Friday, January 27, 2012

சனிப்பெயர்ச்சி 'பலன்' யாருக்கு?



கோவில்களில் கடவுளர்களின் சிலைகளையும் கடவுளச்சிகளின் சிலைகளைக் காட்டியும் சில அம்மணச் சிலைகளையும் ஆபாசச் சிலைகளையும் காட்டிக் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஒரு பார்ப்பான் இப்படியும் காசு பண்ணிக் கொண்டிருக்கிறான். அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அவர்களின் அறியாமையையும், மூடத்தனத்தையும் பயன்படுத்தி அவன் எப்படிக் காசு பார்க்கிறான் என்பதைக் கொஞ்சமாகப் பாருங்கள். நிறைய பிற்பாடு தெரிந்து கொள்ளலாம். வரும் 21ஆம் தேதி சனிப்பெயர்ச்சியாம். சரி அதுபாட்டுக்கு எங்கேயோ பெயர்ந்துவிட்டுப் போகட்டுமே. வயிறு வேக்காளத்திற்கு மஞ்சளும் வேப்பிலையும் அரைத்துக் கலக்கிக் குடிக்க வேண்டும் என்பது கூடத் தெரியாமல் அதே மஞ்சளையும் வேப்பிலையையும் வைத்துக் கொண்டு கோவிலில் விழுந்து கிடக்கும் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாத இந்த மக்கள் இதற்கு மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்கள்?
ஆலங்குடி வடகாடு முக்கத்தில் ஒரு டிஜிட்டல் விளம்பர போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் சனிப்பெயர்ச்சி குறித்து விளக்கப்பட்டுள்ளது. சனியானவன் கன்னியிடமிருந்து துலாமுக்குப் போகிறானாம். இதுவரை இருந்த இடத்திலிருந்துகொண்டு என்ன சாதித்தான்? இனிப் போய் என்ன செய்யப் போகிறான்?

இந்த விளம்பரப் பலகையை வைத்து தொடர்புக்கு தொலைப்பேசி எண்ணையும் கொடுத்திருக்கும் அந்த நபர் சொல்லியிருக்கிறபடி பரிகாரம் செய்து கொள்ளும் ராசிகள் என்று ஒரு பட்டியலிட்டு வைத்திருக்கிறார். அவையெல்லாம் தீமை செய்யக்கூடிய ராசிகளாம். நன்மை பெறும் ராசிகள் என்று ஒரு பட்டியலும் வைத்திருக்கிறார்.

அதில் பரிகாரம் செய்து கொள்ளக்கூடியதுதான் என்று அவரே சொல்லியிருப்பதில் முதலில் வருவது துலாம் ராசியாகும். சனி பகவான் போகும் இடமும் அதுதானாம். ஆனால், அந்த துலாம் ராசி எப்படியிருக்கிறது என்றால் ஜென்ம சனியாம். அதுவும் முதலிடத்தில் இருக்கிறதாம். அந்த ராசிப்படி உடல் நலத்தில் கவனம் தேவையாம். வியாபாரத்திலும் தொழிலிலும் மந்த நிலை ஏற்படுமாம். வீண் அலைச்சல் வருமாம். வழக்கு விவகாரங்கள் வருமாம். சொந்த பந்தங்களிடம் நிதானம் வேண்டுமாம். மனக்குழப்பங்கள் ஏற்படலாம் என்கிறார்.

இது இதற்கு முன் இருக்கும் நிலை என்கிறாரா? இனி வரப்போகிறது என்கிறாரா? அப்படி வந்தால் அதற்கு இந்தத் தொலைப்பேசிக்காரர் என்ன செய்யப் போகிறார்?

