Saturday, August 20, 2011

23 ஆடுகள் சித்திரவதை

மனித சமுகத்திற்காக என்று சில ஒழுக்கங்களையும், சில நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி அவை கிரமமாய் நடந்தேறுவதற்காக பயத்தை உண்டு பண்ணும் படியான நிபந்தனைகளைக் கற்பித்து, அக்கற்பனைகளுக்கு மதக் கொள்கை என்று பெயரிட்டு, அம்மதக்கொள்கைக்கு காப்பளிப்பதற்காகக் கடவுளை உண்டாக்கி வைக்கப் பட்டிருக்கிறது என்பது மதத்திலும் கடவுள் நம்பிக்கையுள்ள அறிவாளிகள் என்று தங்களை சொல்லிக் கொள் ளும் கடவுள் மதக்காப்பாளர்களின் வாதமாகும்.

மேல் குறிப்பிட்ட ஒழுக்கமும் நடவடிக்கைகளும் நியாய மானதா, பொதுவானதா, அவசியமானதா என்பதைப் பற்றிய விவகாரத்தில் இப்போது நாம் தலையிடவில்லை என்றாலும், கடவுளுக்கும், மதத்துக்கும் காப்பளிப்பதற்காக இந்த அறிவாளிகள் சொல்லும் சமாதானம் சரியானதா? விவகாரத்துக்கு நிற்கக் கூடியதா? என்பதைப் பற்றியே நாம் இந்த வியாசத்தில் விவரிக்கிறோம்.

மனிதனுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் மதப்பித்தானது மதுவை உட்கொண்டவனுக்கு எப்படி அவன் சொந்த புத்தி மறைந்து அவசியமற்றதும், ஒழுங்கும் அறிவும் அற்றது மான காரியங்களையே நினைக்கவும், பேசவும், செய்யவும் ஆளாகிறானோ அதே போல் மத வெறியானது குறிப்பிட்ட அதாவது மனிதனுக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம் நடவடிக்கை என்பவைகள் லட்சியமற்றதாகி வெறும் மத பக்தியே லட்சியமுடையதாகி அதற்காக வாழ வேண்டி யதையும், அதற்காக உயிர்விட வேண்டியதையும் மனிதனின் முக்கிய கடமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதை மதவாதி கள் உணர வேண்டுமானால் ஒவ்வொரு மதவாதியும் தன் தன் மதத்தைப் பற்றி நினைக்காமல் தனக்குத் தெரிந்த வரையில் பிறமதக் கொள்கைப்படி உள்ள ஒழுக்கங் களையும் நடவடிக்கைகளையும் பிறமதக்காரன் பின்பற்றி நடக்கின்றானா என்பதையும் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு மதக்காரர்களின் யோக்கியதையும், மற்ற மதக் காரர்களுக்குத் தெரியும். மற்றபடி அவரவர் மதக்குற்றம் அவரவர்களுக்குப் புலப்படாது.

ஒழுக்கம் நடவடிக்கைகள் என்பவை ஒரு மனிதன் உலக வாழ்க்கையில் ஜன சமுகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மற்ற மனிதனிடத்தில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மற்ற மனிதன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் என் பவைகளைப் பொருத்ததே ஒழிய வெறும் வேஷம், சடங்கு ஆகியவைகளைப் பொறுத்ததல்ல என்பதாக முடிவு செய்து கொண்டு, பிறகு மேற் சொன்னபடி கவனித்துப் பார்க்க விரும்புகிறோம். இந்தப்படி பார்த்தால் எந்த மூடனுக்கும் மதம் பயனற்றது என்பதும். கடவுளை உண்டாக்கினது வெறும் பைத்தியக்காரத்தனமென்பதும் மிக சுலபத்தில் வெட்ட வெளிச்சம் போல் விளங்கி விடும்.

