Saturday, July 14, 2012

காமராசர் பிறந்த நாள் ஜூலை 15 திரும்பிப் பார்ப்போம் பச்சைத் தமிழரை


தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் ரட்சகர் என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் பெருந்தலைவர் காம ராசரின் பிறந்த நாள் இன்று  (ஜூலை 15). நூற்றுப் பத்து ஆண்டுகளுக்கு முன் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தம் கடுமையான உழைப்பால் அகில இந்தியத் தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்த காம ராசர் பெயரால் கால் நூற்றாண்டுக்கு முன் டெல்லியில் ஓர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
அதன் காரணம் என்னவென்று கேட்டபோது இந்தியாவில் ஒருவர் அகில இந்தியத் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டுமென்றால் அவர் முதலில் மேல்சாதிக்காரராக, குறிப்பாக பார்ப்பனராக இருக்க வேண்டும். ஒரு பாரம்பரியமிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் மேல்நாட்டுப் படிப்புப் படித்திருக்க வேண்டும். அடுத்தபடியாக அவர் வடநாட்டுக்காரராக இருக்க வேண்டும். அதிலும் இந்திக்காரராக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக அவர் சிவப்பு நிறத்தவராகப் பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக  இருக்க வேண்டும். இந்த ஆறு அடையாளங்களில் ஒன்று கூட இல்லாமல் ஓர் அகில இந்தியத் தலைவராக வந்தார் என்றால் அது காமராசர் ஒருவர்தான் என்று பதில் சொன்னார்கள்.
கறுப்புக் காந்தி என்றழைக்கப்பட்ட காமராசர்தான் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்த ஜவகர்லால் நேரு மறைந்தபோது லால்பகதூர் சாஸ்திரியை ஏகமானதாகத் தேர்வு செய்தவர். அவரது திறமையை, பெரு மையை உலகமே பாராட்டியது.
அன்றைக்கு 16 ஆயிரம் மக்கள் மட்டுமே வசித்து வந்த விருதுநகரில் மேகவர்ணம் என்ற பிரிவினரைச் சேர்ந்த பிரபல வியாபாரியான குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மையாருக்கு 1903-ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் காமராசர் பிறந்தார். அங்கே சத்திரிய வித்தியா சாலை என்ற பள்ளியில் அவர் 6-ஆம் வயதில் சேர்க்கப்பட்டார். இந்தப் பள்ளிக் கூடத்திற்கு ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கைப்பிடி அரிசி கொண்டு போய் கொடுக்கவேண்டும். ஆதலால் இப்பள்ளி பிடியரிசிப் பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்டது. காமராசரின் 12-ஆம் வயதிலேயே அவரது தந்தையார் எதிர்பாராது முடிவெய்திய காரணத்தால் அவரது பள்ளி செல்லும் வாய்ப்பு நிறுத்தப்பட்டது.
1920-ஆம் ஆண்டு காந்தி அறை கூவல் விடுத்த ஒத்துழையாமைப் போராட்டத் தின்போது காமராசர் அதை ஏற்று, போராட்டத்தில் பங்குகொண்டார். விருதுநகரில் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்கள் எல்லாவற்றுக்கும் நடந்தே சென்றுதான் பிரச்சாரம் செய்தார். ஒரு முறை 60 கிலோ மீட்டர் சுற்றி மதுரைக்கு நடந்து சென்று கட்சிப் பணியாற்றி விட்டுத் திரும்பி வந்தார்.
1924 தந்தை பெரியார் கேரள மாநிலம் வைக்கத்தில் நடத்திய போராட்டத்தில் ஒரு தொண்டராக காமராசர் விருதுநகரி லிருந்து சென்று வந்தார்.
காங்கிரஸ் தலைவராக 1940-இல் காமராசர் வெற்றி பெற்றார். அப்போது அவரைத் தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. 1941-இல் அவர் சிறையில் இருந்தபோதே விருதுநகர் நகராட்சித் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறையிலிருந்து விடு தலையாகி வெளியே வந்து நகராட்சித் தலைவர் என்ற முறையில் கூட்டத்தை நடத்தி விட்டுப் பின் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இந்தப் பதவியில் இருந்தால் காங் கிரஸ் கட்சியின் இதர கட மைகளையெல்லாம் கவனித்துச் செய்ய முடியாது என்ற கார ணத்தால்தான் அப்பதவியிலி ருந்து விலகினேன் என்று அவர் சொன்னார். அதுபோலவே பொதுத் தொண்டு செய்பவருக் குத் திருமணம் ஒரு தொல்லை என்று முடிவு செய்து திருமணத்தைத் தவிர்த்து கடைசிவரை பிரமச்சாரியாகவே வாழ்ந்து தொண் டாற்றினார்.
