Monday, January 30, 2012

சனீஸ்வர சக்தி - சயண்டிபிக் பீலா


"என்னங்க சயன்ஸ்? சக்திக்கு முன்னாடி எதுவும் நிற்க முடியலையே?
எந்த சக்தி?
சனி பகவானோட சக்தியைத்தான் சொல்றேன். நாசா காரன் அனுப்பிச்ச சேட்டிலைட்டே சனி பகவான் சக்தியினால் நின்னு போயிடுதாம் சார்! எல்லா பேப்பர்லயும் வந்திருக்கே... அமெரிக்காகாரனே ஒத்துனுட்டான் சார்.. தந்தியில பார்க்கல நீங்க?

என்று வழக்கமாக தினமலரைப் பரிந்துரைக்கும் மாமாக்கள் தினத்தந்தியைச் சுட்டிக் காட்டிச் சொல்லும்படி ஒரு செய்தி வெளிவந்தது.
அப்படியென்ன புதுமையான செய்தி என்று யோசித்துப் பார்த்தால் தெரியும் எலி அம்மணமாக ஓடும் கதை!
அமெரிக்க செயற்கைக்கோள்களைத் திணற வைத்த திருநள்ளாறு சனி பகவான் என்று ஒரு செய்தி அண்மையில் தினத்தந்தியில் வெளிவந்தது. இது நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு என்ற தலைப்பில் பரவி வந்த பிரபல மின்னஞ்சல்! இதென்னடா கொடுமையா இருக்கு? திருநள்ளாறு மட்டுமா தண்ணி காட்டுது..? எல்லா ஊரும்தான் தண்ணி காட்டுது..!  தண்ணீரை மட்டுமா காட்டுது? என்னென்ன வளங்கள், கனிமங்கள் இருக்கு-ன்னு நாசா மட்டுமில்ல எல்லா நாடுகளும் அனுப்புற செயற்கைக் கோள்களும்தான் காட்டுது! படத்தோட காட்டுது! என்று யோசித்துவிட்டு தலைப்பைத் தாண்டி உள்ளே போனால்தான் தெரியும் தண்ணி காட்டுவது யாருக்கு? என்று! (வேறு யாருக்கு? படிக்கும் வாசகர்களுக்குத்தான்).
அளந்துவிடப்பட்டிருக்கும் அந்தக் கதையை முழுமையாகப் போட்டு பக்கத்தை வீணடிக்க விரும்பாததால் கதைச் சுருக்கம் மட்டும் இங்கே: உலகில் எண்ணற்ற செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. அவை இந்தியாவின் திருநள்ளாறு கோவிலைக் கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து நின்று மீண்டும் இயங்குகின்றன. ஆனால் செயற்கைக்கோளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இதை அறிந்த நாசா விஞ்ஞானிகள் திருநள்ளாறு வந்து ஆய்வு செய்தும் ஒன்றும் புரியாததால், சனி பகவானின் சக்தியை வியந்து வணங்கிச் சென்றார் கள். நீங்கள் சனிபகவானை வணங்கிவிட்டீட் களாஆஆஆ? இடையிடையே மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு வந்தது அந்தச் செய்தி.
இந்தத் தகவல் உண்மையா என்பதைப் பார்க்கும் முன்பு, அது எப்படிப் பரவியது என்பதைப் பார்ப்போம். 2011 டிசம்பர் இறுதியில் தினத்தந்தியில் இந்தச் செய்தி வெளியானது. அதற்கு ஓரிரு வாரங்கள் முன்னதாக ராணி வார இதழில் வெளியானது. அதற்கும் கொஞ்சம் முன்னால் நவம்பர் மாதத்தில் இணைய தளங்களில், முகநூல், மின்னஞ்சல் போன்றவற்றில் பரப்பப்பட்டது. ஓஹோ.. அப்படியென்றால் இந்தப் பிரச்சினை அண்மைக் காலத்தில்தான் நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இல்லை... ஏனெனில் அதற்கு முன்பு 2011-ன் தொடக்க நாட்களில் தமிழ் பிராமின்ஸ் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு, ஒரு ரவுண்ட் பரவவிடப்பட்டிருக்கிறது இந்த மின்னஞ்சல். ஓஹோ.. அப்போ 2011 தான் என்று முடிவெடுத்துவிடாதீர்கள். 2009இ-ல் ஒரு சிலரால்; 2008இ-ல் ஒரு சிலரால், 2007-இல் ஒரு சிலரால் அவ்வப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
2007-இல் இருந்து பரப்பப்படும் இந்தத் தகவலுக்கு அந்த மூலக் கட்டுரை ஆதாரமாகச் சொல்வது 2005-_2006 வாக்கில் ஜூனியர் விகடனில் வெளியானதாகச் சொல்லப்படும் செய்தி. இப்போது புரிந்திருக்குமே இதன் உண்மைத் தன்மை! 2005-_2006 வாக்கில் என்று குத்துமதிப்பாகச் சொல்லி, எந்த செயற்கைக்கோள் என்று தெளிவாகச் சொல்லாமல், எப்போதோ நாசா அதிகாரிகள் வந்தார்கள் என்று பொத்தாம்பொதுவாக அள்ளிவிடும் பீலாதான் இந்த வதந்தியின் மூலம்!
