Monday, September 26, 2011

கல்வியை முன்புபோல மாநிலப் பட்டியலுக்குக்கொண்டுவர தேவையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்


கல்வியை முன்புபோல மாநிலப் பட்டியலுக்குக்கொண்டுவர தேவையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டில் தீர்மானம்



சென்னை, செப்.26- கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும்  வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன் றத்தையும், அனைத்துச் சட்டமன்றங்களையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சென்னை பெரியார் திடலில் நேற்று (25.9.2011) திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக்  கொண்டு வரக்கோரும் மாபெரும் மாநாடு - கருத்தரங்கத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:


தீர்மானம்:


அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட மத்திய அதிகாரக் குழுவின் தலைவர் என்ற முறையில் ஜவஹர் லால் நேரு அவர்கள் 1947 ஜூலை 5 அன்று அரசமைப்புச் சட்ட மன்றத்தின் தலைவருக்கு கீழ்க் கண்டவாறு கடிதம் எழுதினார்.


பலமற்ற ஒரு மத்திய அரசு அமைவது நாட்டு நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற ஒருமித்த கருத்தை நாங்கள் கொண்டுள்ளோம். அதே நேரத்தில்,  அதிகாரமானது உறுப்புகளான மாநில அரசுகளிடமே  இருக்க வேண்டிய பல விவகாரங்கள் உள்ளதென்பதில் நாங்கள் மிகுந்த மனத் தெளிவுடன் இருக்கிறோம். ஒற்றை ஆட்சி அடிப்படையில் அரசமைப்பு சட்டம் இயற்றப்படுவது, அரசியல் ரீதியாகவும், நிருவாக ரீதியாகவும்  ஒரு பிற்போக்கான செயலாகும்.


அதன் பிறகு, இணைக்கப்பட்டுள்ளவாறு, மூன்று முழுமையான பட்டியல்கள் உருவாக்கப்பட்டன. எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும்,  அது போன்றதொரு அதிகாரம், அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களின் கருத்துக்கும் எட்டாத ஒன்றாகவே இருக்கும்.  அந்தப் பட்டியலில்,  கல்வி மாநிலப் பட்டியலில்  16 ஆம் எண்ணிட்ட பதிவில் சேர்க்கப்பட்டி ருந்தது.


அதன்படி, (காசி இந்து பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் நீங்கலாக), கல்வித் துறை மாநிலங்களுக்கே முழுமையாக ஒதுக்கப்பட்ட தாகும். இறுதியாக, அரசமைப்புச் சட்டம் 1950 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, மாநிலங்கள் பட்டியல் என்னும் இரண்டாம் பட்டியலில் கல்வி, 63 வரையிலான 65 பதிவுகளுக்கு உட்பட்டு,  11 வரிசை எண் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தது. 63 முதல் 65 வரையிலான பதிவுகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடையவை.  66 பதிவில் மட்டுமே, உயர் கல்வியில் ஒத்துழைப்பும், தரமும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, மாநில அரசுகள் கல்வித் துறை மீது கொண்டிருக்கும் முழுமையான, தனிப்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உறுதி செய்யப்பட்டிருந்தது.


ஆனால், 1975- 77 ஆண்டுகளுக்கிடையே,  பேச்சுச் சுதந்திரம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த,  பல மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட -  தேசிய நெருக்கடி நிலையின் போது, 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, மாநிலப் பட்டியலில் இருந்து பதிவு 11 நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக  கல்வி மூன்றாவது பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டு மாற்றி அமைக்கப் பட்டது.


இப்போது, கல்வி பற்றி சட்டங்கள் இயற்று வதற்கான அதிகாரங்கள் எதுவும் (அனைத்து நடைமுறை நோக்கங்களிலும்) மாநில சட்டமன்றங்களுக்கு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.


அரசமைப்புப் சட்ட 254 (2) பிரிவுடன் சேர்த்துப் படிக்கும்போது, அனைத்து நடைமுறை நோக்கங்களிலும் பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரம் மத்திய அரசின் பட்டியலில் உள்ள அதி காரங்களின் விளைவுக்கு ஒப்பானவை. உறுப்புகளான மாநில அரசுகள் இப்போது மத்திய அரசின் கருணையில்  இருக்க வேண்டியவைகளாக ஆக்கப்பட்டு விட்டன.


இந்த நிலை ஜவஹர்லால் நேரு அவர்கள் அளித்திருந்த உறுதிகளுக்கும், அரசமைப்புச் சட்ட உணர்வுக்கும்  எதிரானது. எனவே, கல்வி தொடர்பான சட்டமியற்றும் அதிகாரப் பதிவு 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு முன்னர் இருந்தபடி,(Status Qua Ante) இரண்டாம் மாநிலப் பட்டியலில் 11 ஆம் பதிவுக்குத் திரும்பக் கொண்டு வரப்படவேண்டும்.


கல்வி பற்றி இரண்டாவது மாநிலப் பட்டியலில் 11 ஆம் பதிவில் இருந்த சட்டமியற்றும் அதிகாரம் நீக்கப்பட்டு, மூன்றாவது  பொதுப் பட்டியலில்  கல்வி பற்றிய பதிவு சேர்க்கப்பட்டது, அரசமைப்புச் சட்ட மன்றத்தாலும், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களாலும் மாநிலங்களுக்கு  ஒட்டு மொத்தமாக அளிக்கப்பட்ட புனிதமான உறுதிமொழியை மீறிய செயலாகும்.


அதனால், கல்வி பற்றி சட்டமியற்றும் அதிகாரம் தொடர்பான பதிவை அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்  மாநிலப் பட்டியல் என்னும் இரண்டாம் பட்டியலில் முன்பு இருந்தது போலவே மீண்டும் கொண்டுவரத் தேவையான பயனுள்ள அனைத்து நடவடிக்கைகளையும்  உடனே மேற்கொள்ள வேண்டுமென  நாடாளுமன்றத்தையும், அனைத்து மாநில சட்ட மன்றங்களையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்வதென இந்த மாநாடு ஒரு மனதாக தீர்மானிக்கிறது.


இத்தீர்மானத்தை அனைவரும் எழுந்து நின்று ஒருமனதாக வரவேற்கும் வகையில் நீண்ட நேரம் பலத்த கைதட்டல் வழியாக ஆதரித்து வழிமொழிந்தனர்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...