Thursday, October 29, 2015

ஈரோடு போவதற்கு துணிவு - தெளிவு - கொள்கை தேவை

ஈரோடு போவதற்கு துணிவு - தெளிவு - கொள்கை தேவை
அதற்கு எடுத்துக்காட்டானவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் விழா - நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை

சென்னை, அக். 29- ஊரோடு போனவர்கள் பலர் உண்டு. இவரோ ஈரோடு போனவர். ஊரோடு போவதற்குத் துணிவு தேவையில்லை, அறிவு தேவையில்லை. அது வழமையாக நடப்பது. ஆனால், ஈரோடு போவதற்குத்தான் துணிவும் தேவை, தெளிவும் தேவை, கொள்கையும் தேவை. அந்த வகையில் அவர் தனி எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அற்புதமான கவிஞராவார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்  17.10.2015 அன்று சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களது பிறந்த நாள் விழா - நூல் வெளி யீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பழையவற்றைப் புரட்டிப் போட்டு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும்
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய புரட்சிக் கவிஞர் வழியிலே, பாரதிதாசன் பரம்பரை என்று உருவாக் கப்பட்டஅந்தப் பரம்பரையில், தலைமாணாக்கர் என்ற பெருமையை இன்றைக்கும் தக்க வைத்துக்கொண்டு, தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்பதை எடுத்துக் காட்டக்கூடிய வகையில், அதே புதுவையைச் சார்ந்த நண்பர்கள், இதோ ஒரு மகாகவி என்று சொல்லக்கூடிய அளவிற்கு உயர்ந்து இன்றைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய எங்கள் புரட்சியின் பூபாளம் மட்டுமல்ல, புரட்சிக்கு மிகப்பெரிய அளவிற்கு ஒரு எரிமலையை கக்கக் கூடியதைப்போல, தன் எழுத்துக்களை வடிவமைத்து, ஒரு புதிய சமுதாயத்தை, பழையவற்றைப் புரட்டிப் போட்டு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளில் மிகப்பெரிய பகுதியை செலவழித்து, மேலும் உற்சாகத்தோடு பணியாற்றுவதற்கு ஊக்கப்படுத்துகின்ற விழாவாக அமைந்துள்ள இந்த விழாவின் நாயகர் அன்பிற்குரிய அருமைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களே,
இந்த விழாவின் தலைவர் அவர்கள், நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்களே, இந்த விழாவிலே கலந்துகொண்டு உரையாற்றிய நம்முடைய நீதியரசர் அவர்களே, அடுத்து உரையாற்றவிருக்கின்ற சிலம்பொலி யார் அவர்களே, உரையாற்றி விடைபெற்றுச் சென்ற கவிஞர் இன்குலாப் அவர்களே, அருமைத் தோழர் மகேந்திரன் அவர்களே, மற்றும் இங்கே மேடையிலும், எதிரிலும் அமர்ந்துள்ள அருமைப் பெரியோர்களே,
இலக்கிய சந்தையிலே என்று நம்முடைய இசைவாணர் பாடியது நினைவிற்கு வருகிறது
எதிரில் ஒரு பெரிய இலக்கிய சந்தையே இருக்கிறது. சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள். தனித்தனியே சொல்லவேண்டுமானால், இலக்கிய சந்தையிலே என்று நம்முடைய இசைவாணர் பாடியது எனக்கு நன்றாக நினை வில் இருக்கிறது. அவ்வளவு பெரிய ஆற்றலாளர்கள். எனவே, இவர்கள் மத்தியில் ஈரோடு தமிழன்பன் அவர் களுடைய இலக்கிய பெருமைகள், கவிதைகளினுடைய கவித்துவம் இவற்றையெல்லாம் சொல்வதைவிட, அவர் எப்படி மாறுபட்டவர் என்பதைச் சொல்லவிருக்கிறேன்.