அப்படி ஒரு வேளை 2005_-2006இ-ல் இந்தத் தகவல் வெளிவந்து அது உண்மையாயிருக்குமானால் விட்டிருப்பார்களா ஜோசியக்கார, இந்துப் பிரச்சாரக, கதாகலட்சேப, இந்துமுன்னணி வகையறாக்கள்? மெதுமெதுவாக கசியவிடப்பட்டு, உறுதியான செய்தி என்பதுபோல் பரப்பப்படும் வதந்திதான் தினத்தந்தியில் வெளிவந்துள்ளது. இன்று இரவு தூங்கினால் கல்லாக மாறிவிடுவீர்கள் என வந்த செல்பேசித் தகவலால் இரவு முழுவதும் தூங்காமல் சாலையில் விழித்திருந்த மக்கள் வாழும் நாடு இது! (ஜனவரி 2, 2012 - உத்திரப்பிரதேசம்) ஒரு வேளை இப்படி ஒரு அற்புதம் நடக்கும் வாய்ப்பு அந்தக் கோவிலுக்கு இருக்குமானால் விட்டுவைத்திருப்பார்களா?
எந்த செயற்கைக்கோள் பாதிக்கப்பட்டது? எப்போது பாதிக்கப்பட்டது? இது குறித்து நாசா என்ன சொல்லியிருக்கிறது? அதற்கான ஆதாரம் என்ன? நாசா விஞ்ஞானிகள் என்ன ஆராய்ச்சி செய்தார்கள்? எப்போது செய்தார்கள்? எந்தக் கேள்விக்காவது தெளிவான பதில் உண்டா?
சரி, செய்தியோ, வதந்தியோ...இதில் கூறப்பட்டுள்ளது போல் நடக்க சாத்தியமுள்ளதா என்பதைப் பற்றிச் சிந்திப்போம்!
ஒன்று மட்டும் உண்மை - இந்த வதந்தியைப் பரப்பியவர்களுக்கு செயற்கைக்கோளைப் பற்றியும் தெரியவில்லை; சனிக்கோளைப் பற்றியும் தெரியவில்லை.
தற்போது பூமியைச் சுற்றிய நமது வான்வெளிப்பகுதியில் 23000 முதல் 26000 வரையிலான மனிதன் அனுப்பிய தற்போது செயல்படும், செயல்படாத செயற்கைக்கோள்கள், செயலிழந்த பாகங்கள், ராக்கெட் உள்ளிட்ட பொருட்கள் சுற்றிவருகின்றன. செயற்கைக்கோள்கள் இயங்கும்விதம் மிக எளிதான நியூட்டனின் விதி! ஒன்றையொன்று முட்டிக் கொள்ளாமல், ஈர்ப்பு விசையின் காரணமாக இயங்கிவரும் இயற்கைக் கோள்களைப் போலத்தான் செயற்கைக்கோள்களும் செயல்படுகின்றன. மய்ய விலக்குவிசை என்று சிறு வயதில் படித்திருப்போம். எதிர் எதிராக கையைப் பிடித்துக் கொண்டு இருவர் சுற்றி விளையாடும்போது ஒருவரின் பிடி தளர்ந்தால் என்ன நடக்கும்? அதுதான் நடக்கும் செயற்கைக்கோள் ஸ்தம்பித்தால்! நிலைநிறுத்தப்பட்ட தனது சுற்றுப்பாதையிலிருந்து ஏதோ ஒரு விசை செயற்கைக்கோளை நிறுத்துமேயாயின் அது பூமியின் காற்று மண்டலத்திற்குள் வேகமாகக் கீழறங்கத் தொடங்கும். பிறகு கல்பனா சாவ்லா மறைந்த கொலம்பியா விண்வெளி ஓடத்திற்கு என்ன நேர்ந்ததோ அதே போல எரிந்து துகள்களாகிவிடும்.
மூன்று வினாடி ஸ்தம்பித்தால் தனது சுற்றுப்பாதையிலிருந்து இறங்கும் இடைவெளியை செயற்கைக்கோளால் மீண்டும் எட்டமுடியாது. அதை, சரியான இடத்தில் உந்தித் தள்ளுவதற்கு ராக்கெட் இருக்காது.
இதையெல்லாம் கேட்கத் தொடங்கியது உடனே சிலர் ஸ்தம்பிப்பது என்றால் சுற்றிக் கொண்டேதான் இருக்கும்; அதில் பிரச்சினை இல்லை; அதனுடைய கருவிகள் இயங்காமல் இருக்கும் என்று சமாளிப்பார்கள். அப்போதே இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும். ஸ்தம்பிக்கிறது என்பவர்கள் கருவிகள் இயங்காது என்று இறங்கிவருவார்கள். அப்புறம் அப்படியே கருவிகள் இயங்குகிறதோ இல்லையோ, திருநள்ளாறிலிருந்து வெளிப்படும் கதிர்கள் விண்ணைக் கடந்து சென்று செயற்கைக்கோளை அடைவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றெல்லாம் தரை டிக்கெட்டுக்கு இறங்கிவருவார்கள்.
