Tuesday, March 13, 2012

ஈழத் தமிழர் பிரச்சினையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தமிழர் விரோதப் போக்கு?


கூட்டணியில் தி.மு.க.வின் உறவை
மறுபரிசீலனை செய்ய வேண்டும்!


இனியும் காலம் கடத்தத் தேவையில்லை 

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தொடர்ந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்படுவதால், அக்கூட்டணியில் தொடர்வதை தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை வருமாறு:

இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளது என்பதை அய்.நா. மன்றம் அமைத்த தனிக்குழு தந்த அறிக்கையின்மீது, ஜெனிவாவில் கூடும் மனித உரிமைக் குழு மன்றத்தின் முன், போர்க் குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை இராஜபக்சே அரசினைக் கண்டிக்கும் தீர்மானம் - அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்பதைத் தெளிவாகக் கூறிடும் நிலையில், இந்திய அரசு அத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அதன் தலைவர் பல முறை வற்புறுத்தியுள்ளார்கள்.

அதோடு அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில் அதன் தலைவர் மூலம் வற்புறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் அத்துணைக் கட்சிகளும் ஏன் காங்கிரஸ் கட்சி உட்பட வற்புறுத்தி, தங்கள் உணர்வுகளைத் தெரிவித்து விட்டனர். தமிழக ஆளுங் கட்சி, முதல்வர், இடதுசாரி கட்சிகள் உட்பட பலரும் இதில் ஒரே குரலில் வற்புறுத்தி விட்டனர். இப்பிரச்சினையால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று நாடாளுமன்றத்தில் ஒருமித்த எதிர்க்கட்சிகளின் குரல்!


இன்று காலை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தி.மு.க., அ.தி.மு.க. இடதுசாரிகள், பா.ஜ.க., உட்பட  எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன!

இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் உணர்ச்சி உச்சக் கட்டத்திற்குச் சென்றுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடியரசுத் தலைவரின் உரையில்கூட தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்கும் வகையிலான உத்தரவாதம் இல்லை; ஒப்புக்காக இரண்டு வரிகள் என்கிற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வைக் கிஞ்சிற்றும் மதிக்காத வஞ்சிக்கும் போக்காகவே கருதப்படும். தி.மு.க. மறுபரிசீலனை செய்யட்டும்!

இந்நிலையில் இன்னமும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு வெண்டைக்காய், விளக்கெண்ணெய், கத்தாழை கலந்ததாக இருப்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது!

தமிழ்நாட்டையும் காங்கிரஸ்  கட்சி  கை கழுவி விடத் தயாராக விட்டது என்பதையே இது காட்டும். அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் தி.மு.க. தலைவர் அவர்கள்  எவ்வளவோ வேண்டுகோள் மேல் வேண்டுகோள் கொடுத்த பிறகும் மேலும் பிடிவாதம் காட்டினால், தி.மு.க. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடருவதுபற்றி தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.

மத்திய ஆட்சி என்பது வெறும் காங்கிரஸ் ஆட்சி அல்ல; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதை ஏனோ வசதியாக மறந்துவிட்டு, அவர்கள் நினைப்பதுதான் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்று செயல்படுவது - கூட்டணி முறைக்கே விரோதமான போக்கு அல்லவா?

தி.மு.க.வுக்கு நமது அன்பான வேண்டுகோள்

தி.மு.க. இது பற்றி சிந்தித்து, இனிமேலும் அதில் தொடருவது விரும்பத்தக்கதல்ல என்பதால் நமது அன்பான வேண்டுகோள் - உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை அனைவரின் உள்ள உணர்வுகள், நிலைப்பாடு இதுவேதான்.

மத்திய அரசு இதில் தனது பிடிவாதத்தைத் தொடர்ந்தால் ஏற்கெனவே ஏற்பட்ட அபவாதம் என்ற பழியிலிருந்து தி.மு.க. மீளுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்பது நமது வேண்டுகோள் - தி.மு.க.விற்கும் அதன் தலைமைக்கும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

    No comments:

    குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...