Monday, January 9, 2012

பி.ஜே.பி.யின் யோக்கியதை!


உத்திரப்பிரதேசத்தில் செல்வி மாயாவதி தலைமை யிலான ஆட்சியில் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாபுசிங் குஷ்வாகா. இவர் ஊழல் புரிந்தார், மருத்துவ அதிகாரி இருவர் கொலை செய்யப்பட்டதில் இவருக்குத் தொடர்பு - என்னும் அடிப்படையில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இவர் ஊழல் புரிந்தார் - இவரை அமைச்சர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று குரல் கொடுத் தது பி.ஜே.பி.,
இந்த நிலையில் நீக்கப்பட்ட பாபுசிங் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியும் சிகப்புக் கம்பளம் போட்டு வரவேற்று ஆலிங்கனம் செய்து கொண்டது.
எந்தப் பாவங்களைச் செய்தாலும் பிணங்கள் மிதக்கும் - சாக்கடைகள் சங்கமமாகும் கங்கையில் ஸ்நானம் செய்தால் பாவங்கள் இறக்கை கட்டிக் கொண்டு  பஞ்சாய்ப் பறந்து போகும் என்று சொல்லும், நம்பிக்கை கொள்ளும் கட்சியாயிற்றே!
நேற்றுவரை அவர் ஊழல் பேர் வழி - அவரைப் பதவி விலகச் செய்ய வேண்டும் என்று கூக்குரல் போட்டோமே - நம்மைப்பற்றி நாடே என்ன நினைக்கும் என்பது குறித்து சிறிதும் வெட்கமின்றி அவரைச் சேர்த்துக் கொண்டு விட்டது.
எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா? பாரீர்! பாரீர்!! பாரதிய ஜனதாவின் யோக்கியதையைப் பாரீர்!!! என்று முகத்திரையைக் கிழிக்க ஆரம்பித்து விட்டன.
அதுவும் ஊழல் ஒழிப்பில் உத்தம நெய்யில் பொரிக்கப்பட்ட பலகாரம் போல துள்ளிக் குதித்து, அன்னா ஹசாரேக்கு முட்டுக் கொடுத்து களேபர அரசியலை பி.ஜே.பி. வேடம் கட்டி ஆடிக் கொண் டிருக்கும் ஒரு கால கட்டத்தில், இப்படிப்பட்ட ஒரு நிலை என்கிறபோது, உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பனத்தி நிலைக்கு ஆளாகி விட்டது பி.ஜே.பி.,
இந்த அவமானகரமான நிலையில் பி.ஜே.பி.யில் தலைவர்கள் திக்கு முக்காடி விட்டனர்! விழிப் பிதுங்கியும் நின்றனர்!!
அப்பொழுதும்கூட நடவடிக்கை எடுக்கத் துணிவில்லை. சம்பந்தப்பட்ட வரையே விலகிக் கொள்ளக் கெஞ்சிய நிலையில் என்னால் கட்சிக்குப் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதால் விலகிக் கொள்கிறேன் என்று கட்சியின் தலைவருக்கு விலகல் கடிதம் எழுதி விட்டார். இந்த நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளத்தான் செய்வார்கள்.
பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை இது ஒன்றும் அதிசயமான காரியமும் அல்ல. உத்தரப்பிரதேசத்தில் கல்யாண்சிங் தலைமையில் ஆட்சி அமைத்தபோது கட்சி விலகி வந்த 33 கிரிமினல்களுக்கு அமைச்சர் பதவியை இதே பி.ஜே.பி. கொடுக்கவில்லையா?
இன்றைக்கு பி.ஜே.பி.க்கு பூணூலால் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் திருவாளர் சோ ராமசாமி அய்யர், வேறு வழியின்றி அப்பொழுது துக்ளக்கில் (12.11.1997) என்ன எழுதினார்?
உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாக் கட்சி ஓர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது. பதவிக் காகப் பல குறுக்கு வழிகளைக் கையாளுவதிலும், பதவி ஆசை காட்டி, ஆட்களை இழுத்து பிற கட்சி களை உடைப்பதிலும், கிரிமினல் பேர்வழிகளை அரவணைத்து அமைச்சர்களாக்குவதிலும், அரசியல்ஆதாயத்திற்காக அநாகரிகப் பேரங்கள் நடத்துவ திலும்  தாங்கள் யாருக்கும் சளைத்தவர்களல்லர் என்று பாரதிய ஜனதாக் கட்சி பிரகடனம் செய் திருக்கிறது.
ஓடி வந்தவர்களையெல்லாம், ஒருவர் பாக்கி இல்லாமல் அமைச்சர்களாக்கி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட பிறகு, நேர்மையான அரசியல் பற்றி பேசும் அருகதையை பா.ஜ.க. இழந்திருக்கிறது. கேவலமான அரசியல் நடத்தியது போதாதென்று அதை  நியாயப்படுத்த பா.ஜ.க. தலைவர்கள் முனைந் திருப்பது விந்தையிலும் விந்தை!
கிரிமினல் பேர்வழிகளுக்கு டிக்கெட் கொடுத்து, தேர்தலில் நிற்க வைத்தது நாங்கள் அல்லவே என்று வாஜ்பாய் ரொம்பவும் புத்திசாலித்தனமாக ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அதாவது கிரிமினல் பேர் வழிகளை தேர்தலில் நிற்க வைப்பதுதான் குற்றமே தவிர  அவர்களை அமைச்சராக்குவது குற்றமல்ல என்பது அவருடைய அதிசயமான வாதம்! அய்யோ பாவம் பா.ஜ.க.! அவர்களுடைய துரதிர்ஷ்டம். ஆட்டோ சங்கர் உயிருடன் இல்லை. ஆட்டோ சங்கர் மட்டும் உயிருடன் இருந்து அவரை வேறொரு கட்சி, தேர்தலில் நிற்க வைத்து எம்.பி. ஆக்கினால் பாரதிய ஜனதாக் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும்போது ஆட்டோ சங்கரும்  அமைச்சராகியிருப்பார். வாஜ் பாயும், ஆட்டோ சங்கரை நாங்களா தேர்தலில் நிற்க வைத்தோம்? என்று கேட்டு அமைச்சர் ஆட்டோ சங் கரின் பதவி ஏற்பை நியாயப்படுத்தி இருப்பார் என்று இன்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது இன்றும் எந்த அளவுக்குப் பா.ஜ.க.வுக்குப் பொருந் துகிறது என்பது உத்தரப்பிரதேச விவகாரம் நிரூபிக்க வில்லையா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...