உதாரணமாக, திருடுவதிலும், பொய் பேசுவதிலும், அன் னியனை வஞ்சிப்பதிலும், ஒரு பெண்ணை பலாத்காரமாய்த் தூக்கிச் சென்று துராக்கிருதப் புணர்ச்சி செய்வதிலும் தாராள நோக்கமுடைய ஒரு முஸ்லீம் என்பவன் ஒரு வேளை தொழுகை தவறிவிடுவதையும், மந்திரம் சொல்லி அறுக்காத (ஜீவவதை செய்யாத) ஜெந்துவின் மாமிசத் தைச் சாப்பிடுவதையும் பெரிய பாவமாகவும் மதவிருத்த (விரோத)மாகவும் கருதுகிறான். சமுகம் அப்படிப்பட்ட வனை முன்னையதைவிட பின்னையதற்கே அதிகமாக வெறுக்கின்றது.

அதுபோலவே பொய்யிற்கும் அக்கிரமங்களுக்கும் அனுகூலித்து வாதாடி வயிறு வளர்க்கும் வக்கீல் தொழில் செய்வதையும், லஞ்சம் வாங்கி அநீதி செய்து பொருள் சேர்த்து ஜீவிப்பதையும், பொய், புரட்டு, போர்ஜரி, திருட்டு முதலிய காரியங்கள் செய்வதையும், மது, மாமிசம் அருந் தல் முதலிய இழிவான காரியங்களைச் செய்வதையும் பற்றி வெட்கப்படாமல் இவற்றில் தீரனென்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு பிராமணன் என்பவன், தான் சிறிது நேரம் பூணூல் இல்லாமல் இருப்பதையும், நெற்றியில் சாம்பலோ மண்ணோ பூசிக் கொள்ளாமல் இருப் பதையும் இறந்துபோய் மோட்சலோகத்தில் இருப்பதாய் கருதிக் கொண்டு இருக்கும் தன் தாய் தகப்பன் என்பவர் களுக்குத் திதி கொடுக்காததையும் பெரியதொரு பாதகமா கவும் மதவிருத்தமாகவும் கருதுகிறான். சமுகமும் அவனை முன்னைய இழிதொழிலை விட பின்னைய தவறுதல் களுக்கே அதிகமாக வெறுக்கவும் பகிஷ்கரிக்கவும் செய்கின்றது.

அதுபோலவே லஞ்சம் வாங்குவதையும், மக்களை வேட்டையாடுவதையும், நிரபராதியான மக்களை ஆயிரக் கணக்காய் எறும்புகளையும், ஈசல்களையும் விடக் கேவல மாய் மதித்து ஒரு வெடியில் 1000, 2000 பேர்களைக் கொல்வதையும் தன் மதத்திலேயே மனிதனுக்கு மனிதன் கீழானவன் தீண்டத்தகாதவன் என்று எண்ணுவதையும் நடத்துவதையும் பற்றி வெட்கப்படாமல் இருக்கும் ஒரு கிறிஸ்தவன். ஒரு குறிப்பிட்ட வேளை கோவிலுக்குப் போகாததையும் இரண்டு பெண்டாட்டியைக் கலியாணம் செய்து கொள்வதையும், கோவிலுக்குப் போய் குருக்கள் முன்னிலையில் கலியாணம் செய்து கொள்ளாததையும் பெரிய மதக் குற்றமாகவும், கடவுள் விரோதமாகவும் கருதுகிறான். சமுகமும் இப்படிப்பட்டவனை வெறுப்ப தில்லை என்பதோடு, சில சமயங்களில் மதிக்கவும் செய் கின்றது. ஆக மதங்களின் மூலம் சடங்குகள் மதிக்கப்படு கின்றனவா? ஒழுக்கங்கள் மதிக்கப்படுகின்றனவா? என்பதை உணரலாம்.

