Wednesday, December 4, 2013

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன?



சட்டம் - ஒழுங்கு கடும் பாதிப்பு - ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இரட்டை வேடம்!

தி.மு.க.வுக்கே வாக்களித்து தடம்புரளாமல் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவீர்!

ஏற்காடு தொகுதி மக்களுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!


சங்கர்ராமன் படுகொலை வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - கி.வீரமணி அறிக்கை

நடக்கவிருக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கே வாக்களித்து ஜனநாயகம் தடம் புரளாமல் காப்பாற்றவேண்டும் என்று ஏற்காடு தொகுதி வாக் காளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதியன்று, ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற விருக்கிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், உண்மையான எதிர்க்கட்சி தி.மு.க.தான் என்று ஜன நாயகத்தைக் காக்கும் வகையில் நாட்டுக்கு அறிவிக்கும் வகையில் தி.மு.க.வும் போட்டியிட களத்தில் இறங்கி யுள்ளன.

இடைத்தேர்தல் முடிவு

ஒரு இடைத்தேர்தலின் முடிவு ஆட்சியை மாற்றப் போவதில்லை; ஆனால், ஜனநாயகத்தின் முக்கிய தேவை யான வாக்காளர்களின் மனநிலை எப்படி ஆட்சியின் பால் உள்ளது என்பதற்கான எடைமேடை அல்லவா?

செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்று சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது.

இதில் அவரது ஆட்சியில் ஏற்கெனவே பொதுத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டுள்ளனவா? ஏற்கெனவே வாக்களித்த மக்களின் நம்பிக்கை இவ்வாட்சியின்மீது அதேபோல் உள்ளதா, குறைந்திருக்கிறதா என்று அளந்து பார்க்கும் அரசியல் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.

அதேநேரத்தில், இது ஒரு சம போட்டி என்றும் கருதிட முடியாத அளவுக்கு, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் பற்றிய ஏராளமான புகார்கள் பறப்பதை வைத்துப் பார்க்கையில், நிச்சயம் சமவாய்ப்பில் லாத போட்டி என்ற நிலையே உள்ளது.

மக்களின் அதிருப்தி அலை கரைபுரண்டு ஓடினாலும், அதைப் பல வகையிலும் - பண பலம், இன பலம், பத் திரிகை பலம், அதிகாரவர்க்க பலம் இவை ஆளுங் கட்சியினருக்கு உள்ள ஒரு கூடுதல் வாய்ப்பு.

அவையெல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் ஜன நாயகக் கடமையைச் செய்ய முன்வந்துள்ள தி.மு.க. முடிவும் இடையறாத முயற்சிகளும் பாராட்டத்தக்கவை.

எதிர்க்கட்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள கட்சியோ, தேசியக் கட்சிகள் என்பவைகளோ தேர்தலில் போட்டி யிட்டு, ஆளுங்கட்சியின் பல்வேறு வசதி வாய்ப்புகளோடு ஈடுகொடுத்து போட்டி போட முடியாது என்று தயங்கி, பின்வாங்கிவிட்ட நிலையில், ஒதுங்கிக் கொண்டுவிட்டன. தி.மு.க. முன்வந்து களத்தில் துணிவுடன் இறங்கி தனது தேர்தல் பணிகளை எதிர்நீச்சலாக செய்து வருகிறது!

கடந்த காலத்தில் ஆளும் கட்சியின் சாதனைகள் என்ன?

ஆளுங்கட்சியின் ஆளுமை கடந்த ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்று சீர்தூக்கிப் பார்த்து, வாக் களிக்க வேண்டிய கடமை ஏற்காடு வாக்காளர்களுக்கு உண்டு.

1. ஆட்சியை ஏற்ற மூன்றே மாதங்களில் மின்தட்டுப்பாட்டை - மின்வெட்டை நீக்குவோம் என்று வாக்குறுதி தந்து வந்த ஆட்சியில் இன்றுள்ள மின்வசதி எப்படி உள்ளது?

2 மணிநேர மின்வெட்டு அதுவும் சிலகாலம் ஏற்பட்டதற்காக தி.மு.க.வை அதற்காக குறை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அவர்களது ஆட்சியில் வெளியூர்களில் மூன்று மணிமுதல் 10 மணிநேரம்வரை மின்வெட்டு; அதுவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரங்கள்!

