Wednesday, October 19, 2011

இதுதான் ஜனநாயகமா?


தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்டம் நடந்து முடிந்திருக்கிறது. நேற்று நடைபெற்றுள்ள நிகழ்வுகள் நாகரிக சமூக அமைப்புக்கு உகந்ததாக இல்லை என்பது பெரும் வருத்தத்திற்குரியதே. சட்டப் பேரவைத் தேர்தலோடு ஒப்பிடும்போது உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகரில் வெறும் 48 விழுக்காடே பதிவாகி யுள்ளது.
இதற்கு என்ன காரணம்? வாக்குரிமையைக் கூடப் பயன்படுத்துவதற்கு  40 சதவிகித மக்கள் இந்த நாட்டில் தயாராக இல்லையா அல்லது விருப்பம் இல்லையா?
இதைப் பற்றிய விமர்சனங்களும், சர்ச்சைகளும் நாடு தழுவிய அளவில் நடைபெற்றால் அது வரவேற்கத் தக்கதே!
மக்கள் மத்தியில் கல்வியறிவு வளர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் அந்நாட்டின் குடிமக்களில் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் வாக்குப் போடாதவர்கள் எத்தனை சதவிகிதமோ அந்த அளவுக்கு வாக்குப் பெறாதவர்கள் தான் ஆட்சியைப் பிடிக்கிறார்கள் என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.
நடைபெற்றுள்ள உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்றத் தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட அளவிற்கு விதிமுறைகள் - விரிவான ஏற்பாடுகள் காணாமல் போன மர்மம் என்ன? உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்த அளவுக்கு முக்கியமானதல்ல என்று ஒருக்கால் தேர்தல் ஆணையம் கருதுகிறதா என்று தெரியவில்லை.
எந்தத் தேர்தலாக இருந்தாலும் பணமோ, பொருள் களோ கொடுக்கப்படக்கூடாது; அவ்வாறு கொடுக்க முனைந்தவர்கள் சட்டமன்றத் தேர்தலில்  தடுக்கப்பட்டு உள்ளனர். பணம், பொருள்கள் பறிமுதல் செய்யவும் பட்டன.
உள்ளாட்சித் தேர்தலில் பல ஊர்களில் பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள் ஏடுகளில் வந்துள்ளன. இவை ஏன் தடுக்கப்படவில்லை அல்லது பறிமுதல் செய்யப்படவில்லை?
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு 200-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றம் சில வழிகாட்டு ஆணைகளைப் பிறப்பித்தது.
அவை ஏன் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச் சாற்றும் எழுந்துள்ளன. காமிராக்கள் பொருத்தப்பட வில்லை. பாதுகாப்பு போதுமானதாக இல்லை. பல இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன. கத்திக் குத்து உள்பட நடந்துள்ளது.
சில இடங்களில் கள்ள வாக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்றும் ஏடுகளில் செய்திகள் வெளிவந் துள்ளன. இதனைக் கண்டித்து சாலை மறியல்களும் அரங்கேறி இருக்கின்றன.
வாக்குச் சாவடிக்குள் புகுந்து ரகளை - காவல் துறையினரின் தடியடிகளும் நடந்துள்ளன.
ஜனநாயகமா - பணநாயகமா - காலி நாயகமா? ஜாதி நாயகமா என்கிற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
பார்ப்பான்,  பத்திரிகை,  அரசியல் கட்சிகள், தேர்தல், சினிமா இவை அய்ந்தும் நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்கள் என்றார் தந்தை பெரியார்.
கடவுள், ஜாதி மதம், ஜனநாயகம் நாட்டைப் பீடித்த மூன்று பேய்கள் என்றும் கூறினார்.
பெரியார் சொன்ன எதுவும் பொய்த்துப் போய்விட வில்லை. இந்தப் பிரச்சினையிலும் தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு மிகச் சரியாகவே இருக்கிறது.
ஆளும் கட்சி வெற்றி பெறுவது மட்டும் முக்கிய மானதல்ல. தேர்தல் ஒழுங்காக நடைபெறாவிட்டால் அது ஆளும் கட்சிக்குத்தானே கெட்ட பெயர்? அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா?
அமளி-துமளியாகவும், கலவரப் போக்கும் உள்ளடக் கித் தேர்தல் நடைபெறுமேயானால் மக்கள் எப்படி துணிந்து வந்து வாக்களிப்பார்கள்?
ஏடுகள், ஊடகங்கள் தங்களுக்குள் ஒரு அரசியலைச் சார்ந்து நடந்துகொள்ளும் போக்குதான் பெரும்பாலும் காணப்படுகிறதே தவிர, மக்களுக்கு வழி காட்டும் தன்மையிலோ, அரசை வலியுறுத்தும் போக்கிலோ இல்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.
காஷ்மீர் பிரச்சினையில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னார் என்பதற்காக பட்டப்பகலில் இந்தியாவின் தலைநகரிலேயே உச்ச நீதிமன்ற வளாகத் திலே தாக்கப்படுகிறார் - இந்தியாவில் எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை இந்த அளவில்தான் இருக்கின்றது.
பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான வன்முறையாளர் களைக் கூட்டி மற்றொரு மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தை இடிக்கிறார்கள். அதற்குத் தலைமை தாங்கியவர் இந்தியாவின் துணைப்பிரதமராகவே ஆகிவிட்டார். அடுத்து நான்தான் பிரதமர் என்கிறார். 19 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
இதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் முடிச்சு போடலாமா என்று கேட்கக்கூடாது. இவற்றின் பிரதி பலிப்புகள் சமூகத்தில் மற்ற மற்ற தளங்களிலும் பிரதிபலிக்கிறது என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது.
தலைவர்கள் சரியாக வழிகாட்டாவிட்டாலும் இத் தகைய பிற்போக்குத்தனங்கள் தலை தூக்கத்தானே செய்யும்?
உரத்த சிந்தனைகளும், விவாதங்களும் தேவை!  தேவை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...