Wednesday, January 18, 2012

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடம் பாடமா?


திருமகள்
சோதிடத்தை அறிவியல் என்று இன்று வரையில் ஏற்றுக் கொண்ட தில்லை. என்றுமே ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. அறிவியல் என்பது ஆராய்ந்து ஒன்றைக் கண்டுபிடித்து, அதை அறிஞர்களின் பார்வைக்கு வைத்து, அதைக் காரண காரியங் களோடு நிரூபித்து, அந்த அறிஞர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது. ஆனால் சோதிடம் என்பது அப்படி அல்ல. ஒரே ஒரு குறிப்பிட்ட செய்தியிலே கூட பத்து சோதிடர்கள் பத்துவிதமாகக் கூறு வார்கள்.
இறந்துபோன நாயின் பெயருக்குச் சோதிடம் பார்க்கச் சொன்னால், இது நாயின் பெயர். இது இறந்துவிட்டது. இதற்குப் பலன் சொல்ல முடியாது என்று எந்த சோதிடரும் சொல்வதில்லை. மாறாக, கிரக பலாபலன்களை ஆராய்வ தாக போக்கு காட்டி, இந்த ஜாதகனுக்கு ஆயுள் அதிகம், அய்ஸ்வர்யமும் சேரும், புத்திர பாக்கியம் நிச்சயம் என்று ஏதேதோ கதை கூறுவார். நூற்றுக்கு ஒன்றோ, இரண்டோ காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல உண்மையாகி விடும்.  அதுவும் கூட இளகிய நெஞ்சங் களுடைய மனிதர்களின் வாயைக் கிண்டிக் கிளறி அவர்களுடைய வாயா லேயே உள்ளத்தை அறிந்து பலன் கூறு வதால்தான், தொண்ணூற்றொன்பது விழுக்காடு தோல்வியைத் தழுவிவிடும். ஆனால் தோற்றவர்கள் வெளியில் சொல்ல அச்சப்பட்டு சொல்வதில்லை. அந்த நிலைமையும் மாறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு பார்ப்பன சோதிடரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அவரைத் தெருவில் விரட்டி விரட்டி செருப்பால் அடித்ததை நாடே அறியும். நாளிதழ்களில் வெளியான செய்திதான். சோதிடத்தின் மடமையால் வாழ்க்கை இழந்த பெண்கள், தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்ட கண்ணீர்க் கதை ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரமாயிரம் உண்டு. சோதிடம் என்பது இந்த சமூகத்தைப் பிடித்த புற்றுநோய், அந்தப் புற்று நோயை அகற்ற அறிவியல் படாத பாடுபட்டு வருகிறது. பகுத்தறிவுப் பிரச்சாரமும் மிக முக்கியமான ஆயுதமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
இப்படிப்பட்ட புற்று நோயைத்தான் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கிறார்களாம். எப்படி இருக்கிறது கதை? அதுவும் யார்? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மக் களின் அடிப்படைக் கடமைகளாக, ஒவ்வொருவரும் அறிவியல் மனப் பான்மையை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்று சட்டமாக வைத்துள்ள அரசே! குதிரை, கீழே தள்ளியது மல்லாமல் குழியும் பறித்த கதையாக அரசே செய்கிறது. நாம் எந்த சுவரில் போய் முட்டிக் கொள்வது?
பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்த போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி கல்வித் துறையில் சோதிடத்தைப் புகுத் தினார். வரலாற்றுத் துறையில் சிந்துச் சமவெளி நாகரிகச் சின்னமான மாட்டை வரைகலை மூலமாக குதிரையாக மாற்றிக் காட்டி வரலாற்றுப் புரட்டை நடத்திக் காட்டினார். வரலாற்று அறிஞர்கள், முற்போக்கு சிந் தனையாளர்கள், இன உணர்வாளர்கள் ஆகியோர் காட்டிய கடுமையான எதிர்ப் பால் மேற்கொண்ட பிற்போக்குத்தனம் பின் வாங்கிக் கொள்ளப்பட்டது.
இப்பொழுது கட்சியில் அண்ணா வின் பெயரையும், கொடியில் அண்ணா வின் உருவத்தையும் வைத்துள்ள மாநில அரசும் அந்தப் பணியில் ஈடுபட்டிருக் கிறது. முரளி மனோகர் ஜோஷி யார்? இப்பொழுது தமிழகத்தின் முதல்வர் யார்? இருவரும் அவாள்கள். அகன்ற பாரதத் தில் விருப்பமுள்ளவர்கள். மக்கள் அறி வாளிகளாக மாறுவதற்கு உடன்படாத வர்கள்.
இப்படி இந்திய அரசமைப்புச் சட்டத் திற்குப் புறம்பாக அதை எதிர்த்துப் பேசுபவர்கள் அதையே செயலாக்கு பவர்கள் அவாள்தான். இப்படிப்பட்ட சமயங்களில் அய்யோ! இறையாண் மைக்கு ஆபத்து என்று கூக்குரலிடும் பூணூல் திருமேனிகளின்வாய் திண்டுக்கல் பூட்டால் பூட்டப்பட்டு விடும்.
மதுரைக் காமராஜர் பல் கலைக் கழகத்தில் சோதிடம் வரட்டும். பெரியாரின் சிந்தனை கள் பெரிய அளவில் பரவாத மாநிலங்களிலேயே முரளி மனோகரின் புரட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுத்தது தமிழ்நாடு! இது பெரியாரின் மண். ஏன்தான் இதைச் செய்தோமென்று செய்தவர்கள் நினைக்கும் படிக்கு  போராட்டங்கள் இங்கு வெடிக்கும்.
வருகிற இருபதாம் தேதி மாலையில் திராவிடர் கழகம் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று நம் தலைவர், தமிழர் தலைவர், விடுதலை ஆசிரியர் அவர்கள் அறிவித்திருக்கிறார். இது தொடக்கம் தான். மனிதர்களின் பெயர்களுக்குப் பின்னாலிருக்கும் ஜாதிப் பட்டங்களைத் துறக்க வைத்த புரட்சிக்குச் சொந்தக்காரர் தந்தை பெரியார். அவரின் தத்துவங்கள் உயிரோடு இருக்கையில் கல்விப் பட்டங்களுக்குப் பின்னால் சோதிடமா?
தந்தை பெரியார் சொல்லுவார் பார்ப்பானுக்குப் பின்புத்தியே தவிர, முன்புத்தி கிடையாது என்று. அதையே அண்ணல் அம்பேத்கரும் சொல்லுவார், பார்ப்பனர்கள் படிப்பாளியே தவிர, அறிவாளி இல்லை என்று. அது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட இருக்கிறது.
-

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...