எனக்கடுத்து இரண்டு பெருமக்கள் பேசவிருக்கிறார் கள். சிலம்பொலி அணிந்துரையாளர். அவர் அணிந்துரை தராத நூலே கிடையாது. எனவே, இந்த விழாவில்கூட அவர் அணிந்துரையாளராகத்தான் வந்திருக்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி
அவள் அணிந்திராத அணியாவாள்
அவள் அறிந்திராத அறிவாவார்
தந்தை பெரியார்
என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.
அந்த அணியை தன்னுடைய அணியாக மாற்றிக் கொண்டவர் ஈரோடு தமிழன்பன். எனவேதான், ஊரோடு போனவர்கள் பலர் உண்டு. இவரோ ஈரோடு போனவர். ஊரோடு போவதற்குத் துணிவு தேவையில்லை, அறிவு தேவையில்லை. அது வழமையாக நடப்பது. ஆனால், ஈரோடு போவதற்குத்தான் துணிவும் தேவை, தெளிவும் தேவை, கொள்கையும் தேவை. அந்த வகையில் அவர் தனி எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அற்புதமான கவிஞரா வார்.
புதிய சுருதியில் பூபாளம்
அவருடைய நூல்கள் சிறப்பானவை என்பதை எடுத்துச் சொல்வதோடு, அவருடைய கவிதை நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில், புதிய சுருதியில் பூபாளம் என்கிற கவிதையில்,
ஈரோடு தமிழன்பன் எழுதுகிறார். அவர் எங்களை எப்படி ஈர்த்திருக்கிறார். ஈரோடு அவருக்குப் பெயருக்கு முன்னால் அல்ல, ஈரோடு என்பது அவரது மூச்சு. அதைத் தான் அவர் பேச்சாக, கவிதையாக வடித்திருக்கிறார். அவரைப் பாராட்ட அல்ல. பெரியார் அன்பர்கள் சார்பாக, பெரியார் தொண்டர்கள் சார்பாக அவருக்கு நன்றி கூற வந் திருக்கிறேன். நான் பெரியார் தொண்டனின் தொண்டன்.
பல பேர் பல திவ்ய சேத்திரங்களின் பெயரை வைத் திருக்கிறார்கள். ஆனால், இவரோ சென்னிமலையில் பிறந்தவர்; ஈரோட்டிற்கு நேரிடையாகத் தொடர்பு இல்லை என்றாலும், ஆனால், கொள்கையில் நான் என்றும் ஈரோட் டுக்காரன் என்பதைக் காட்டினார். ஈரோட்டுக்காரர் என் பதை மத்திய அரசாங்கமே அடையாளம் கண்டிருக்கிறது. எப்பொழுது? நாங்கள் எல்லாம் மிசா காலத்தில் சிறையில் இருந்த காலத்தில். அவர் எங்களோடு சிறைக்கு வருவார் என்று எதிர்பார்த்தோம். நல்ல வாய்ப்பாக அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை. செய்திகள் நிறைவடைந்தன என்ற சொல்லுக்கு இவர்தான் சொந்தக்காரர்!
அவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். செய்திகள் நிறைவடைந்தன என்ற சொல்லுக்கு இவர்தான் அதற்குக் கர்த்தாவாக இருக்கக்கூடியவர் என்பது உங்களுக்குத் தெரியும். செய்திகள் முடிந்தது, செய்திகள் முடிந்தது என்றுதான் அதற்குமுன் சொல்வார்கள். ஈரோடு தமிழன்பன் அவர்கள் எப்படி ஈரோட்டிற்கு உரியவர் என்பதற்கு அடையாளமே, நிறைவு செய்வது எப்பொழுதுமே ஈரோடாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த வாய்ப்பில் அவர்கள் சொல்கிறார்கள்,
உயர்சாதியான் வீட்டில்
ஒரு குழந்தை பிறந்தால்....
உச்ச நீதிமன்றத்தில்
ஒரு நாற்காலி
துடைத்து வைக்கப்படுகிறது.