விவசாயிகள், வீட்டு உபயோகிப்பாளர்கள் இருட்டு வேதனை ஒருபுறம் என்றால்,  குறு, சிறு தொழில் செய்வோர் குறிப்பாக கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலை இழந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் துயரமும், துன்பமும் நாளும் குறையாமல் பெருகிய வண்ணம் உள்ளது!

தொழிற்சாலை நடத்துவோர் கோடிக்கணக்கில் முதலீடு - கடன் வாங்கிச் செய்யும் எங்களது இயந்திரங் கள் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக ஓட்டப்பட்டால்தான் பழுதடையாமல் இருக்கும்; இப்பொழுது விட்டுவிட்டு வரும் மின்வெட்டு காரணமாக அந்த இயந்திரங்களும்கூட பழுதாகி, கூடுதல் இழப்பு ஏற்படும் அபாயம் பெருகுகிறது என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார்கள்.

சில மாதங்கள்முன் மின் மிகை மாநிலமாகும் விரைவில் என்று கூறப்பட்டது; ஆனால், இப்போது ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல பல மணிநேரம் மின்வெட்டு, இருட்டு - அதன் காரணமாக பெருகிடும் திருட்டு, கொள்ளைகள், கொலைகள் - என்னே கொடுமை!

தமிழக அரசு இதற்கு ஒரு புது காரணம் கூற முற்பட் டுள்ளது; மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை; தமிழக அரசுக்கு எதிரான சதி என்றெல்லாம் கூறி, மத்திய அரசு மீது பழிபோடுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதாகாது.

மேட்டூர், தூத்துக்குடி முதலிய பல மின் நிலையங்கள் மத்திய அரசு நிர்வகிப்பதன்று. கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது தற்போது உருவான ஒன்று - அது இன்னும் முழுமையான உற்பத்தி பெருக்கத்திற்கு வராத நிலை. அதுவே ஏற்கத்தக்கக் காரணம் ஆகிவிடுமா?

ஒன்று முந்தைய தி.மு.க. ஆட்சிமீது குற்றச்சாற்று; இன்றேல் மத்திய அரசின்மீது பழி. இவைகளால் மக்கள் குறைகளை எவ்வளவு காலம் திசை திருப்ப முடியும்?

வளர்ச்சித் திட்டங்களுக்காக மற்ற மாநிலங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வாதாடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன?
அடுத்தவர்மீது பழிபோடுவதா?

ஏற்கெனவே பணி தொடங்கப்பட்ட திட்டங்களைக் கூட, ஒத்துழைப்புத் தராது முடக்கப்படும் நிலையை ஒரு மாநில அரசே செய்யும் அவலம் - இதுவரை கேள்விப்படாத ஒன்று அல்லவா?

1885 கோடி ரூபாய் திட்டமான மதுரவாயல் பறக்கும் திட்டம்மூலம், சென்னை துறைமுகத் திலிருந்து நேரடியாக விரைந்து சரக்குகள் - சாலைப் போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் அத்திட்டத்திற்கு இதுவரை 900 கோடி செலவிட்ட நிலையில், தமிழக அரசால் இது தடை செய்யப்பட்டு, இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடப் பட்டுள்ளது. இதுதான் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலா?

பிரதமர் மன்மோகன்சிங் தனது ஆலோசகர் நாயர் தலைமையில் ஒரு குழு, தமிழக முதலமைச்சரைச் சந்தித்து, இத்திட்டத்திற்கு ஒப்புதலை விரைவுபடுத்த கேட்டுக்கொண்டது - விழலுக்கு இரைத்த நீர்தானா?

2. தமிழகத்தில் பத்தாயிரம் கோடிக்கான நெடுஞ் சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழையாமையால் ஏராளமாய் முடங்கிக் கிடக்கின்ற அவலம் மற்றொரு புறம்! சேது சமுத்திரத் திட்டத்தில் அந்தர்பல்டி!

3. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஏன் மத்திய அரசு விரைவுபடுத்தவில்லை என்று இரண்டு தேர்தல் அறிக்கைகளில் கேள்வி கேட்டு துளைத்து, இப்போது தி.மு.க.வின் இடைவிடா முயற்சியால் அத்திட்டத்திற்கு ரூ.800 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டு, இன்னும் 12 கிலோ மீட்டர்தான் முடிவடைய இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடையாணை வாங்கி, மணல் திட்டு - ஆதாம் பாலம் -என்று முன்பு சொன்னதையே மாற்றிக் கொண்டு, இப்போது இராமர் சேது பாலம் அதை உடைக்கக் கூடாது என்றும், மீன்வளப் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று இல்லாத காரணத்தைக் காட்டி, தென்மாவட்டங்களின் பெரும் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கி வைத்தவர்கள்தான் வாக்குகளை அள்ள ஏற்காடு வருகிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு மோசமோ மோசம்!

சட்டம் ஒழுங்கு என்பது ஒரு ஆட்சிக்கு முக்கியம். கொலை, கொள்ளை, செயின் அறுப்பு என்பவை நிகழாத நாள்கள் உண்டா?

எனது ஆட்சியில் கொள்ளையர்கள், திருடர்கள் ஆந்திராவிற்கு ஓடிப் போய்விட்டார்கள் என்று முதல்வர் கூறியதை, மக்களால் மறக்க முடியுமா? இப்போது என்ன நிலை?

மூன்று ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத கொலைகள் திருச்சி இராமஜெயம், மதுரை பொட்டு சுரேஷ் - இப்படி பல - மக்களிடையே உள்ள கேள்விகள் இவை!

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் இரட்டை வேடம்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கோ பெரும் வாய்ப்பூட்டு! குரல்வளை நெரிக்கப்படுவதுபோல பேச்சுரிமை மறுப்பு - மீறினால் வெளியே தள்ளுவதும், கடும் நடவடிக்கை எடுப்பதும்!

சட்டமன்றத்தில் இல்லாதவர்கள், பொறுப்பான தலைவர்கள்மீது தரக்குறைவான தாக்குதல் விமர் சனங்கள் - அதற்காக அத்தகைய சாதனையாளர் களுக்கு பதவிப் பரிசுகள்! தமிழ்நாட்டு ஜனநாயகத் தின்(?) விசித்திரங்கள் இவை!

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் இரண்டு தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்த அ.தி.மு.க. அரசு, தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து, எதிர்த்தவர்கள்மீது வழக்கைப் போட்டு சிறைக்கு அனுப்பியது ஏன்?

இது இரட்டை நிலைப்பாடு, இரட்டை வேடம் என்பது உலகத் தமிழர்களுக்கு விளங்கிவிட்டதே! வாக்காளர் களுக்கு - ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உண்மையாக பாடுபட்டு வருபவர்கள் யார் என்பது புரிந்துவிட வில்லையா?

விரிக்கின் பெருகும் என விடுத்து, ஏற்காடு வாக்காளர்களே,

ஜனநாயகம் காக்க, ஆளுங்கட்சி சரியான முறையில் ஆட்சி செய்ய, நீங்கள் மற்ற சபலங்களுக்கு ஆளாகாமல், தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தால், ஆளுங்கட்சி சற்று சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

தி.மு.க.வுக்கே வாக்களிப்பீர்!

தி.மு.க.வை வெற்றி பெறச் செய்வது, தி.மு.க.வுக்காக மட்டுமல்ல; ஜனநாயகம் காக்க, மக்கள் தீர்ப்பின்மூலம், இடிப்பாரை மக்கள் தீர்ப்பாக அது அமைந்து தடம்புரளும் ஜனநாயகம் சற்று நிதானித்துத் தடத்தில் எஞ்சிய காலத்தில் பயணிக்க உதவியதாக அமையக்கூடும் என்பதால் கூறுகிறோம்.

இன்றேல், நட்டம் தி.மு.க.வுக்கு அல்ல; தமிழர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு - ஜனநாயகத்திற்கு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!

சென்னை    தலைவர்,
28.11.2013    திராவிடர் கழகம்.

குறிப்பு: இதனைத் துண்டறிக்கையாக ஏற்காடு தொகுதி திராவிடர் கழகத் தோழர்கள் வழங்குவார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...