அடுத்ததாக என்ன சொல்கிறார்? கன்னி பாத சனி 2ஆம் இடம் என்கிறார். ஏற்கெனவே சொல்லியிருக்கிறபடிக்கு கன்னியிலிருந்து துலாமுக்கு சனிபகவான் போய்விடப் போகிறார். அப்புறம் சனி இல்லாத கன்னிராசியான இடம்தான் சுத்தமாகி விடுமே. ஆனால், அந்த இடத்தின் பலாபலன் எப்படியிருக்கும்? உடல் நலத்தில் கவனம் வேண்டுமாம். தோற்றத்தில் மாற்றம் தெரியுமாம். ஆற்றல் குறைந்துவிடுமாம். வருவாய் வருமானத்தில் கவனம் தேவையாம். நிதானமாகச் செயல்பட்டால் நன்மையாம். அப்படி என்றால் கன்னியிடமிருந்து சனி போன பின்பும் இதுதான் நிலைமையா? அல்லது ஏற்கெனவே சனிபகவான் இருந்த இடமும் அப்படித்தான் இருந்தது என்றால் அப்புறம் பரிகாரம் செய்து மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது?



அடுத்ததாக கடகம் அர்த்தாஷ்டம சனி 4ஆம் இடமாம். அதிலும் குடும்பத்தில் அனுசரித்துச் செல்லுதல் அவசியமாம், வாக்குவாதம் வீண் விவாதங்களைத் தவிர்த்து வாரம்தோறும் சனி பகவானை வணங்கிவர கெடுபலனைக் குறைக்கலாமாம். அதாவது, யாரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டியதில்லை. வாக்குவாதத்தில் ஈடுபடலாம். வீண் விவாதங்களில் ஈடுபடலாம். ஆனால், செய்ய வேண்டியது வாரம்தோறும் சனிபகவானைக் கவனித்துவிட்டால் போதும். இந்தக் கட்டுரையை எழுதும் நான் சொல்லவில்லை. விளம்பர போர்டு வைத்திருக்கும் அந்த நபர் சொல்லியிருக்கிறார். அத்துடன் அவர் சொல்லியிருக்கும் சனிபகவான் குடியிருக்கும் ஆலங்குடி சிறீநாமபுரீஸ்வரருக்கு ஆற்றல் இல்லையாம். அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பார்வதி தேவியான உடனுறை அம்மனுக்குச் சக்தியில்லையாம். ஒரு மூலையில் கல்லாய் பத்தோடு பதினொன்றாய் அமர்த்தப்பட் டிருக்கும் சனி பகவானுக்குத்தான் இந்த சக்தியெல்லாம் இருக்கிறதாக விளம்பரம் செய்திருக்கிறார். அப்படி என்றால் சக்தியில்லாத சிவன் கோயிலை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்பதுதானே பொருள்?
சரி, அடுத்ததாக மிதுனம் பஞ்சம சனியாம். அதுவும் 5-ஆம் இடமாம். அவர்களுக்கும் எதிலும் கவனம் தேவையாம். அடிக்கடி மனம் மாறிவிடுமாம். மறதி வருமாம். சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிடுதல் வருமாம். வீண் அலைச்சல் போன்ற இடர்ப்பாடுகள் வருமாம். கவனம் வேண்டுமாம்.

அடுத்து மேஷம் கண்டக சனியாம். அதுவும் 7-ஆம் இடம். அதில் மருத்துவச் செலவுகள் வரும். சில காரியங்கள் தள்ளிப்போகும். வீண் அலைச்சல். மனக்குழப்பங்கள் வெளியூர் செல்லுதல் வாகனம் போன்றவற்றில் கவனம் தேவை. எதிலும் நிதானமாகச் செயல்படவும். அடுத்ததாக மீனம் அஷ்டம சனி எட்டாம் இடம். அதன்படி உடல் உபாதைகள் வரும். மருத்துவச் செலவுகள் வரும். எடுத்த காரியங்களில் தாமதம். வீண் வம்புகள் வழக்குகள் வரலாம். இருப்பினும் சனி பகவானை வழிபட்டால் குறைத்துக் கொள்ளலாம். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதனைக் குறைத்துக் கொள்ள எந்த மருத்துவ வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. மருத்துவரிடம் போகவேண்டியதில்லை. அப்படியே மருத்துவரிடம் சென்றாலும் அவர் கொடுக்கும் மருந்துச் சீட்டில் எழுதியிருக்கும் மருந்துகளை வாங்கிவரக்கூடாது. அதாவது மருத்துவச் செலவு  வந்துவிட்டால் அதனைச் செய்யக் கூடாது. வீண் வம்பு கூடாது என்பது அனைவரும் அறிந்ததுதான் என்றபோதிலும் வந்துவிட்டால் காவல் நிலையத்திற்குக்கூட சென்றுவிடக் கூடாது. வழக்குகள் வந்து விட்டால் வழக்குரைஞரையோ நீதி மன்றத்தையோ நாடிவிடலாகாது. சனிபகவானை அதிலும் ஆலங்குடி சனிபகவானை வழிபட்டால் மருத்துவர், மருத்துவமனை, மருந்துக்கடை, காவல் நிலையம் காவல் நிலைய அதிகாரிகள், வழக்குரைஞர், நீதி மன்றம் எதுவும் செல்ல வேண்டியதில்லை. யாரையும் அணுக வேண்டியதில்லை. நேராக ஆலங்குடி சனி பகவானை அணுக வேண்டும் என்பதோடு அணுகும் போது நோய் என்றால் அதிக பவருள்ள மருந்து மாத்திரைகளையும் வழங்கி ஊசியையும் சனிபகவானே போட்டுவிட்டு வம்பு வழக்குகள் என்றால் செக்சனைக் குறைத்துப் போட்டு பிணையில் விட முடியாத குற்றம் என்றால் பிணையில் விடக்கூடிய குற்றமாக மாற்றி கொலைக்குற்றமாக இருந்தால்கூட விடுதலையும் செய்துவிடுவார். அவ்வாறு அணுகாதவர்கள் சாமிக்குற்றத்திற்கு ஆளாக வேண்டும்.

அடுத்ததாக, கும்பம் பிதுரஸ்தான சனி. அதற்கு 9-ஆம் இடம். அதிலும் உடல் நலக்குறைவு. தொழில் வியாபாரத்தில் கவனம் தேவை. வருமானக்குறைவும் மனப்போராட்டங்களும் ஏற்படலாம் என்று எச்சரிக்கையும் செய்துள்ளார்.

அடுத்து, மகரம்  கரமஸ்தான சனி. அது 10-ஆம் இடம். அதன்படி நிறையப் பேருக்கு இடம் மாறுதல் வரலாம். அதுமட்டுமல்ல, சிலருக்குத் தொழில் மாற்றமே வரலாம். பொருளாதாரம் மந்தநிலையை அடையலாம். மதிப்பு மரியாதை குறையலாம் என்கிறார்.

அடுத்து, விருச்சிக ராசிக்காரர்களுக்கானது. அது விரையச்சனியாம். அது 12-ஆவது இடத்தில் இருக்கிறது. அவர்களுக்கு மனக்கவலை வருமாம். 7_-டி சனிகாலம் ஆரம்பமாம். எதிலும் கவனம் தேவை. வியாபாரம் செய்தாலோ வேறு தொழில் செய்தாலோ அலுவலகங்களில் பணி புரிந்தாலோ மேல் அதிகாரியிடம் பணிவு வேண்டுமாம். வீண் விரையம் ஏற்படுமாம். எது செய்தாலும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவு எடுக்க வேண்டுமாம்.

அதுசரி, இதுவரை சினிமா படங்களில் 3_டி படங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். 2_-ஜி அலைக்கற்றை சமீப காலங்களில் ஊடகங்களில்  அடிபட்டதை அறிவோம். சனியில்கூட இந்த விளம்பரதாரர் 7-_டி சனி என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். அது எந்தக் காலத்தில் ஏற்பட்டது என்கிற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 7_டி சனியைப் பற்றி முழுவதும் அறிந்தவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தக் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கூறிய அனைத்தும் பரிகாரம் செய்து கொள்ளக்கூடிய ராசிகளாம். அதே நேரத்தில் நன்மை பெறும் ராசிகள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டு இருக்கிறார். அவற்றையும் இங்கு பார்க்க வேண்டும்.

சிம்மம் 3-ஆம் இடத்தில் இருக்கிறதாம். அவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதைத் தொட்டாலும் பொன்னாகும். உடல் ஆரோக்கியம் பெருகும். எதிரிகள் பணிவார்கள். புதிய வீடுகள் வாகனம் பதவி சுகம் கிட்டும். ரிஷபம் 6-ஆம் இடத்தில் இருப்பார். அவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் உடல் நலக் கோளாறுகள் அகலும். பகைவர்கள் பணிவார்கள். நினைத்த காரியங்கள் கைகூடும். தனவசதி கிட்டும். தனுசு 11-ஆம் இடத்தில் இருக்கிறார் அல்லது இருப்பார். அவர்களுக்கு, பெயர் புகழ் உருவாகும். காரிய வெற்றி கிட்டும். பகைவர் பணிவார்கள். புது சொத்து அல்லது பூர்வீக சொத்து வந்து சேரலாம் என்று அறிவித்திருக்கிறார்.

இத்தனையும் சொன்னவர் கட்டம் கட்டி இன்னொன்றையும் சொல்லத் தவறவில்லை. அதாவது, மேற்கண்ட பலன் யாவும் சனி கோச்சார அடிப்படையில் சொல்லப்பட்டதாகும். இருப்பினும் அவர்களுடைய தசாபுத்தியின் அடிப்படையில் பலாபலன்கள் மாறுபடலாம் என்பதாகும்.

அவருடைய எண்ணம் இதில்தான் நிறைவேறுகிறது. எப்படியென்றால், கெட்ட ராசிக்காரர்கள் என்று பலரைச் சொல்லிவிட்டு அவர்கள் மட்டும் பரிகாரம் செய்து கொண்டால் போதாது என்று நல்லது நடக்கப் போவதாகச் சொல்லியிருக்கும் சில ராசிக்காரர்களையும் விட்டு வைக்கக் கூடாது என்பது அவரது எண்ணம். அவர்கள் சனி பகவானைத் தரிசிக்காமல் இருக்கக் கூடாது. அவர்களிடமும் பணம் பறித்தாக வேண்டும். அதனால் அவர்களையும் பயமுறுத்த இந்த வாசகத்தை விளம்பரப்படுத்தியவர் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் யாராக இருக்கும் என்று அவர் விளம்பரப் படுத்தியிருந்த செல்பேசி எண் 9976792377_அய்த் தொடர்பு கொண்டு பேசியபோது ஆலங்குடி சிவன் கோயில் அய்யரான சொர்ண பைரவ சிவாச்சாரியார் என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்ட ரவி அய்யராகும். இந்த வசூலில் மாட்டிக் கொண்டாலும் சட்டப்படி தப்பிக்க வேண்டி சனிப்பெயர்ச்சி விழாக்குழு என்று ஒரு குழுவையும் ஏற்படுத்தி ஆன்மீக நற்பணி மன்றத்தையும் சேர்த்து விட்டிருக்கிறார் அவர். பார்ப்பனப் புத்தி எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தீர்களா? தான் மாட்டிக் கொண்டால் வெளியில் எடுத்துவிட இந்தக் குழு.
 
இதுவரை சனி என்று ஒரு சனியைத்தான் பலரும் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போதுதான் ஜென்மச்சனி, பாதசனி, அர்த்தாஷ்டம சனி, பஞ்சம சனி, கண்டகசனி, அஷ்டம சனி, பிதுரஸ்தான சனி, கரமஸ்தான சனி, விரையச்சனி, 7_-டி சனி என்றெல்லாம் இவர் வந்து ஏற்படுத்தியிருக்கிறார் பக்தர்களைப் பயமுறுத்திப் பணம் பறிக்க. அத்தனை சனிகளும் கோவில்களில் இல்லை. அவை ஆட்கொண்டிருந்தால் அங்குள்ள தெய்வங்கள் எல்லாம் எங்கே போயிற்று?

இப்போது தமிழகத்தில் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் முதலில் ஆயிரக்கணக்கானவர்கள் போராடியது போக இப்போது மலையாளிகளுக்கு எதிராக லட்சக்கணக்கில் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்களில் அனைவரையும் போராட்டக்களத்திற்கு அனுப்ப வேண்டியதில்லை. சிம்மராசிக்காரர்கள் சிலரை மட்டும் அனுப்பி வைத்து முல்லைப்பெரியாறு அணைக்கட்டுக்குப் பக்கத்தில் நிற்க வைத்தால் போதும். மலையாளிகள் அனைவரும் வந்து பணிந்துவிடுவார்கள்.

பாகிஸ்தான் எல்லைக்கு சிலரை மட்டும் அனுப்பி வைத்தால் போதும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் நம் எதிரிகளை. இப்போது நம் தமிழக அரசை யாரும் சூரிய ஒளியுடன் கூடிய பசுமைத்திட்ட வீடுகள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. விரும்பிய வீடும் காரும் கிடைக்கும்போது அரசை ஏன் நம்ப வேண்டும்? பலருக்கும் பதவிகளே கிடைக்கக் காத்திருக்கிறது. அவர்கள் வேலை தேடி அலைய வேண்டியதில்லை.

நம்மில் யாருக்குப் பிரச்சினையில்லை. அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. வியாபாரம், தொழில், வம்பு வழக்கு பதவியில் அனுசரனை, சில காரியங்கள் தள்ளிப்போகுதல், மனக் குழப்பங்கள், வீண் அலைச்சல், வெளியூர்ப் பயணம், பேருந்துப் பயணம், இருசக்கர வாகனப் பயணம், உடல் நலக்குறைவு, மருத்துவச் செலவு, பதவியில் பணிவு உட்பட எதையும் விட்டு வைக்கவில்லை. எதிலும் கவனம் தேவை என்பது ஏற்கெனவே அந்தந்தத் துறையிலிருந்தும் அறிவுறுத்தப்பட்டதுதான். முன்னோர்களும் அறிவு சார்ந்த பெரியவர்களும் சொல்லி வைத்ததுதான். மேற்காணும் பிரச்சினை யாருக்குத்தான் இல்லை. நம்மில் பலருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். பிரதமர் முதல் பிதாமகன் வரை அனைவருக்கும் பிரச்சினைதான். பெரியவர்கள் சொல்லி வைத்திருப்பதில் உள்ள சில வார்த்தைகளைப் போட்டு வைத்து அதில் சனி பகவானை இணைத்து அனைவருக்கும் பரிகாரம் செய்கிறேன் பேர்வழி என்று இப்படியும் கிளம்பியிருக்கிறார்கள்.

இப்போது சபரிமலை பக்தர்களின் சீசன். அவர்கள் சபரிமலையில் போய் வீணடிப்பதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் இந்தப் பார்ப்பனர்களுக்கு வருமானம் குறைகிறது என்பதற்காக மட்டுமல்லாமல் ஏற்கெனவே இருக்கும் வருமானத்தைத் தனிப்பட்ட முறையில் பெருக்கிக் கொள்வதற்காக அத்தனைபேரையும் இவர்கள் பக்கம் இழுப்பதோடு வருமானம் பார்ப்பதற்காக இப்படி விளம்பரப்படுத்தி வைக்கிறார்கள். மேலும், கோவிலில் சாமி கும்பிட வேண்டும் என்றால் ஒரு அர்ச்சனை தட்சனை என்று முடிந்துவிடும். ஆனால், சனி பகவானுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்து கொண்டு தன் ராசிக்குரிய அர்ச்சனை செய்து நிவர்த்தி செய்து கொள்ள நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் பணம் பறித்துக் கொள்ள இந்த ஏற்பாடு நடக்கிறது. ஒரு கோவிலில் இப்படித் தொடங்கிவிட்டால்தான் இவனே போய் பார்ப்பானைத் தூங்கவிடாமல் செய்து பரிகாரம் செய்துகொள்ள கோவில் கோவிலாகப் போய் படியேறிவிடுவானே என்று நினைக்கிறது பார்ப்பனக் கூட்டம். இந்தக் கோவிலும் இப்படி மோசடி செய்யும் பார்ப்பானும் ஒரு உதாரணம்தான். தமிழகம் முழுதும் இப்படித்தான் ஏதாவது ஒரு பரிகாரம், பூஜை, ஜாதக தோஷம், விளக்கு பூஜை என அறியாமையில் மூழ்கியுள்ள தமிழர்களின் பணம் பிடுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொது மக்களே, பக்தர்களே எச்சரிக்கை தேவை.
 
- ம.மு.கண்ணன், புதுக்கோட்டை

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...