Saturday, June 25, 2011

திராவிடக் கொள்கை எது தெரியுமா? (1)

திராவிடக் கொள்கை எது என்ற வினாவை எழுப்பியுள்ளது துக்ளக் (22.6.2011).

சரியான கூட்டணி அமைந்ததால், சரியாகவே ஜனங்கள் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால், உலகம் போகிற போக்குத் தெரியாமல் கருணாநிதி இன்ன மும் திராவிடம், திராவிட இனம் என்று, கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி அதையே சொல் லிக் கொண்டு திரிகிறார். இன்றுள்ள இளைஞனும் திராவிடம் என்றால் கிலோ என்ன விலை என்றுதான் கேட்பான் என்று எழுதுகிறது துக்ளக்.

இதே கேள்வியை துக்ளக் அண்ணா திமுகவை நோக்கிக் கேட்குமா? அந்தக் கட்சியின் பெயரிலும் திராவிட இருக்கிறதே - திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் அண்ணாவின் பெயரும் அந்தக் கட்சியில் உள்ளதே - அக்கட்சியைத் தேர்தலில் ஆதரித்த - ஆதரித்தும் கொண்டிருக்கிற துக்ளக் அறிவு நாணயத்துடன் கேட்க வேண்டுமா, வேண்டாமா,

அப்படியெல்லாம் அதிமுகவைச் சீண்டிப் பார்த்தால் உருட்டுக் கட்டைதான் பரிசாகக் கிடைக்கும்.

இன்னொன்றும் காரணமாக இருக்கலாம்; வெறும் பெயர்தானே திராவிட அண்ணா என்பதெல்லாம் அ.தி.மு.க.வுக்கு. அதனால் ஆரியர்களுக்குத் தொல்லை கிடையாதே - இன்னும் சொல்லப் போனால் திராவிட என்னும் பதாகைக்குள் ஆரிய சமாச்சாரங் கள்தானே தாம் - தூம் என்று நடக்கின்றன - எனவே கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஆனால் தி.மு.க.வோ, அதன் தலைவர் கலைஞரோ திராவிட என்பதற்கான பொருள் தெரிந்தவர்கள். அதற்கான சித்தாந்தம் தெரிந்தவர்கள் என்பதால் நமக்கு ஆபத்தானவர்கள் என்பதை திராவிடர்களின் எதிரிகளாகிய ஆரியர்கள் - பார்ப்பனர்கள் - துக்ளக் வட்டாரத்தினர் தெரிந்து வைத்துள்ளனர். அதனால் தான் திராவிடர் திராவிடம் என்ற சொற்களைக் கேட்ட மாத்திரத்திலேயே, படித்த மாத்திரத்திலேயே புழுங்கிச் சாகிறார்கள்.

இன்றுள்ள இளைஞர்கள் திராவிட இனம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார்களாம். ஒரு வகையில் உண்மைதான். அந்த உணர்வை இந்த இளைஞர்கள் பெற்றிருப்பதால் தான் துக்ளக்குகள் விலை போகின்றன. திராவிட இனவுணர்வு பெறாத காரணத்தால்தான் நண்பர் யார்? எதிரிகள் யார் என்ற அடையாளம் தெரியாமல் அரசியலில் வாக்களிப்பதில் கூடத் தவறு செய்து விடுகிறார்கள்.

துக்ளக் ஏடு கிண்டல் செய்யும் அளவுக்கு நம் மக்கள் இனவுணர்வற்றுப் போயிருக்கிறார்கள் என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம். இதற்குப் பதிலடி என்பது - நம் மக்களிடம் திராவிட இனவுணர்வை வலுவாக அழுத்தம் திருத்தமாக ஊட்டுவதுதான் - அதற்காகப் பல வகைகளிலும் பிரச்சாரம் செய்வதுதான்.

திராவிடம்பற்றி கலைஞர் பேசினால் அக்னி மயமாகி, நச்சுத் துண்டுகளை எழுத்தாக்கி, வியாபாரம் செய்யும் துக்ளக் பிராமணர்கள் சங்கம் வைத்து தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று பகிரங்கமாகத் தீர்மானம் போடுகிறார்களே, அப்பொழுது அவர்களை நோக்கி ஏனப்பா, திராவிடத்தை உசுப்பிவிட ஆசைப்படுகிறீர்கள்? என்ற வினாவை எழுப்பி இருக்க வேண்டாமா?

திராவிடம், திராவிடர் என்ற மாத்திரத்திலேயே அந்த இடத்திலேயே அதனை அமுக்கி விட வேண்டும்; அது வளர்ந்தால் தங்களுக்கு ஆபத்து, மகா ஆபத்து என்பதை நன்கு உணர்ந்தவர்கள் அவர்களாயிற்றே!

ஆதி சங்கரர், திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று வருணித்திருக்கிறாரே. எப்பொழுதாவது துக்ளக் வகையறாக்கள் அதற்கு மாற்றுக் கருத்துகள் சொன்னதுண்டா?
நாட்டுப் பண்ணாகிய ஜனகனமன பாடலில் திராவிட உத்கலவங்கா என்று நோபெல் பரிசு பெற்ற கவி இரவீந்திரநாத் தாகூர் குறிப்பிட்டுள்ளாரே - அதுபற்றி விமர்சித்ததுண்டா துக்ளக்?

மொகஞ்சதாரே, ஹரப்பா நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று அய்ராவதம் மகாதேவன் (அய்யர்) போன்றோர் சொன்னபோது இவர்களின் பேனாக்கள், முனை மழுங்கிப் போய் விட்டனவா?

சிந்து நாகரிகத்தில் திராவிடர்களின் எருதைக் குதிரையாக கணினி மூலம் மாற்றி, அது ஆரியர் நாகரிகம் என்று காட்டியதே பா.ஜ.க. ஆட்சி. அதன் பொருள் என்ன?

திராவிடர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள், ஆரியர்கள் வடமேற்குக் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் ஆடு மாடுகளை ஓட்டி வந்தவர்கள் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் வகுப்புப் புத்தகத்தில் இடம் பெற்றதை யெல்லாம் சாமர்த்தியமாகப் பார்ப்பனர்கள் நீக்கி விட்டனர் - அந்தத் தைரியத்தில்தான் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறது துக்ளக்; இதனை சவாலாக எடுத்துக் கொண்டு இனவுணர்வு வெப்பத்தை எழுப்புவதுதான் சரியான பதிலடியாக இருக்க முடியும் - அதனைச் செய்வோம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...