கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய
மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தது. அதில்
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட 49 மருந்துகள்
தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.
அதில் ஒரு மருந்து போலியானது என்பதும்
தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் விற்பனை
செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில
மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை
எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 1,336
மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 1,286 மருந்துகளின் தரம்
உறுதி செய்யப்பட்டுள்ளது.
தரமற்றவையாக அறிவிக்கப்பட்ட மருந்துகளில்
பெரும்பாலானவை இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மகாராட்டிரம்
உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவைப் பொருத்தவரை
தமிழகத்தின் திருவள்ளூர் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட 3
மருந்துகளும், தெலங்கானாவில் தயாரிக்கப்பட்ட இரு மருந்துகளும் தரமற்றவை என
வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட மருந்துகளின் விவரங்களை,
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளப் பக்கத்தில்
வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருந்துகள்
பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அதில், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கையும்
எடுக்கப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment