Friday, February 24, 2012

விடுதலை வைப்பு நிதி


தோழர்களே, தோழர்களே, மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த வரலாற்றுச் சாதனையைக் கொள்கைப் பரப்புதல் என்னும் திசையில் புலிப் பாய்ச்சலாக ஒரு திட்டத்தை திராவிடர் கழகப் பொதுக் குழு அறிவித்தது.
விடுதலை ஆசிரியருக்குச் சிறப்பு செய்வது என்பது 50 ஆம் ஆண்டை ஒட்டி 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டுவது என்னும் முயற்சியில் கழகம் ஈடுபட்டது.
குமரி முதல் திருத்தணி வரை உள்ள கழகத் தோழர்கள் களப் பணியாற்றினர் - கடமையை முழு மூச்சுடன் செய்தனர் - விளைவு காரியம் வெற்றியாக முடிந்து - களிப்பெய்தினர். கழகத் தலைவர் - விடுதலை ஆசிரியர் கழகத் தோழர்கள் மத்தியிலும் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கழகத்தின் மீதுள்ள பற்றும், மதிப்பும், எதிர்பார்ப்பும் இதன் மூலம் வெளிப்பட்டது.
விடுதலைக்குப் புதிய வாசகர்கள் கிடைத்துள்ளனர். அதற்கேற்றாற்போல செய்திகளை வெளியிடும் முறை - புத்தம்  புதிய அணுகுமுறைகளோடு எழிலூட்டும் வண்ணம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொள்கைகளைக் கூர் தீட்டியும், பொதுத் தகவல்களைப் பொறுக்கி எடுத்தும், காலத்தின் எதிர்பார்ப்பைக் கணக்கிட்டுக் கட்டுரைக் கருவூலங்களையும் வாரி வழங்கி இருக்கிறோம்.
களப்பணியாற்றும் கழகத் தோழர்கள் புதிய சந்தாதாரர்களான வாசகர்களோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டு அவர்களின் மனப்பாங்கையும், மதிப்பீட்டையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புதிய வாசகர்களின் வீடுகளில் உள்ள இளைஞர்கள், தாய்மார்கள் கவனத்துக்கு நமது ஏடு செல்கிறதா? செல்ல வில்லை என்றால் அவர்களோடு இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விடுதலை சந்தா பெருகியதன் நோக்கம் நிறைவேறுமாறு செய்வது இந்தக் கால கட்டத்தில் மிக முக்கியமான பணியும், கடமையும் ஆகும்.
இந்தப் புதிய சந்தாதாரர்கள் விடுதலை யின் நிரந்தர வாசிப்பாளர்களாக நீடிப்பதற்கு ஒல்லும் வகைகளில் எல்லாம் உழைப்பதைக் கழகத்தின் முக்கிய முன்னுதாரணப் பணியாகக் கொள்ள வேண்டும் என்று கழகத் தோழர்களை  மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
இதனுடைய தொடர்ச்சியான முயற்சிதான் விடுதலை க்கு வைப்புநிதி ஒரு கோடி ரூபாய் என்பதாகும். இதற்கான தொடக்கமும் நம்பிக்கையூட்டும் அளவுக்கு அரும்பி நிற்கிறது.
தந்தை பெரியார் நினைவு நாளில் (24-12-2011) சென்னையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் துளிர்த்த இந்தக் கருத்துருவுக்கு, அப்பொழுதே ஆதரவுக் கரங்கள் நீள ஆரம்பித்தன.
அடுத்த திங்கள் 10, 11 ஆகிய நாள்களில் தஞ்சையில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் இது புதியதோர் திருப்பத்தைக் காணவேண்டும்.
வேலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு மானமிகு பா.அருணாசலம் அவர்கள் ரூபாய் ஒரு லட்சம் அளித்து இத்திசையில் உந்துதலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ஆரணி தொழிலதிபர் மானமிகு ஆர்.என்.சாமி அவர்கள் தம் சட்டைப் பையில் இருந்த ஆறாயிரம் ரூபாயை அப்பொழுதே - அப்படியே எடுத்துக் கொடுத்தார் முதல் தவணையாக.
பிறந்த நாள், திருமண நாள், மற்றும் நினைவு நாளை யொட்டி விடுதலை வைப்பு நிதிக்கு வழங்குவதையும் கழகத் தோழர்கள் கடமையாகக் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கதே. மதவாதிகளாக, மூடநம்பிக்கைவாதிகளாக இருந்தால் எவ்வளவுப் பணம் பாழாகி இருக்கும் - காலமும் விரயமாகி இருக்கும்?
பகுத்தறிவுவாதிகளாகிய நாம், சமூக நீதியில் நம்பிக்கையுள்ளவர்களாகிய நாம் நற் பணிக்காக, மனித குல வளர்ச்சிக்காக, பகுத்தறிவு மலர்ச்சிக்காக அவற்றில் ஒரு பகுதியை நாம் ஏன் மகிழ்ச்சியோடு அளிக்கக்கூடாது? நன்றிக் கடனாகவும் ஏன் நினைக்கக்கூடாது?
விடுதலை அரசு நூலகங்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. அரசு விளம்பரங்கள் விடுதலைக்குக் கிடையவே கிடையாது. இவ்வளவுக்கும் திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வமான இலட்சிய ஏடு விடுதலை.
அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் தாங்கியுள்ள ஒரு கட்சியின் ஆட்சியில் இந்த அவலம். இருப்பினும் எதிர்ப்பும், தடைக் கற்களும் வரும்  பொழுது அதனைத் தாண்டிக் குதித்து, தகர்த்தெறிந்து, சிங்கக் குட்டிகளாக பிடரி சிலிர்த்து எழக் கூடிய கருஞ்சட்டை சேனையல்லவா!
நேற்று சென்னையில் நடைபெற்ற மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பணிகள் எந்தத் திசையில், எத்தகைய அணுகுமுறைகளோடு பயணிக்க வேண்டும் என்பதற்கான வழி காட்டுதலை கழகத் தலைவர் தெரிவித்துள்ளார்.
(1) கழக அமைப்புப் பணிகள் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரையிலான வலைப்பின்னல் (Net work).
(2) பிரச்சாரக் கூட்டங்கள்
(3) இயக்க ஏடுகளைப் பரப்புதல்
(4) கழகக் குடும்பங்கள் அடிக்கடி விருந்துடன் கூடிய சந்திப்பு சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பது ஒரு வாழ்க்கை நெறி முறையல்லவா?
தந்தை பெரியார் எதிர்மறை சிந்தனையாளர் அல்லர். அப்படியொரு போக்கு தூரப்பார்வையில் தென்படலாம். ஆனாலும் ஆக்கத்திற்கான அழிவுப் பணி அது என்பது பகுத்தறிவோடு சிந்தித்தால் புலனாகும்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!


.
 1

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...