Saturday, December 31, 2011

வேண்டாம் தற்கொலைகள்!

முல்லைப் பெரியாறு உரிமைப் பிரச்சினை யாக இருந்தாலும் சரி, ஈழத் தமிழர் பிரச்சினை யாக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பிரச் சினையாக இருந்தாலும் சரி, இவற்றுக்காகத் தமிழர்கள் தற்கொலை செய்து கொள்வது வருந்தத்தக்கது.

தற்கொலை செய்து கொள்வதால் இவற் றிற்குப் பரிகாரம் கிடைத்து விடப் போவதில்லை. மாறாக களத்தில் குதித்து உரிமைகளை மீட்கும் பட்டாளத்து வீரர் ஒருவர் இழப்பு என்பதே உண்மையாகும்.

பொதுவாக தற்கொலை கோழைத்தனம் என்று சொல்லப்பட்டாலும், இத்தகு தற்கொலை களை வீர தீரச் செயல் என்று பாராட்டுவதும், தலைவர்கள் அறிக்கைகளை விடுவதும், நினைவுச் சின்னங்களை எழுப்புவதும் எந்த வகையில் நியாயம்?

இவை ஒரு வகையில் தற்கொலைகளை ஊக்குவிப்பது ஆகாதா? நாட்டு மக்களுக்கு, நல்லது காட்டுவதுதான் தலைவர்களின் நடத்தையாக இருக்க வேண்டுமே தவிர, தவறான வழிகாட்டுதல்களைச் செய்வது நேர்மையானதல்ல.

வெளிப்படையாக தற்கொலைகளைக் கண்டித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்; தற்கொலைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவும் வேண்டும்.

ஆனால் நம் நாட்டிலோ எல்லாம் தலை கீழாகத்தானே நடக்கின்றன.

உண்ணாவிரதப் போராட்டத்தைக்கூட தந்தை பெரியார் ஏற்றுக் கொள்வதில்லை. அது ஒரு சண்டித்தனம் என்றார். காந்தியார் உண்ணாவிரதம் இருந்ததையே கண்டித்தவர் தந்தை பெரியார்.

உரிமைகளை உரமாக நின்று போராடிப் பெற வேண்டுமே தவிர அய்யோ, நான் பட்டினி கிடக்கிறேன் செத்துப்போகப் போகிறேன் தயவு செய்து இரக்கப்பட்டு இந்தக் காரியத்தைச் செய்து கொடுங்கள்! என்று கேட்பது, யாசிப்பது கோழைத்தனமல்லவா! இரக்கப்பட்டு பிச்சை போடுவதுபோல அரசுகள் நடந்து கொள்ள வேண்டுமா?

காந்தியார் உண்ணாவிரதம் இருந்து மிரட்டியதால்தானே தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தனித் தொகுதி முறை கிடைக்காமல் போயிற்று?

காந்தியாரின் மனைவி கஸ்தூரிபாவுக்குத் தாலிப் பிச்சை கொடுக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டவர்கள் ஒருபுறம்; காந்தியார் உயிருக்கு ஒன்று என்றால்... என்று அம்பேத்கர் அவர்களை மிரட்டியவர்கள் இன்னொருபுறம்!

மேலை நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த தந்தை பெரியார் ஒருவர்  தானே ஒரு காந்தியாரின் உயிர் முக்கியமல்ல; அதைவிட கோடானு கோடி தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைதான் முக்கியம் என்று டாக்டர் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தார்.

இப்பொழுது தொட்டதற்கெல்லாம் உண்ணா விரதம் என்கிற வியாதி கிளம்பி விட்டதே! அன்னா ஹசாரே போன்றவர்கள், தாம் நினைப்பது நடந்தே தீர வேண்டும் என்கிற மிரட்டலுக்கு இந்த உண்ணாவிரதத்தை ஆயுதமாக்கி பயன்படுத்துவதில் நியாயம் உண்டா?

விவாதித்து - உண்மையை நிலை நாட்டி கோரிக்கைகளை ஈட்டுவதுதான் அறிவு நாணயமே தவிர, தற்கொலை செய்து கொள்வதன் மூலமாகவோ உண்ணாவிரதம் இருந்து உயிர் விடுவதன் மூலமாகவோ மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி, வன்முறைகளை  கொம்பு சீவி விடுவது பொறுப்புணர்ச்சி ஆகுமா?

தந்தை பெரியார் அவர்களால் நாட்டுக்குக் கிடைத்துள்ள சமுதாய மாற்றங்கள் எந்த அடிப்படையில் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், இந்தத் தற்கொலைகள், உண்ணா விரதங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

தலைவர்களும், ஊடகங்களும் இந்த வகை யில் சிந்தித்து நாட்டுக்கு நல்வழி காட்டட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...