இது குறித்து எழுதியுள்ள ஒரு வலைப்பதிவர் (aalunga.blogspot.com) சரியான கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார். மின்னணுக் கருவிகள் மட்டும் இயங்காது என்றால் செயற்கைக்கோளிலிருந்து படமெடுக்கும் கருவியும் செயல்படாது அல்லவா? கூகிள் மேப் தளங்களில் பிறகெப்படி திருநள்ளாறு கோவிலின் படங்கள் கிடைக்கின்றன? என்று!
அப்படி கதிர் வீச்சு வெளிப்பட்டு, செயற்கைக்கோள்கள் இயங்காது என்ப தெல்லாம் இருக்கட்டும். செயற்கைக்கோளையே செயலிழக்க வைக்கும் திருநள்ளாறு பவர் பிளாண்ட் பக்கத்தில் இருக்கும் டிஷ் ஆண்டனாக் களை என்ன செயல்பட அனுமதிக்கிறது? செயற் கைக்கோளே இயங்காது என்றால் செயற்கைக் கோளிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி களின் கதி என்ன? அங்கே தொலைக்காட்சிகள் எதுவும் இல்லையா? அவை இயங்குவதில்லையா? யாரும் பார்ப்பதில்லையா? செல்பேசிகளின் கதி என்ன? இவர்கள் சொல்வதைப் பார்த்தால் அணு உலைக் கதிர்வீச்சு ஆபத்துக்கு முன்பு இதற்காகப் போராட வேண்டும் போலிருக்கிறதே! சரி சனிக்கோளைப் பற்றிப் பார்ப்போம். சனி பெயர்கிறதா? சனிக்கோள் ஏதோ ஓரிடத்திலேயே நின்று கொண்டிருந்துவிட்டு கிரிக்கெட்டில் ஒரு ஓவர் முடிந்ததும் பிட்ச் அம்பயர், லெக் அம்பயராக இடம்பெயர்வதைப் போல அல்லவா சனிப்பெயர்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள்? அது தொடர்ந்து சுற்றி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது தனது சுற்றுவட்டப் பாதையில். திருநள்ளாறு கோவிலின் மீது மட்டும் கண்ணுக்குத் தெரியாத கருநீலக் கதிர்கள் விழுந்துகொண்டே இருக்கிறதாம். ஒரு வேளை அந்த இடத்தில் வானத்துக் கூரையில் ஓட்டை இருக்குமோ? அப்படியென்றால்   கதிர்கள் விழும் இடம் ஆபத்தானதல்லவா? ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து கருநீலக் கதிர்கள் பாய்ந்துவிடக் கூடாது. அது மனித குலத்திற்கு ஆபத்து என்றுதானே அறிவியல் உலகம் அதைத் தடுக்கப் போராடுகிறது?
திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் கோவில் இருப்பதால் அங்கு கருநீலக்கதிர்கள் விழுகின்றன என்றால், அங்கே மனிதர்கள் செல்லலாமா? அந்தக் கதிர்களை நிறுத்த அக்கோவிலை இடித்துத் தள்ளிவிட வேண்டாமா?
கொஞ்ச நஞ்சம் தெரிந்திருக்கும் அறிவியல் சொற்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு கதைகட்டி, கோவிலுக்குப் பெருமை தேடி, அறிவுக்குப் பாடை கட்டுகிறார்களே! அறிவியலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், அறிவியலின் பெயராலேயே மூடக் கருத்துகளைப் பரப்ப வல்லவா பயன்படுத்திக் கொண் டிருக்கிறார்கள். அறிவியலார்கள் என்ன சொல்கிறார்கள்?
அப்படியெல்லாம் உண்மையில் செயற்கைக் கோள்களுக்குப் பாதிப்பு நடக்கிறதா என்று பேஸ்புக்_-கில் கேட்கப்பட்ட கேள்விக்கு 2011 அக்டோபர் 12 அன்று பதில் அளித்த அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், “no, to the best of my knowledge it is not true” (என்னுடைய அறிவுக்கெட்டிய வரையில் அது உண்மையில்லை) என்று தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்திலேயே இப்படிக் கதைகளை அள்ளிவிடும் இந்தக் கும்பல், அறிவியல் விழிப்புணர்வில்லாத காலத்தில் எப்படியெல்லாம் அள்ளிவிட்டிருக்கும்? வெறுமனே கதையை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடமுடியாது. அதற்கொரு அறிவியல் முலாம் பூச வேண்டும் என்ற நிலை பக்தியாளர்களுக்கு வந்திருப்பதே பகுத்தறிவாளர்களின் முதல் கட்ட வெற்றி! அறிவியலால் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், எந்தக் காலத்திலும் மூடக் கருத்துகளை அறிவியல் ஏற்காது. பகுத்தறிவு இறுதி வெற்றியைப் பெற்றே தீரும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...