ஆரிய மதமானது ஜீவகாருண்யத்தையும் அகிம்சை யையும் சர்வம் பிர்மமயம் என்னும் தத்துவத்தையும் உண்மை அருத்தத்தில் அஸ்திவாரமாகக் கொண்டது என்று ஆரியர்களும் அவர்களது அடிமைகளும் சொல்லு கிறார்கள். ஆனாலும் அனுபவத்தில் வார்த்தை அளவில் கூட ஜீவகாருண்யமோ, அகிம்சையோ காண்பது கஷ்டமாய் இருக்கிறது. மனிதர்களை மனிதர்கள் மதிக்கும் தன்மை யிலும் நடக்கும் இக்குணங்கள் காணப்படுகின்றனவா என்பதைக் கவனித்தால், ஆரிய மதத்தின் யோக்கியன எவருக்கும் விளங்காமல் போகாது. இவ்வாரியர்களின் மற்ற காரியங்கள் எப்படி இருந்தாலும், மதத்திற்காக மதக் கொள்கைப்படி செய்வதாய் சொல்லப்படும் சிலகாரியங் களில் எவ்வளவு கொடுமையும் வன்னெஞ்சமும் இருக்கிறது என்பதைக் காட்ட சமீபத்தில் கும்பகோணத்தில் நடந்த யாகம் என்று சொல்லப்படும் காரியத்தைப் பற்றி பொதுஜனங்களுக்கு அறிவிக்கவே இதை எழுதுகிறோம்.
 
இம்மாதம் 22ஆம் தேதி கும்பகோணத்தில் ஆரியர்கள் ஒரு யாகம் செய்தார்களாம்.

அந்த யாகத்தில் 23 ஆடுகள் மோட்ச லோகத்திற்கு அனுப்பப்பட்டனவாம். எப்படி அனுப்பப்பட்டன என்றால், உயிருடன் அவ்வாடுகளின் வெதர்களைப் பிடித்து நசுக்கி அவற்றைக் கொன்று அனுப்பப்பட்டனவாம். என்ன அக்கிரமமான காரியம் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகிறோம். ஜந்துக்களுக்கு பீஜம் அல்லது வெதர் என்பது மிகவும் மெல்லியதும் சிறிது அடிபட்டாலும் அதிக நோயை உண்டாக்குவதென்பதும், ஆரியர்கள் உள்பட யாவரும் உணர்ந்த காரியம். அப்படி இருக்க 23 ஆடுகளை பீஜத் தைப் பிடித்து நசுக்கி அவைகளைச் சாகடிப்பது என்றால் அந்த 23 ஆடுகளும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டுமா?

இப்படிச் சித்ரவதை செய்து கொன்ற இக்கொலை பாதகத்துக்கு, மதம் ஆதாரம் என்றால், மதங்களின் கொடு மைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டியிருக்கிறது என்று கேட்கின்றோம்.

ஜீவன்களை வதைக்கும் விஷயத்திலும் கொல்லும் விஷயத்திலும் எல்லா மதங்களும் ஒரே தன்மையை உடையதாகக் காணப்படுகின்றனவே ஒழிய, ஒன்றுக் கொன்று வித்தியாசம் கண்டுபிடிப்பது என்பது கஷ்டமான காரியமாகவே தோன்றுகிறது.
 
இந்த விஷயங்களில் அரசியல் ஆட்சி நிர்வாகமாவது சரியாய் நடந்து கொள்ளுகின்றது என்றுகூட நம்மால் சொல்ல முடியவில்லை. இப்படிச் சொல்வதால் அரசாங்கத் திற்குக் கோபம் வந்தாலும் வரலாம். ஆனால் அப்படிப்பட்ட கோபத்தை, நாம் பொருட்படுத்த வேண்டுமானால் இப்படிப் பட்ட கொலைபாதகங்களைச் சகித்தாக வேண்டியதாய் இருப்பதால், சர்க்காரின் நிர்வாகத்தை எடுத்துக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