கவிஞர்கள் கவி பாடினால், ஒருமுறை சொன்னால் போதாது; மற்றவர்களுக்கும் அது ஆழமாகப் பதிய வேண்டும். ஆகவேதான், இரண்டு, மூன்று முறை சொல் வார்கள். எனவேதான், நான் மீண்டும் அந்த வரிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
பேனாவை சாட்டையாக சுழற்றத் தெரிந்த கவிஞர்! சமூகநீதிக்காக எப்படிப்பட்ட ஒரு சாட்டையடி கொடுக்கிறார். கவிதையைப் பொறுத்தவரையில் வெறும் எழுத்துக்கள் அல்ல அவரிடமிருந்து வருவது. பேனாவை சாட்டையாக சுழற்றத் தெரிந்த கவிஞர் அவர். புரட்சிக் கவிஞர் அவர்களுக்குப் பிறகு. அந்த வகையில் மிக அருமையாக சொல்கிறார்.
உயர்சாதியான் வீட்டில்
ஒரு குழந்தை பிறந்தால்....
உச்ச நீதிமன்றத்தில்
ஒரு நாற்காலி
துடைத்து வைக்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்டவன் குடிசையில்
ஒரு குழந்தை பிறந்தால் - அந்தத்
தாயின் கனவில் புதிதாய் ஒரு
கழிப்பறை திறக்கப்படுகிறது
எவ்வளவு பெரிய கொடுமை. இதைவிட அழகாக சொல்ல முடியுமா? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த மனுதர்மம் இன்றைக்கும் எப்படி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் நம்முடைய நீதி நாயகம் அவர்கள் சொன்னார்கள்.
பெரியார் மண்ணின் பாரம்பரியத்தைக் காக்கக்கூடிய காவலர்கள்
நாம் எதை உண்ணுவது? எதை எண்ணுவது? இரண் டையுமே யாரோ நிர்ணயிக்கப் போகிறார்கள்; நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லையானால், நீங்கள் கல்புர் கிகளாக ஆகவேண்டும் என்பதுதான் இன்றைய நிலை என்று சொன்னால், அதை எதிர்த்துச் சொல்லக்கூடிய ஒரு மண் இருக்கிறது என்று சொன்னால், அது இந்தப் பெரியார் மண் என்ற பெருமைக்குரிய ஒன்று. அந்தப் பெரியார் மண்ணின் பாரம்பரியத்தைக் காக்கக்கூடிய காவலர்களில் இன்றைக்குத் தலைசிறந்த கவிஞர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம்தான் ஈரோடு தமிழன்பன் அவர்களாவார்கள்.
அவர்களுக்கு 81 வயது. சென்ற ஆண்டு இதே நாளில், அவருடைய 80 ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளவேண்டியவர்கள் அத்துணை பேரும் கலந்து கொள்ள முடியாமல், இன்றைக்குக் கலந்துகொண்டிருக் கிறோம் என்றால், ஒரு செய்தியை சொல்லவேண்டும்.
தடைக்கற்கள் உண்டென்றாலும்
தாங்கும் தாண்டும் தடந்தோள்களும் உண்டு.
அன்றைக்கு யார் யார் வரவிருந்தார்களோ, அத்த னைப் பேரும் இன்றைக்கு வந்திருக்கிறார்கள். எனவே, எப்பொழுதும் அவரோடு நாங்கள் இருப்போம்; அவர் எப்பொழுதும் எங்களோடு இருப்பார்.
ஆகவேதான், அவரைப் பாராட்டுவதற்கு நியாயங் களும், தேவைகளும், காரணங்களும் நிச்சயமாக உண்டு.
அந்த வகையில், அந்த நூலில் இன்னொரு பகுதி யைச் சொல்கிறார்,
கக்கூஸ் கழுவவரும்
பெண்ணைக்
கணக்குப் பண்ணிக்
காமம் கழிக்கின்ற
ஆசார சீலர்கள் - அவள்
தொட்ட பாத்திரத்தைத்
தொடுவதன் முன்
தூத்தம் தெளிப்பார்கள்
அதே நூலில் இன்னொரு இடத்தில்,
இன்றைய தேவை!
