Tuesday, November 29, 2011

கனிமொழி ஜாமீனில் விடுதலை


கனிமொழி ஜாமீனில் விடுதலை - அனைவரும் வரவேற்பர்! ஒருவர் தண்டிக்கப்படும் நிலை வந்தால் ஒழிய அதுவரை அவர் நிரபராதியே!



சென்னை, நவ.29- திருமதி கனிமொழி எம்.பி. ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளார் என்பது அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும். ஒருவர் தண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டால் ஒழிய அவர் குற்றவாளியே தவிர, அதுவரை அவர் நிரபராதியே. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

கனிமொழிக்கு ஜாமீன் அனைவரும் வரவேற்க வேண்டியது!

2ஜி வழக்கில் கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமதி கனிமொழி அவர்களும், கலைஞர் டி.வி. நிருவாக இயக்குநர் சரத்குமார் அவர்களும் மற்றும் மூவரும், டில்லி உயர்நீதிமன்றத்தால் பிணையில் (ஜாமீனில்) விடுதலை அடைந்துள்ளனர் என்பது, சட்ட அறிவும், நியாய உணர்வும் உள்ள அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்!

எத்தகைய பெரிய குற்றமாயினும்கூட, ஒருவரது வழக்கு விசாரணை முற்றாக முடிவடைந்து அவர்கள் தண்டிக்கப்படும் நிலை வந்தால் ஒழிய, அவர் நிரபராதி என்பதே சட்டத்தின் தத்துவம் (Until the guilt is establised and proved and punished, one is presumed to be innocent).

ஆனால் ஏனோ இந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில் நேற்று வரை மறக்கப்பட்ட அம்சமாகவே இருந்து வந்து, தாமதித்தே இந்த பிணை உரிமை - குற்றம் சுமத்தப்பட்ட சிலருக்கு (இது மற்றவர்களுக்கும் கிடைப்பதே நியாயம்) காரணம் அது வழக்கிலிருந்தே விடுதலை அல்ல; ஜாமீனில் தான் விடுதலை என்னும் போது, அது சட்டப்படி உள்ள உரிமை.

இதுதான் பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சம்!

ஏனோ இந்த வழக்கில் இது கடைப்பிடிக்கப்படாமலேயே வந்தது!

உலகம் காணா அக்கிரமம்!

பரபரப்பு ஏடுகளும், தொலைக்காட்சிகளும்தான் நீதிமன்றங்களைவிட - இந்த வழக்கை நடத்தும் நீதிபதிகளாக தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டது உலகம் காணாத ஒரு அக்கிரமம் ஆகும் (Trial by Media)  என்பதை நீதிமன்றங்கள் முன்வந்து தடுக்க வேண்டும்.

டைம்ஸ் நவ் என்ற ஒரு பிரபல இங்கிலீஷ் நாளேடு நடத்தும் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தும்கூட பல ஊடகங்கள் இன்னமும் பாடம் பெறவில்லையே!

இழப்பு  - வெறும் அனுமானத் தொகையே!

2ஜி அலைக்கற்றை வழக்கில் ஏற்பட்ட இழப்பு - அரசுக்கு - வெறும் அனுமானத் தொகைதான்! (Presumptive loss). இதைத்தான் துவக்கத்திலிருந்தே நாம் விளக்கினோம் தமிழ்நாட்டு மக்களுக்கு. கனிமொழிமீது சாட்டப் பெற்ற குற்றச்சாட்டு - அவர் கலைஞர் டி.வி. பங்குதாரர் என்பதால் சரிதானா என்ற வழக்கின் அம்சத்திற்குள் நாம் போக விரும்பவில்லை - அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடக் கூடும் என்பதால்.

ஆனால் தாமதிக்கப்படும் நீதிமறுக்கப்படும் நீதி என்பது நீதியரசர்கள் அறியாத தத்துவம் அல்லவே!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...