காந்தியார் நடத்திய 1942 ஆகஸ்டு 9 வெள்ளையனே வெளியேறு என்ற மாநாட்டிலும் இயக்கத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்தார். 1952இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது நடைபெற்ற முதல் இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஆனா லும் காங்கிரசேதான் கூட்டணி மந்திரி சபை அமைத்தது. இராஜாஜி முதலமைச் சரானார். அப்போது தமிழ்நாட்டில் இருந்த 12 ஆயிரம் பள்ளிகளில், அரசு நிதி நெருக் கடியைக் காரணம் காட்டி 6 ஆயிரம் கிராமப் பள்ளிக் கூடங்களை இராஜாஜி மூடினார். மீதி இருந்த பள்ளிகளிலும் அரை நேரப்படிப்பும் மீதி அரைநேரம் அவரவர் குலத் தொழிலைச் செய்தால் போதுமானது என்கிற கல்வித் திட் டத்தைக் கொண்டு வந்தார்.
தந்தை பெரியார் இத்திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று சொல்லி இதனால் தமிழர்களின் எதிர்காலம் இருளடைந்து பாழாகிவிடும் எனவும் எச்சரிக்கை செய்தார். இத்திட்டத்தை ஒழிக்க பெரியார் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் பிரச்சாரப் படையை அமைத்தார். அந்தப் பிரச்சாரப் படை நீடாமங்கலம் அ.ஆறுமுகம் தலைமையில் நாகப்பட் டினத்திலிருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டது. இக்குலக்கல்வித் திட்டத்தின் தீமைகளை விளக்கி வழியெங்கும் பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்திப் பிரச்சாரம் செய்து கொண்டே இக்குழு வந்தது. பொதுமக்களிடையே குலக்கல்வித் திட்டத்திற்கான எதிர்ப்பு வலுவடைந்ததைக் கண்ட இராஜாஜி தமக்கு உடல்நலம் சரியில்லை என்று சொல்லி முதலமைச்சர் பதவியை இராஜி னாமா செய்தார்.
தந்தை பெரியார் வலியுறுத்தியதன் பேரில் காமராஜர் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட உடனேயே குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தார். இராஜாஜி மூடிய 6 ஆயிரம் கிராமப் பள்ளிக் கூடங்களையும் மீண்டும் திறந்தார். மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி என்ற கொள்கையை வகுத்துத் தமிழ்நாடு முழுவதும் உடனே செயல்படுத்தினார். பெரியார் காமராசரைக் கல்வி வள்ளல் என்று அழைத்துப் பாராட்டினார். தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி வரலாற்றில் காமராசர் வகிக்கும் மகத்தான பங்கில் உரிமை கொண்டாட வேறு யாருக்கும் அருகதை கிடையாது என்று தந்தை பெரியார் சென்னை கலைவாணர் அரங் கில் நடைபெற்ற பச்சைத் தமிழர் காமராசர் விழாவின் போது தன் கைப்பட எழுதிய செய்தியை அனுப்பிவைத்தார்.
ஏழைப்பங்காளர் என்று எல்லோராலும் சொல்லப்பட்ட காமராசர் 1954 முதல் 1963 வரை ஒன்பது ஆண்டுகள் இணையற்ற முதலமைச்சராக மிகக் குறைந்த அளவில் எட்டு பேர் அடங்கிய மந்திரி சபையைக் கொண்டு சேவை செய்தார். அவரது அமைச்சரவையில், சட்டசபையில் காங் கிரசை எதிர்த்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியையும் ஒரு அமைச் சராக சேர்த்துக் கொண்டு காங்கிரசுக்கு வெளியே இருந்த எதிர்ப்பையும் இல்லாமல் செய்து கொண்டு அவரது அணுகுமுறை எல்லோராலும் பின்பற்றத்தக்கது, பாராட்டத்தக்கது.
அப்போது ஒரு முறை காமராசர் குறிப்பிட்டார். நான் பல்கலைக் கழகங் களில் படித்தது இல்லை. ஆனால் எனக்கு பூகோளம் தெரியும். சென்னை மாகாணத் தில் உள்ள எல்லா இடங்களையும் நான் அறிவேன். ஏரிகள் எங்கெங்கு இருக் கின்றன, மக்கள் என்னென்ன தொழில் செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பதையெல்லாம் அறிந்திருக்கிறேன். இதையெல்லாம் பூகோளம் என்று கருத வில்லை என்றால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.