மதங்களின்
மகுடங்களை உருக்கி,
மனங்களைத் திறக்கும்
சாவிகள் செய்வோம்!
மனிதமே - இனி
மதம்!
வாழ்க்கையின் பிரகாரங்களில்
வாட்டும் பிரச்சினைகளுக்கு
விடிவு காண்பதே புதிய
வேள்வி!
இதுதான் இன்றைய தேவை. இல்லையானால், மனிதமே இனி மதமாகாவிட்டால், மனிதனுக்கு இப்பொழுது பிடித்திருக்கின்ற மதம் இருக்கிறதே, அது சாதாரணமாக அடங்காது, ஒடுங்காது!
ஆகவேதான், இப்படிப்பட்ட சிந்தனையாளர்கள் தேவை. சமுதாயத்திற்கு இவர்களுடைய மிகப்பெரிய சிந்த னைகள் தேவை. அதுமட்டுமல்ல, இங்கே சிறப்பாக ஒரு செய்தியைச் சொல்லுகிறார், இப்பொழுது வெளியிடப் பட்டிருக்கின்ற நூலில்!
மரணம் இருட்டறையல்ல
வெளிச்சத்தை விட்டுச் செல்லும் என்பதை
இரத்தம் காயத்தை அல்ல
காரியத்தை விட்டுச் செல்லும் என்பதை
போராட்டம் மண்டியிடுவதை அல்ல
மானத்தை விட்டுச் செல்லும் என்பதை
எழுத வந்த வரலாற்றுக்குப் பெயர்
உன் பெயர் பிரபாகரன்
என்று எழுதுகிறார்.
அதுமட்டுமல்ல,
கனலினும் நெருப்பு
காலடி எடுத்து வைத்து
நடந்து வந்ததைப்போல்
எம்சமகாலத்துள் வந்த உன்னை
போர் மரபு புறப்பாட்டுத்
தமிழ் நதிகள் தம்மைக் கடந்து தாவி வந்து தழுவிக்கொண்டன
நட்சத்திரத்திலிருந்து
நட்சத்திரத்திற்குப் போய்
ஈழத்தின் ரத்த நாட்கள்
உன் பெயரை
ஒளியில் செதுக்கி வைத்தன
இப்படி ஏராளமாக அந்த நூலில் சொல்லியிருக்கிறார். அந்த நூல் ஒரு அற்புதமான ஒரு தலைசிறந்த அவர்களே விரும்பக்கூடிய அளவிற்கு அருமையான நூலாகும்.
கருணை மறவர் தந்தை பெரியார் என்று அறிவா சானைப் பற்றி மிக அற்புதமான ஒரு படப்பிடிப்பு!
மனிதனின் எந்த உரையாடலில்
விடுதலையும், விடுமுறைப் போடாத் தன்மானமும்
பல பேர் வருமானத்திற்காக தன்மானத்தையும் இழக் கிறார்கள்; இனமானத்தையும் இழக்கிறார்கள். இந்த நிலை யில், இவருடைய தன்மானம் எப்படிப்பட்டது என்றால், ஒரு நேரங்கூட விடுமுறைப் போட்டதே கிடையாது. இது போன்று சிந்தித்த ஒரு எழுத்தாளர், கவிஞர் இதுவரையில் தமிழ்நாட்டில் நான் அறிந்தவரையில், ஈரோடு தமிழன்ப னைத் தவிர வேறு எவரும் கிடையாது. அவரை ஒருவேளை அவரேதான் மிஞ்சக்கூடிய நிலை ஏற்படும் இனிமேல்.
