Saturday, September 17, 2011

பெரியாரே நம் ஒளி! விழி!! வழி!!!


இன்று (செப்.17-2011) நமக்கு விழி திறந்த வித்தகர் - மான உணர்வை மறந்து, துறந்து அடிமைகளாகி காலங்காலமாய் கால்நடைகளைவிட கேவலமான வாழ்வு வாழ்ந்த திராவிட மக்களாகிய நமக்கு, மானமும் அறிவும் போதித்த நம் அறிவுப் பேராசான், தலைவர் தந்தை பெரியார்தம் 133ஆவது ஆண்டு பிறந்தநாள் பெருவிழா!

திக்கெட்டும் திருவிழா - தெவிட்டாத அறிவுப் புதுவிழா!

பெரியார் என்ற தொண்டு பழத்தின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் வகையில்,

பற்பல நாடுகளிலும் - மலேசியா, சிங்கப்பூர், மியான்மா என்ற பர்மா,  குவைத், துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, தென்னாப்பிரிக்கா,  செஷல்ஸ் இப்படி - திசையெட்டும் தமிழர்களால் - திராவிடர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற விழா - ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகி வரும் கொள்கை பரப்பும் விழாவாக, குவலயம் குதூகலத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடும் நிலை கண்டு, பெரியார் தொண்டர்களின் உள்ளங்கள் குளிர்ந்துள்ளன உவகையால் கூத்தாடுகின்றன.

கோடையிலே இளைப்பாறும் குளிர் தருகின்ற தருவாக, தருநிழலாக, நிழல் கனிந்த கனியாக வந்த கொள்கைக் கோமானின் தொண்டால் தலை நிமிர்ந்த மக்கள், நன்றித் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் செப்.17 தொடங்கி அடுத்த செப்டம்பர் 16-ஆம் தேதி வரை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பெரியார் என்ற தத்துவ ஜீவ நதி என்றும் வறளாது,

வற்றாது ஓடிக் கொண்டே இருக்கும் வெள்ளப் பெருக்கு அல்லவா!

அய்யாவின் லட்சியங்களுக்கு அவ்வப்போது அறை கூவல்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன!

எதிர்நீச்சல்தான் அந்தத் தலைவர் தொண்டர்களுக்குக் கொடுத்த மகத்தான பயிற்சி என்பதால், தடைக் கற்கள் ஆயிரம் என்றாலும் அதனை சுக்கு நூறாக்கி, பயணம் தடைப்படாமல் இலக்கு நோக்கியே ஈரோட்டுச் சிங்கக்குட்டிகள் சென்று வெற்றி வாகை சூடிடுவது உறுதியிலும் உறுதி!

பெரியாரே நம் ஒளி!

பெரியாரே நம் விழி!!

பெரியார்தம் இயக்கமே நம் வழி!!!

அவர் வைத்த இலக்கே எம் போக்கும் - நோக்கும்!

என்ற பயணங்கள் தொடரட்டும், தொய்வின்றித் தொடரட்டும்!

21ஆம் நூற்றாண்டு மட்டுமல்ல; இனிவரும் நூற்றாண்டுகளும், பெரியார் என்ற சமூக விஞ்ஞானியின் சகாப்தமாகவே மலரும் என்பது உறுதி!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!
- கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...