வெறும் கோடுகளால் எல்லைகள் வகுத்து புள்ளிகளால் இடங்களைக் குறிப்பதுதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தேவையில்லை என்றார்.
அவரது சிந்தனை, உழைப்பு, ஊக்கம் எப்போதும் தெளிவாக இருந்தது, உறுதி யாக இருந்தது. ஏழை மக் களின் துயர் துடைப்பதையே முக்கிய அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார். அவர் அடுத்த படியாக அதிக கவனம் எடுத்துக் கொண்ட துறைகளில்  மின்சாரம் முத லிடம் பெற்றது. அடுத்தது போக்குவரத்து. இவை இரண்டும் மக்கள் வாழ்க் கைக்கு மிகச் சிறந்த ஏற்றத்தைக் கொடுத்தன.
காமராசரின் நடைமுறை அறிவு எத்தனையோ பட்டப் படிப்பு படித்தவர்களை விட மேலானது. ஒரே ஒரு உதா ரணம். அப்போது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் பொன்விழாவில் கலந்து கொள்ள பிரதமர் ஜவகர்லால் நேரு சென்னை வந்தார். அவ்விழாவில் உரையாற்றும்போது, விஞ்ஞானிகள் எல்லாம் விவசாயிகள் வாழ்வு மேம்பட உழைக்க வேண்டும். தமிழ்நாட்டின் கால்நடைச் செல்வத்தை அதிகப்படுத்திப் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நேருவை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு வந்த கையோடு கால்நடைக் கல்லூரி முதல்வரையும், துறை இயக்குநரையும், அரசு செயலாளரையும் அழைத்து இதை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்று கலந்து ஆலோசித்தார்.
அப்போது பக்தவத்சலம் இத்துறையில் அமைச்சராக இருந்தார். ஓராண்டுக்கு எத்தனை கால்நடை மருத்துவர்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள்? என்று அதிகாரிகளிடம் கேட்க, அப்போது ஆண்டுக்கு 60 பேர் என்று சொன்னார் கள். தமிழ்நாட்டுக்கு 12 ஆயிரம் பஞ் சாயத்துகளிலும், கால்நடை கருவூட்டல் நிலையங்களில் நியமிக்க ஆண்டுக்கு 60 பேர் என்றால் அத்தனை ஆண்டுகள் காத்திருக்க முடியாது. நம் பிரதம மந்திரி சொன்னதை நாம் எப்படிச் செய்வது என்று யோசியுங்கள் என்று சொல்லி அதிகாரிகளை அனுப்பிவிட்டார். அப் போது மத்திய அரசு கேந்திர கிராமத் திட்டங்களை நிறைவேற்ற பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அடுத்த நாள் முதலமைச்சர் காமராசர் அதிகாரிகளை அழைத்துச் சொன்னார்: தமிழ்நாட்டில் பள்ளி இறுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு காலம் கால்நடை அபிவிருத்தி பற்றி சிறப்புப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்த ஒசூர், ஒரத்த நாடு, புதுக்கோட்டை, செட்டிநாடு, அபி ஷேகப்பட்டி முதலான கால்நடைப் பண் ணைகளில் எல்லாம் கால்நடை அறிவிய லின் அடிப்படைகளை நடை முறைப் பயிற்சிகளோடு (Practical Training) சொல் லிக் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாக்மேன் கோர்ஸ் ஆரம்பிக்க ஆணையிட்டார்.
Anatomy, Psychology, Penacitalogy, Bactrerialogy, Animal Husbandry, Material Media, Sanitational Hygene and Handling of Animals   என்ற சுமார் 8 பொருள்களில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு கால் நடை ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டு கிராமப்புறங்களில் நியமிக்கப்பட்டார்கள்.  3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடை அபி விருத்தி கிளை நிலையங்களில் செயற்கை முறை கால்நடைக் கருவூட்டல் பணிகள் வெகு சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
- இரா. இரத்தினகிரி
- தொடரும்




காமராசர் பற்றி ஒரு தகவல்



1 comment:

Thamizhan said...

http://www.youtube.com/watch?v=Mr9_aeNuxlg&feature=player_embedded

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...