவு இன்ஜி னியர்கள்  இலங்கையில் கால் வைத்தனர்.  இலங்கையின் தென் முனையில்  உள்ள அம்பாந் தோட்டையில் பிரமாண்ட கடற்படை தளத்தை இலங்கை அனுமதியுடன் சீனா அமைத்து வருகிறது.
அது மட்டுமல்லாமல், சீன கடற்படையின் தயாரிப்பான அதிவிரைவு ரோந்து படகுகள் இந்திய கடல் எல்லைப்பகுதி வரை ஊடுருவி சீண்டிப் பார்க்கத் தொடங்கின என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன.  இலங்கைக் கடற்படை வீரர்களுடன் சீனர்களும் உள்ளனர் என்றும்  இது குறித்து மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்றும்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  ராமேஸ் வரம் மீனவர்கள் எச்சரிக்கை குரல் கொடுத் துள்ளனர் என்றும் தொடரும் அந்தக் கட்டுரையின் இறுதியில், சீன கடற்படை வீரர்களின் உதவியுடன் தனுஷ்கோடி அருகே சர்வதேச கடல் எல்லையில் உள்ள 7வது தீடைப் பகுதியில் தற்காலிக கடற்படை முகாம் பணிகளை இலங்கை கடற்படை சுறுசுறுப் பாக மேற்கொண் டுள்ளது.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி சில நாட்களுக்கு முன்னர்  மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இனியும் இலங்கை விஷயத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு சாதக மானது அல்ல என்று மீனவர்கள் எச்சரிக்கின்றனர்  என்றும் தினமலர் எழுதியுள்ளது.   இதைப்பற்றி யெல்லாம் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, இந்தியத் திருநாட்டின் பாதுகாப்புக் கெதிரான அச்சுறுத் தல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் கோர வேண்டாமா?    இதற்கெல்லாம் விடை காணுவதற்காகத்தான் 12ஆம் தேதி டெசோ மாநாட்டினை நாம் நடத்துகிறோம்.
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்!
போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்று வோர் தூற்றட்டும், நம் கடன் தமிழர்க்கு பணி செய்து கிடப்பதே என்று,  நம்மால் முடிந்த வரை, நம்முடைய குரல்  ஈழத் தமிழர்களுக்காக ஒலிக்கும், ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் காயங்களுக்கும்  -  அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும்  மருந்து போடு கின்ற மாநாடு தான்  டெசோ மாநாடு!   இந்த மாநாட்டிற்கான  மைய நோக்கத்தைப் புரிந்து கொண்டு  அனைவரும் பங்கேற்க வேண்டுமென உன் அண்ணன் அழைக்கின்றேன்.
அன்புள்ள,
மு.க.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...