சாதாரணமாக அரசாங்கம் ஜீவகாருண்ய தத்துவத்தை ஒப்புக் கொள்ளுகின்றது என்றுதான் நாம் கருதி இருக்கிறோம். உதாரணமாக ஒரு கோழியைத் தலைகீழாகக் காலைப் பிடித்து தூக்கிக் கொண்டு போவதும், ஒரு பன்றி யைத் தலைகீழாகக் கால்களைக் கட்டித் தூக்கிச் செல்வ தும், ஒரு ஆட்டை கழுத்தில் கயிறு கட்டித் தரத்தரவென்று இழுத்துச் செல்வதும், கழுத்துப் புண்ணுடன் ஒரு மாட்டை வண்டியில் கட்டுவதும், வண்டி ஓட்டும் சாட்டைக் குச்சியில் முள்ளைக் குத்தி வைப்பதும், குறிப்பிட்ட பாரத் துக்கு மேல் ஒரு மணுவு எடை அதிகமிருப்பதும் ஆகிய காரி யங்கள் எல்லாம் குற்றமாகப் பாவிக்கப்பட்டு அவற்றிற்கு சட்டங்கள் மூலம் தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இவை மாத்திரமல்லாமல் ஒரு மனிதன் தன்னைத் தானே வதை செய்து கொள்வதான, செடில் குத்திக் கொள்வது முதலியவைகளையும் குற்றமெனக் கருதி 144 மூலம் தடைசெய்யப்பட்டும் வந்திருக்கின்றன. இப்படி எல்லாம் இருக்க, மேல் கண்டபடி யாகத்தின் பேரால் 23 ஆடுகளை வெதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று இருப்பது இந்தச் சட்டத்தின் கீழ்வராதது என்று ஒரு சர்க்கார் நினைத்திருக் குமானால் தங்களை ஜீவகாருண்ய சர்க்கார் என்று சொல்லிக்கொள்ள அவர்களுக்குப் பூரண உரிமை உண்டா என்று கேட்கின்றோம்.

இவை மத உரிமை என்று சொல்லப்படுமானால், நரபலியும் நரமேத யாகமும் அதாவது மனிதர்களின் விதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று சுட்டுச் சாப்பிடுவதும் குற்றமில்லை என்றுதானே கொள்ள வேண்டும்

இம்மாதிரி கொலை பாதகங்களைப் பற்றி 1926 முதல் நாம் கூப்பாடு போட்டு வந்தும், அதை அரசாங்கம் சிறிதும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்து வருவதானது அரசாங்கத்தில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாகும்.

இந்தப்படியான கொலை பாதகங்களை லட்சியம் செய்யாத ஆரியர்கள், மற்றவர்கள் மாமிசம் சாப்பிடுவதா லும், கொலை செய்வதாலும் அவர்களைத் தாழ்ந்த ஜாதியார் என்று சொல்ல வேண்டி இருக்கின்றது என்று சொல்லு கிறார்கள்.

ஜீவன்களுக்கு, சித்திரவதை இல்லாமல் ஒரேவெட்டில் கண நேரத்தில் அந்த ஜீவனுக்குக் கூட தெரிவதற்கில்லாமல் கொன்று சாப்பிடுகின்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்களானால், ஜீவன்களைப் பிடித்து அதன் விதரை (பீஜத்தை) பதறப்பதற துடிக்க துடிக்க மணிக் கணக்காய் நசுக்கிச் சித்திரவதை செய்து கொன்று சாப்பிடுகின்றவர்களை எவ்வளவு கீழ் ஜாதி எவ்வளவு வன்னெஞ்ச ஜாதி என்று சொல்லுவது என்று கேட்கின் றோம். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து கொண்டு ஊராரும் உலகத்தாரும் சிரிக்கவும், இகழவும் நடந்து கொண்டு, தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் இவனைத் தொடக்கூடாது, அவனைக் கிட்ட அணுகவிடக் கூடாது, மற்றவனைக் கோ விலுக்குள், சத்திரத்திற்குள் நிழலுக்கு ஒண்டக்கூட விடக் கூடாது என்பன போன்ற ஆணவமான கொடுமையான வார்த்தைகளால் இழிவுபடுத்தினால் எப்படிச் சகிக்க முடியும் என்றும் இப்படிப்பட்டவர்களை எப்படிச் சராசரி மனித சமுகத்திலாவது சேர்க்க முடியும் என்றும் கேட்கின் றோம். இந்த அக்கிரமங்களும் அநியாயங்களும் எப்படியோ போய்த் தொலையட்டும் என்று விட்டு விடலாம் என்றாலும், நாட்டு மக்கள் எல்லோருமே தங்களை இந்தப்படியான ஆரிய மதத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் அறியாமையையும் அநியாயத்தையும் எடுத்துக் காட்டுவதற் காக இவற்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

ஜீவகாருண்யச் சைவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்.?

- புரட்சி - தலையங்கம் - 27.05.1934

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...