குனிவறியா ஒளிபடைக்கின்றனவோ
அந்த உரையாடலில்தான்
அவனுடைய தாய்மொழிச் சிறகுகள்
விண்ணின் விரிவோடு ஒப்பந்தம் போடும்
அந்த உரையாடலைத்தான்
தந்தை பெரியார்
முதன்முதலாய்த் தமிழர்களுக்காக நிகழ்த்தினார்
அவர் தமிழோடு நடத்திய அத்தனையும்
அக்கறைக் கலவரங்கள்
உலகனாய் இருப்பது சுலபம்;
கலகனாய் இருப்பது அதிசயம்
எவ்வளவு அற்புதமான சொல்லாக்கம்.
அவருடைய கவிதையைப்பற்றிச் சொல்லும்பொழுது மணிகண்டன் அவர்கள் சொன்னார்கள், உலகனாய், இந்தியனாய் என்று வரிசையாக அவர்கள் சொன்னார்கள். அவர் உலகனாய் மட்டும் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. மிகப்பெரிய கலகனாய் மாறியிருக்கிறார். உலகனாய் இருப்பது சுலபம். கலகனாய் இருப்பது அதிசயம். அந்த வகையில்தான் அவர் இன்றைக்கு ஒரு நல்ல கலகன். அந்த வகையிலேதான் அவர் பாராட்டுக்குரியவர்.
உயர்வுகளை நோக்கி
தமிழனை, தமிழை உந்தித் தள்ளின
இச்சகம் பேசிகளின்
ஒப்புக்கான உறவுகள் ஒதுங்கி நின்று
உள்ளுக்குள் வெந்தன
தமிழ்ச்சொற்கள் காவியங்களை
கதைகளை, பாடல்களை
எத்தனையோ வகைகளில்
எவ்வளவோ காலமாய் சந்தித்திருக்கின்றன
துணிவுமிக்க
வெட்டு ஒன்று; துண்டிரண்டு
வெப்ப நெருப்புப் பிம்பமான
சிந்தனைகளைத் தந்தை பெரியாரின்
அறிவுத் தாழ்வாரத்தில்தான்
முதன்முதலாய்ச் சந்தித்தன
அறிவோடு நட்பு பாராட்ட முடிந்த அய்யா
அறியாமையின் தேநீர் விருந்து
அழைப்புகளை ஒருபோதும்
ஏற்க முடியவில்லை; எப்படி
முடியும் அது?
இருள் மண்டபத்தில்
இரவு நடத்தும் நட்சத்திரத் திருவிழாவிற்கு
வருகை தர ஒப்புவானா சூரியன்?
ஒப்பினால், பகல்களை யார் பயிரிடுவது
பாதுகாப்பது
இப்படி எவ்வளவோ சுவையான, அற்புதமான புதிய கோணத்தில் அவர்கள் படைத்திருக்கிறார்கள்.
தொடருங்கள் உங்கள் பயணத்தை - துணைக்கு நிற்கிறோம் நாங்கள்!
அப்படிப்பட்ட ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு 81 வயது என்று சொன்னாலும், இங்கே உரையாற்றிய டாக்டர் சொக்கலிங்கம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வயதைக் குறைத்துச் சொன்னார்கள். டாக்டர் அவர்களுக்கு நன்றி. நாங்கள் இன்னும் அதிகமாகப் பாடுபடுவதற்கு நீங்கள் நிச் சயமாக இருக்கவேண்டும். இதுவரையில் உங்களிடத்தில் யாரும் வராதவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று சொன்னால், இனி வரமாட்டார்கள் என்கிற உணர்வை இந்த விழா தந்திருக்கும் என்று நாங்கள் நிச்சயமாகக் கருதுகி றோம்.
அந்த வகையில் 81 அல்ல; கவிஞர் ஈரோடு தமிழன் பன் அவர்களே, 18 என்று மாற்றிப் படியுங்கள், சரியாக இருக்கும். தொடருங்கள் உங்கள் பயணத்தை - துணைக்கு நிற்கிறோம் நாங்கள்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...